.

மதன் எழுதிய மனிதனும் மர்மங்களும் என்ற நூலானது ஆவிகள்,பறக்கும் தட்டுக்கள் விநோத மழைகள்,வேற்றுக்கிரக வாசிகள் என மனிதர்களைச் சுற்றி பின்னப்பட்டிருக்கும் அமானுஸ்ய விடயங்களைப் பூதக் கண்ணாடி கொண்டு அலசும் ஒரு புத்தகமாகும்.மனிதனுக்குள்ளேயும் அவனைச் சுற்றியும் வியாபித்திருக்கும் மர்மங்கள் ஒன்றல்ல இரண்டல்ல ஆயிரக்கணக்கானவை அவற்றை நாம் கண்டுபிடிக்க முடியாது மர்மங்கள் மர்மம் நிறைந்ததாகவே இருக்கிறன அவற்றை இந்த புத்தகத்தில் தொகுத்திருக்கிறார் மதன்.

சுவாரஸ்யமான ஒரு நாவலைப்போல இந்த புத்தகம் விரிகிறது அங்கங்கே நாம் கேள்விப்பட்ட கேள்விப்பட்டிராத மர்மங்கள் எட்டிப்பார்க்கிறன. அனேக மானவை கேள்விப்படாதவையே அதனால் இன்னமும் சுவாரஸ்யம் கூடுகிறது. அத்தோடு இது ஒரு திகில் புத்தகமும் அல்ல.இதிலுள்ள மர்மங்கள் பயங்கரமா னவையும் அல்ல.

பரவலாகப் பார்த்தால் ஒவ்வொரு உயிருள்ள உயிரினமும் ஏதாவது மர்மம் ஒன்றைக் கொண்டிருக்கவே செய்கிறது.கார்ல் ஸெகான் எழுதிய Broca's Brain என்ற புத்தகத்தில் ஓரிடத்தில் அவர் கூறுவது போல ஒரே ஒரு தூள் உப்புக் கூட மர்மமான வியப்பான விடயமே.

ஒரு நுணுக்குக்காட்டி துணையில்லாமல் நல்ல கண்பார்வை உள்ளவர் நெருக்கமாகச் சென்று பார்த்தால் மட்டும் கண்ணுக்குத் தெரிகிற ஒரே ஒரு மைக்ரோகிராம் உப்புத்தூளை எடுத்துக் கொள்ளுங்கள்.அந்த ஒரே ஒரு துகள்களுக்குள்ளே ஒரு கொடி பில்லியன் குளோரின் மற்றும் சோடியம் அணுக்கள் இயங்குகின்றன என்பது ஓர் ஆச்சரியமான உண்மை.அதில் ஒவ்வொரு அணுவுக்கு உள்ளேயும் Nucleus,Electrons என்று தனி உலகம் வேறு.அது மட்டுமல்லாமல் அந்த உப்புத் துகளுக்குள்ளே  குளோரின் சோடியம் என்று அணுக்கள் கச்சிதமாக மாற்றி மாற்றி வரிசையாக அடுக்கப் பட்டிருப்பது இன்னொரு ஆச்சரியம்.அப்போதுதான் அது உப்பு ஆகிறது. இன்னொரு பெரிய ஆச்சரியம் குளோரின் பயங்கர விசம் பொருந்திய இரசாயனம்.சோடியமும் அதேகதைதான்.தண்ணீரில் போட்டால் எரிகிற கொடூரமான பொருள் ஆனால் இவை இரண்டையும் இரண்டறக் கலக்கும் போது சோடியம் குளோரைட் என்கிற ராஜகுமாரி உப்பு அவதரிப்பது ஆச்சியம் தான்.இவ்வாறாக இரசாயனவியல் பௌதீகவியல் உயிரியல் என எல்லாத் துறைகளிலும் காணப்படும் மர்மங்களை ஆச்சரியங்களை அலசுகிறார் மதன்.

