.

புரோசாந்தா சக்கரவர்த்தி எழுதிய பரிணாமத்தின் ஊடாக வாழ்க்கையின் விளக்கம் என்னும் புத்தகமானது டார்வினின் பரிணாம வளர்ச்சிக் கோட்பாட்டை சாதாரண மக்களிற்கு விளங்கும் வகையில்  எளிய வடிவில் விளக்குகிறது.

டியூக் பல்கலைக்கழக இயற்கை விஞ்ஞானத் துறைத் தலைவர் முகம்மது நூர் குறிப்பிட்டுள்ளதைப் போல இந் நூல் பரிணாம வளர்ச்சி எவ்வாறு வேலை செய்கிறது என்பதை இந்த நூல் சுவாரஸ்யமாக விபரிப்பதோடு அது குறித்து நிலவுகிற தவறான புரிதல்களைப் பற்றியும் எடுத்துரைக்கிறது.இனப்பாகுபாடு என்பது மனிதனால் ஏற்படுத்தப்பட்டதே தவிர உயிரியல்ரீதியானதல்ல என்பதையும் இது நமக்குப் புரிய வைக்கிறது.

இதே போல நூலாசிரியர் ஹெலன் ஸ்கேல்ஸ் இந்த நூலைப் பற்றிக் கூறும் போது புரோசாந்த சக்கரவர்த்தி பரிணாம விருட்சத்தின் ஊடாக நம்மை ஏற்றி பரிணாமத்தை பற்றி நமக்குப் புரிய வைக்கிறார்.கல்வியாளரான அவர் முக்கியமாக நம்முடைய சிந்தனையைத் தூண்டுகிறார்.எது பரிணாம வளர்ச்சி எது பரிணாம வளர்ச்சி இல்லை,அது எவ்வாறு செயற்படுகிறது அதைத் தெரிந்து கொள்வது ஏன் இன்றியமையாதது குறிப்பாக இன்றைய பிளவுபட்டுள்ள சூழலில் அது முக்கியமானது என்பதை வெளிச்சம் போட்டுக் காட்டுகிறார்.இந்த உலகில் உயிரினங்கள் எவ்வாறு தோன்றின வாழ்க்கை எப்படி மலர்ந்தது என்பதைத் தெரிந்து கொள்ள விரும்பும் எவ்வொருவரும் இதைப் படிக்க வேண்டும் என்கிறார்.


சக்கரவர்த்தி,பரிணாம வளர்ச்சி குறித்த உரையாடல்களோடு தன்னுடைய சுவாரசியமான வாழ்ச்கை அனுபவங்களையும் பிணைத்து இதில் கொடுத்துள்ளார்.இயற்கை தேர்ந்தெடுப்பு குறித்த கருத்தாடல்களிற்கு இது வலுச் சேர்க்கும்.சமுதாயத்தால் செயற்கையாக உருவாக்கப்பட்ட பாலின பேதம் போன்றவற்றை நியாயப்படுத்த இத்துறை எவ்வாறு தவறாகப் பயன்படுத்தப்படுகிறது என்பதை அவர் தோலுரித்துக் காட்டுகிறார்.சமூக மாற்றத்தை உள்ளடக்கிய ஒரு வளமானஉலகை வளர்த்தெடுப்பதில் ஈடுபட்டுள்ளவர்களிற்கு வழிகாட்டியாக இந் நூல் திகழும் என்கிறார் அமெரிக்க இயற்கை வரலாற்று அருங்காட்சியக உதவிக் காப்பாளர் ஜெசிக்கா வேர்.

பரிணாம வளர்ச்சி என்றால் என்ன என்று கேட்கும் போது குரங்கிலிருந்து மனிதன் வந்தான் என்று நாம் கூறி விட்டுச் செல்வோம் அப்போது அவர்களை மடக்க நினைக்கிற அதி மேதாவிகள் இப்போது ஏன் எந்தக் குரங்கும் மனிதாக மாறுவதில்லையே என்று நக்கலாகக் கேட்பார்கள்.அதை விட இப்போது குரங்கும் இருக்கிறது மனிதனும் இருக்கிறது எங்கே மனிதனாக மாறிய குரங்கு என்று தாம்தான் பத்திசாலித்தனமாகப் பேசுவதாக நினைத்துக் கூறுவர்.உண்மையில் இருவருக்குமே பரிணாம வளர்ச்சி பற்றிய சரியான புரிதல் இல்லை என்பதே உண்மையாகும்.

