.

ஒரு காட்டில் கறையான்கள் ஒன்றுகூடி ஒரு புற்றை கட்டுவது என்று தீர்மானித்தன. அதற்கான இடத்தை தேர்வு செய்து, புற்றுக்கு உகந்த மண்ணை தேர்ந்தெடுத்து கட்டத்தொடங்கின. 

அந்த இடத்திற்கு ஒரு பாம்பு வந்தது. கறையான்கள் கடுமையாக வேலை செய்வதைப் பார்த்தது. அன்றி லிருந்து கறையான்கள் வேலை செய்யும் இடத்திற்கு வருவதையும் வேடிக்கைப் பார்ப்பதையும் வழக்கமாகக் கொண்டிருந்தது பாம்பு. இப்படியே ஒரு வருடகாலம் சென்றது. கரையான்கள் புற்றை கட்டி முடித்தன. பாம்பு பேசியது. கறையான்களே! நீங்கள் கட்டிய புற்று அருமையாக இருக் கிறது. நான் ஒருமுறை உள்ளே சென்று பார்க்கட்டுமா? என்று கேட்டது. 

கறையான்கள் சம்மதித்தன. பாம்பு புற்றுக்குள்ளே சென்று பார்த்தது. பாம்பு வெளியேவரும் என்று கறையான்கள் காத்திருந்தன. அது வெளியே வரவில்லை. கரை யான்கள் வெளியிலிருந்து பாம்பை கூப்பிட்டன. புற்று வசதியாக இருக்கிறது. இனி இது என்னுடையது. வேண்டுமென்றால், நீங்கள் இன்னொரு புற்றை கட்டிக்கொள்ளுங்கள். இங்கிருந்து கிளம்புங்கள், இல்லையென்றால் என் விஷத்துக்கு இரையாவீர்கள் என்று மிரட்டியது பாம்பு.

சோகத்தோடு கிளம்பின கறையான்கள். வழியில் சாதுவை சந்தித்து நடந்தவற்றைச் சொல்லி வருத்தப் பட்டன. சாது பாம்பிடம் பேசினார். பாம்பே! புற்றை உரு வாக்கிக்கொள்ளும் ஆற்றல் உனக்கில்லை. அடுத்தவன் உழைப்பை திருடுகிறாயே, அடுத்தவன் உழைப்பை பலத்தால் பெறுவது நியாயமல்ல என்றார்.


பாம்பு பேசியது. சாதுவே! உலகத்தில் பலவான்கள் வைத்ததுதான் சட்டம் என்பது உங்களுக்குத் தெரியாதா? பலவானிடம் நியாயத்தை எதிர்பார்ப் பது முட்டாள்தனம் என்று சொல்லிவிட்டு நகர்ந்தது. கறையான்கள் அழுதுகொண்டே அந்த இடத்தைவிட்டு நகர்ந்தன. சாதுவும் நகர்ந்தார். சில மாதங்கள் சென் றன. பாம்பு தனது குடும்பத்தோடு புற்றில் வசதியாக வசித்து வந்தது. 

ஒருநாள் பாம்பு தனது குட்டிகளோடு புற்றிற்கு வெளியில் திரிந்து கொண்டிந்தது. அப்போது அங்கு வந்த பருந்து பாம்பை கொத்திக்கொண்டு பறந்தது. குட்டிகள் கதறின. வானத்தில் பறந்து கொண்டிருந்த பருந்து பொத்தென்று பாம்பை கீழே போட்ட து. பாம்பு விழுந்த இடம் சாதுவின் ஆசிரம வாசல். உயிர் பிரியும் தருவாயில் சாதுவிடம் பேசியது பாம்பு. சாதுவே! நான் இல்லாமல் குட்டிகளால் வாழ முடியாது. ஆகவே என்னைக் காப்பாற்றுங்கள் என்று கெஞ்சியது. 

அதற்கு சாது பாம்பே! விதி சொல்லிக் கொடுக்கும் பாடம் ஒன்றை தெரிந்துகொள். வலிமை, பலம் என்பது நிரந்தரமல்ல. இன்று எவற்றையெல்லாம் பலமாக உணர்கிறாயோ, அவற்றையெல்லாம் நாளை பலவீனமாக உணர்வாய். அதேபோல, இன்று பலவீனமாக பார்க்கப்படுபவை பலமாக மாறும் காலமும் வெகு தொலைவில் இல்லை. 

ஆகையால், பலவானாக இருக்கும்போது பக்குவமாகவும் பிறருக்கு கெடுதல் செய்யாமலும் வாழ்ந்திருக்க வேண்டும். ஆனால் நீ அப்படி வாழவில்லை. கறையான் என்ற வலிமையில்லாத எதிரியை நீ தேர்ந்தெடுத்தாலும் பருந்து என்ற பலமான எதிரிக்கு பதில் சொல்லும் நிலைக்கு காலம் உன்னை தள்ளி யிருக்கிறது. பாம்பே! நிதர்சனமான ஒரு உண்மையை தெரிந்துகொள். அடுத்தவனை வருத்தி, அதை ரசிக்கும் உன் குணத்தை இந்த உலகம் வேண்டுமானால் மறந்து போகலாம். ஆனால், நீ கீழே விழும்போது காலம் அதை உன் நினைவில் கொண்டுவரும். அப்போது அதை தாங்கும் சக்தி உனக்கோ, உன் சந்ததிகளுக்கோ இருக்காது. உன் சந்ததிகள் உன் பாவத்தை பங்காக பிரித்துக்கொள்வார்கள் என்று சொல்லிவிட்டு சாது சென்றார். அதற்குப் பிறகு பாம்பு என்ன செய்தது என்பது நமக்கு முக்கியமல்ல. காரணம் காலம் அதை தன் பிடியில் எடுத்துச்சென்றுவிட்டது. 

நீதி-பலம் பொருந்திய ஒருவனின் அராஜகம், அகந்தை, கோபம் ஆகியவற்றை காலம் ஒருநாள் எடுத்துச் சென்றுவிடும். அப்போது உணர்ந்து பார்க்கலாம் என்றால் காலம் அதற்கு இடம் தராது.



Post a Comment

Previous Post Next Post