மனிதன் கருவாக உருவாவது பற்றி விஞ்ஞானிகள் புரிந்து கொண்டது சில நூறு ஆண்டுகளுக்கு முன்புதான்.அதற்கு முன்பு வரை பிறப்பு என்பதே கடவுளின் செயல் என்றே பார்க்கப்பட்டது.கரு உருவாவதில் ஆணுக்கும் பெண்ணுக்கும் சரிபாதி பங்கு இருக்கிறது என்ற உண்மை பண்டைக் காலத்தில் யாருக்கும் தெரியாது.ஆகவே விஞ்ஞானம் புரிந்து கொள்ளாத மர்மங்கள் நிறையவே இருக்கிறன.விஞ்ஞான சட்ட திட்டங்களினால் நிரூபிக்க ப்படாத எதையும் விஞ்ஞானம் ஏற்க மறுக்கிறது.இப்படிப்பட்ட விடயங்களில் விஞ்ஞானிகளே பல பிரிவாகப் பிரிந்து நிற்கிறார்கள்.சுத்த பேத்தல்,ஏமாற்று வேலை,கற்பனை என்பவர்களும் உண்டு.இல்லை விஞ்ஞானத்தை மீறிய ஆச்சரியங்கள் உண்டு சந்தேகமில்லை என்பவர்களும் உண்டு.மதில்மேல் பூனைகளும் இதில் அடக்கம்.இதில் எதிலும் சேராமல் நடுநிலையோடு இந்தப் புத்தகத்தினை எழுதியிருக்கிறார் மதன்.


விஞ்ஞானிகளின் ஏராளமான சோதனைகளிற்கு உட்பட்டும் புரியாத ஒரு உலகம் ஆவி உலகம்.இன்றைக்கும் உலகெங்கும் ஆவிகளைப் பற்றிய ஆராய்ச்சிகள் நடந்து கொண்டுதான் இருக்கிறன.ஆவி என்பது பிரமை என்று ஆய்வாளர்கள் கூறினாலும் எதையும் சுலபத்தில் ஒப்புக் கொள்ளாத அறிவாற்றலும் பகுத்தறிவும் மிகுந்த விஞ்ஞானிகள் ஆவிகளை அலட்சியப்படுத்த தயாராக இல்லை.நாம் குறிப்பிடுகிற பேய்,மோகினிப் பிசாசு பற்றியெல்லாம் கதை எழுதுவது வேறு.உண்மையிலேயே ஆவிகள் உண்டா என்று ஆராய்ச்சி செய்வது வேறு.அப்படிப்பட்ட ஆராய்ச்சிகள் நடந்து கொண்டுதான் இருக்கிறன.அதைப் பற்றியும் அலசுகிறார் மதன்.

ஆவிகளில் நான்கு வகையான ஆவிகள் உண்டு அவையாவன உயிரோடு இருப்பவரின் ஆவி அனுபவம்,ஆபத்து நேர ஆவிகள்,வெறும் ஆவிகள், நீண்டகால ஆவிகள் என வகைப்படுத்துகிறார்.இந்த நான்கு வகை ஆவிகளிற்கும் வித்தியாசங்கள் உண்டு ஆனாலும் அவை ஆவிகள்தான்.

பிரபல ஆவி ஆராய்ச்சியாளர் வீட்லஜ கேரிங்டன் ஆவிகளைப் பற்றிச் சொல்கையில் நம்முடைய எண்ணங்கள் நாம் இறந்த பிறகும் உடலிலிருந்து கடைசியாக வெளிப்பட்டு கொஞ்ச காலத்திற்கு பூமியில் தங்குகிறன.போகப் போக அவை வலுவிழந்து மறைந்து விடுகிறன.இது தான் ஆவி என்று வரைவிலக்கணம் கொடுக்கிறார்.அதாவது ஆபத்தில்லாத அப்பாவியான எண்ண அலைகளின் உருவகமே ஆவி இதுதான் கேரிங்டனின் கோட்பாடு ஆகும்.

உலகில் நிழலாடும் மிகமிகப் பிரபலமான மர்மம் இன்றளவும் ஆவிதான். ஆயிரணக்கணக்காக நாவல்களும் நூற்றுக்கணக்கான ஹொலிவூட் படங்களும் தமிழ் சினிமாக்களுக்கும் காரணமாக ஆவி இருந்துள்ளது அத்தனை பேர் மனதிலும் கேள்விக்குறியாக அல்லாடும் விடயம் ஆவிகள். இந்தப் புத்தகத்தின் மூலம் ஆவிகளைப் பற்றிய ஒரு தெளிவு வாசகர்களிற்கு கிடைக்கும் என்றே நம்புகிறேன்.