டார்வினின் கதை சித்திரக் கதையாக சில பக்கங்களுக்கு கொடுக்கப்பட்டிரு ப்பது புதிய முயற்சி.விலங்குகளுக்கு இடையே தன்பாலின ஈர்ப்பு இருப்பது பொதுவான ஒன்று என்பதும், அதன் வாயிலாக பரிணமித்த மனித இனத்திலும் சிலருக்கு அத்தகைய பண்புகள் இருப்பது ஒத்தியல்பு என்பதும் அறியப்படாத தகவல்கள்.

எலும்பு மீனின் முதுகெலும்புக்கும், மனிதனின் முதுகெலும்புக்குமான தொடர்பு குறித்த விவரங்களும், பரிணாமத்தின்படி நிலை வளர்ச்சியை கேள்வி பதிலாக அளித்திருப்பதும் மீள்வாசிப்புக்கு தகுதியானவை.

இந்த நூலாசிரியர் சக்கரவர்த்தி அமெரிக்காவிலுள்ள லூசியானா பல்கலைக் கழகத்தில் ஒரு பேராசிரியராகவும் அதே பல்கலைக்கழகத்தின் இயற்கை விஞ்ஞானத்தின் அருங்காட்சியகத்தின் காப்பாளாராகவும் பணியாற்றி வருகிறார்.உயிரியல் அமைப்பு முறையில் வல்லுனரான அவர் நன்னீர் மற்றும் உவர்நீர் மீன்களின் பரிணாமத்தைப் பற்றியும் உயிர் புவியியலைப் பற்றியும் ஆய்வுகள் செய்து கொண்டிருக்கிற ஒரு மீனியலாளருமாவார்.அவர் ஒரு இணையத்தளத்தினையும் பக்கத்தில் தன்னுடைய ஆய்வுக் கட்டுரைகளை Google  scholar எழுதியும் வருகிறார்.எம்முடைய சமகால பரிணாமவியல் விஞ்ஞானி என்பது குறிப்பிடத்தக்கது.

பல தரப்பட்ட நம்பிக்கைகளைக் கொண்ட பல விதமான மதங்கள் இருக்கின்றன.இந்த விதம் குறித்த நம்பிக்கை உலகம் படைக்கப்பட்ட விதம் மதத்திற்கு மதம் வேறுபடுகிறது.ஒன்றையொன்று ஏற்றுக் கொள்ளவதில்லை. என்னுடைய கடவுள்தான் படைத்தார் என்பதில் ஒவ்வொரு மதவாதியும் உறுதியாக நிற்கிறனர்.அதனை விடுத்து பரிணாமாக் கொள்கையை பள்ளிக் கூடங்களில் கற்றுக் கொடுப்பது குழந்தைகளின் எதிர்காலத்திற்கு நல்லதாகும்.

இயற்கை நிகழ்வுகள் குறித்த விவரிப்புகளைக் கடுமையான பரிசோதனை களுக்கு உட்படுத்தி,அவற்றால் தாக்குப்பிடித்து நிற்க முடிகிறதா என்பதை அறிவதே அறிவியலாகும்.ஆனால், எல்லாவற்றையும் கடவுள் செய்துவிட்டார் என்றும்,அவர்தான் எல்லாவற்றையும் கட்டுப்படுத்துகிறார் என்றும் கூறி விட்டப் பிறகு, பரிசோதனைகள் மேற்கொள்வதில் என்ன அர்த்தம் இருக்க முடியும்?பிறகு கல்விக்கூடங்கள் தாம் எதற்கு?விஷயங்களைத் தெரிந்து கொள்ள வேண்டும் என்ற ஆர்வம்தான் எதற்கு?சோதிக்கப்பட முடியாத மற்றும் நிரூபிக்கப்பட முடியாத விஷயங்களை விவரிப்பதற்கு மதங்கள் உங்களி டமிருந்து கண்மூடித்தனமான விசுவாசத்தை எதிர்பார்க்கின்றன. அறிவியல் உங்களிடமிருந்து எந்தவிதமான நம்பிக்கையையும் எதிர்பார்ப்பதில்லையா என்று நீங்கள் கேட்கலாம். அறிவியலும் எதிர்பார்க்கிறது என்பது உண்மைதான்.நீங்கள் மேற்கொள்கின்ற உங்களுடைய அவதானிப்புகளும், சோதனைகளின் முடிவுகளும் எதார்த்தத்தை அடித்தளமாகக் கொண்டுள்ளன என்றும், முடிவுகள் கணிக்கப் படக்கூடிய நிகழ்வுகளிலிருந்து முளைக்கின்றன என்றும் நீங்கள் நம்ப வேண்டுமென்று அறிவியல் உங்களிடமிருந்து எதிர்பார்க்கிறது.

பரிணாமத்திற்கு இயற்கை தேந்தெடுப்பு என்பது எவ்வளவு முக்கியமானது என்பதை சக்கரவர்த்தி விளக்கியுள்ளார்.டார்வினின் இயற்கை தேர்ந்தெ டுப்புக் கோட்பாடு என்பது கடுமையாக விமர்சிக்கப்பட காரணங்களாக அது சிக்கலற்றதாகவும் இயல்புணர்வுடனும் இருப்பதுடன் அது வேலையும் செய்கிறது என்பதால்தான் இயற்கை தேர்ந்தெடுப்புக் கோட்பாடு விமர்சிக்கப்படுகிறது என்பதை விளக்குகிறது இந்தப் புத்தகம்.பரிணாம வளர்ச்சியை விளக்கிய முதல் கோட்பாடு இயற்கை தேர்ந்தெடுப்புக் கோட்பாடு அல்ல என்பதை நாம் நினைவில் வைத்திருக்க வேண்டும்.அது இறுதிக் கோட்பாடும் அல்ல.ஆனால் அது முக்கியமானதொரு கோட்பாடாகும்.

பெருவெடிப்புக் கோட்பாட்டை ஏற்றுக் கொள்ளும் மதங்களும் மதவாதிகளும் பரிணாம வளர்ச்சிக் கோட்பாட்டை ஏற்றுக் கொள்வதில்லை ஏனெனில் அது கடவுளின் இருப்பையே கேள்விக்குள்ளாக்குகிறது.எதையாவது செய்தாவது உயிரியலாளர்களின் வாயை அடைப்பதிலேயே குறியாகச் செயற்படுகிறனர். அவர்கள் ஏற்றுக் கொள்ளவில்லை என்பதற்காக அது பொய்யாகிவிடாது ஏனெனில் பரிணாம வளர்ச்சிக் கோட்டபாட்டை பெரும்பாலான உயிரியலாளர்கள் ஏற்றுக் கொண்டுள்ளார்கள்.கிடைத்துள்ள சான்றுகளின் அடிப்படையில் பரிணாம வளர்ச்சிக் கோட்பாடானது நிருபிக்கப்பட்டுள்ளது.

இந்த பூமியிலிலுள்ள அனைத்து உயிரினங்களும் ஓர் ஒற்றை மூலத்திலிந்து தோன்றியவை என்ற டார்வினின் உயிரினங்களின் தோற்றம் என்ற நூலின் கருத்துத்தான் அதிகம் சர்சைகளை ஏற்படுத்தியது.இது ஒரு மாபெரும் சிந்தனைப் பாய்ச்சலாகும்.அதுவும் அந்த ஒற்றை மூலத்திலிருந்து எப்படி இவ்வளவு வகை வகையான உயிரினங்கள் தோன்றின என்பதற்கு இயற்கை தேர்ந்தெடுப்பு என்பதை அவர் முன்மொழிந்தது அபாரமான நகர்வாகும். டார்வினுக்கு முன்புவரை,பூமியில் உயிரினங்கள் பல மூலகங்களிலிருந்து தோன்றியிருக்க வேண்டும் என்ற அனுமானமே கோலோச்சி வந்திருந்தது. அதனால்தான் டார்வினின் முழக்கம் உலகெங்கும் கடும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது.பரிணாம வளர்ச்சி கோட்பாட்டைப் பற்றி கீழைநாட்டுச் சிந்தனைகள் குறித்த தகவல்கள் இல்லை.டார்வின் கொண்டிரந்த அதே கண்ணோட்டத்தை ஈரானிய பல்துறை அறிஞரான அபு ரைஹான் அல் பிருனி கொண்டிருந்ததற்கான சான்றுகள் இருக்கிறன.ஆனால் இது பற்றி அவர் அதிகமாக எழுதியிருக்கவில்லை.அவர் அதனை சான்றுகளோடு நிருபித் திருந்தால் இஸ்லாமிய உலகில் ஒரு புரட்சியாக இருந்திருக்கும்.

உயிரினங்களில் ஏற்பட்ட மாற்றங்கள் படிப்படியாக அதிகரித்துக் கொண்டே போயின என்பதற்கான புதைபடிமச் சான்றுகள் எதையும் டார்வின் முன்வைக்கவில்லை என்ற நியாயமான குற்றச்சாட்டு அவர் மீது வைக்கப்பட்டது.இதில் வேடிக்கை என்னவென்றால் அதனை அவரே தன்னுடைய உயிரினங்களின் தோற்றம் என்ற நூலில் குறிப்பிட்டுள்ளார்.