நம் கண்களிற்கு தெரிவதற்கு முன்னே நாய் பூனை குதிரை போன்ற விலங்குகளிற்கு ஆவியின் நடமாட்டம் தெரிகிறது.அருகில் ஆவிகள் நடமாடுவது அவற்றுக்குப் புரிகிறது.உடனெ செல்லப் பிராணிகள் நிலை கொள்ளாமல் தவிக்கிறன.பதுங்குகிறன.ஆவிகளிற்கு சுவர்,கதவுகள் ஒரு பொருட்டல்ல.சுவருக்கள் புகுந்து மறைந்து அவற்றால் அடுத்த அறைக்குப் போக முடியும்.அதனை விட லோரன்ஸின் காஞ்சனா பட வரிசைகளில் வருவது போல் ஆவிகள் பளார் என்ற அறையுமா,சிரிக்குமா,துரத்துமா,பழிவாங்குமா என்று ஆவி ஆராய்ச்சியாளர்களின் உதவியுடன் விளக்குகிறார் மதன்.

மதனின் எழுத்து நடை அலாதியாய் இருக்கிறது பல புத்தகங்களிலும் வலைத்தளங்களிலும் சேர்த்த விஷயங்களாய் கூட இவை இருக்கலாம் எனினும் அதை சோர்வோ அலுப்போ எற்படாமல் அழகாய் விவரித்து இருக்கிறார் கற்பனைகள் அதிகம் சேர்காமல் பல தகவல்கள் நமக்கு சுவாரஸ்யமாய் கிடைக்கின்றன.

இந்த புத்தகத்தின் சிறப்பு வெறும் ஆவிகளும் பேய்களும் மட்டும் அல்ல வேறு சில மர்மமான விஷயங்களும் நம்மை சுற்றி நிகழ்கின்றன என்பதை சொல்வதிலேயே இருக்கிறது. வேற்று கிரக வாசிகள் பற்றிய தகவல்கள் பறக்கும் தட்டுகளில் வந்து இறங்கும் உருவங்கள் எல்லாம் பற்றி படிக்கவே சுவராஸ்யமாய் இருக்கிறது.ஹிருத்திக்ரோசன் நடித்த கிறிஸ் பட வரிசையைப் போல் இருக்கிறது மதனின் எழுத்து நடை.அந்தப் படத்தில் வேற்றுக்கிரவா சியொருவர் தன் சக்தியை கதாநாயகனுக்கு அளிப்பதாக இருக்கும்.அது போன்ற படங்கள் தமிழ் சினிமாவில் வராதது துரதிஸ்டமே.

இந்த புத்தகத்தில் மர்மங்களை நிறைய நமக்கு அறிமுகப்படுத்தி வைக்கும் மதன் தேர்ந்தெடுத்திருக்கும் விஷயங்கள் எல்லமே அநேகமாய் மேலை நாடுகளில் நடந்த சம்பவங்களே, இந்தியாவிலோ இலங்கையிலோ ஏன் சீனாவிலோ பாக்கிஸ்தானிலோ அல்லது பங்களாதேஸ்ஸிலோ நடந்ததாக எந்தச்எந்த சம்பவத்தையுமே சொல்லவில்லை, அது கொஞ்சம் அதிருப்தி யையும் ஆறுதலையும் ஒருங்கே எற்படுத்துகிறது. அதிருப்தி  உள்ளூர் பேய்களைப் தெரிந்து கொள்ள முடியவில்லையே என்று ஆறுதல் நல்ல வேளை நம்ம ஊரில் எதுவும் இல்லை என்று கொஞ்சம் பயம் இல்லாமல் வாசிக்க முடிகிறது. 

மொத்தத்தில் இந்தப் புத்தகமானது மர்மங்களினை நமக்கு திரை விலக்கிக்காட்டும் இந்த புத்தகம் வாசிக்க அருமையான ன்று.வாசிப்போம்.

மனிதனும் மர்மங்களும் புத்தகத்தினை வாசிப்பதற்கு கீழள்ள இணைப்பை அழுத்தவும்.

You have to wait 45 seconds.

Generating Download Link...

மதனின் ஏனைய புத்தகங்களினையும் பார்வையிடவும்

Post a Comment

Previous Post Next Post