வால்களுடன் கூடிய மூதாதையர் எமக்கு இருந்திருக்கிறனர் என்பது உண்மைதான்.ஆனால் அந்த மூதாதையர் நீங்கள் நினைப்பது போலக் குரங்குகள் அல்ல.பெரும்பாலான மக்கள் நினைத்துக் கொண்டிருப்பது போல நாம குரங்கிலிருந்து பரிணாம வளர்ச்சி அடையவில்லை.அது ஒரு கட்டுக்கதை.எமக்கும் குரங்குகளிற்கும் ஒரு பொதுவான மூதாதையர் இனம் இருந்துள்ளது.அந்த மூதாதையரிடமிரந்து வாலுள்ள குரங்குகளும் வாலில்லா மனிதக் குரங்குகளும் தோன்றின என்கிறது இந்தப் புத்தகம்.

சக்கரவர்த்தி பூமியில் முதல் உயிர் எவ்வாறு உண்டாகியது என்பதற்கு தெரியாது என்றே பதிலளித்துள்ளார்.ஒன்றைத் தெரியாமல் இருப்பது ஒன்றும் மோசமானதல்ல.சொல்லப் போனால் கதை விடுவதை விட அது ஏற்றுக் கொள்ளக் கூடியதே.தன்னுடைய அறியாமையை ஒப்புக் கொள்வதில் அவர் தயங்கவில்லை என்பதைக் குறிப்பிட்டே ஆக வேண்டும்.சடப்பொருள் எப்படி உயிருள்ள பொருளாக மாறுகிறது என்பதற்கு உறுதியான ஆதாரம் தன்னிடம் இல்லை என்பதையும் குறிப்பிடுகிறார் சக்கரவர்த்தி.அதேவேளை நாம் இன்னமும் சான்றுகளைப் பெற்றிருக்கவில்லை என்பதால் முதல் உயிர் தானாகத் தோன்றியிருக்காது என்று அர்த்தப்படுத்திக் கொள்ளக் கூடாது.

"பூமியில் உயிரினங்கள் எங்கிருந்து வந்தன?” என்ற கேள்விக்குப் பற்பல விதங்களில் பதிலளிக்க முடியும்.உங்களுடைய விடை அல்லது ஊகத்தில் இவையும் அடங்கியிருக்கலாம்:"பூமியில் உயிரினங்களைக் கடவுள் படைத்தார்,"என்று நீங்கள் சொன்னால்,உங்களுடைய கூற்று தவறென்று என்னால் நிரூபிக்க முடியாது.ஏனெனில், "கடவுள்தான் அதைச் செய்தார்,” என்ற கூற்று சோதிக்கப்பட முடியாத ஒன்று.நீங்கள் உங்களுடைய அண்டைவீட்டுக்காரரைக் கொன்றுவிட்டு, “கடவுள்தான் அப்படிச் செய்யும்படி என்னைத் தூண்டினார்," என்று நீங்கள் முழங்கினால், உங்களுடைய கூற்றைத் தவறென்று நிரூபிக்க முடியாதுதான்.ஆனாலும், நீங்கள் சிறைக்குத்தான் செல்வீர்கள்.அதனால், நாம் இயற்கை குறித்த,அவதானிக்கப்படக்கூடிய, பரிசோதனைக்கு உட்படுத்தப்படக்கூடிய யோசனைகளை மட்டுமே கருத்தில் எடுத்துக் கொள்ளலாம். முதலாவது கருதுகோள், பூமியிலுள்ள டிஎன்ஏ/ஆர்என்ஏ அடிப்படையிலான உயிரினங்கள் பிரபஞ்சத்தில் வேறு எங்கோ தோன்றி, எரிகல் அல்லது வேறு ஏதாவது ஒன்றின் மூலம் பூமியை அடைந்திருக்க வேண்டும் என்ற யோசனையை முன்வைக்கிறது. இரண்டாவது கருதுகோள், பூமியில் ஆதி உயிர் ஒரு சடப்பொருளிலிருந்து தோன்றியிருக்க வேண்டும் என்ற யோசனையை முன்வைக்கிறது அல்லது இதனை விட வேறு கருதுகோள்களும் இருக்கலாம் என்கிறார் சக்கரவர்த்தி.

இறுதியாக ஒரு மத நம்பிக்கையாளருடன் உரையாடலொன்று மிகவும் சுவாரஸ்யமாகத் தரப்பட்டுள்ளது.நம்பிக்கையாளர் எல்லாம் கடவுளின் வேலை என்கிறார் அதனை ஒரு உயிரியலாளர் எவ்வாறு எதிர் கொள்கிறார் என்பதை வித்தியாசமான கோணத்தில் முன்வைக்கிறார் சக்கரவர்த்தி.

மொத்தத்தில் இந்தப் புத்தகமானது ஒரு அறிவுக்கான தேடலின் களமாகும்.வாசிப்போம்.




Post a Comment

Previous Post Next Post