.

ஒரு கிராமத்தில் குமரன் என்ற ஒரு விவசாயி இருந்தான். அவனுக்கு மோகன் என்று ஒரேயொரு மகன் இருந்தான். மோகன் சிறுவயதில் இருந்தே சோம்பேறியாகவும்,போக்கிரியாகவும் இருந்தான். தன்னுடைய பெற்றோர் களுக்கு அவன் எந்த உதவியும் செய்ததில்லை. பள்ளிப் படிப்பிலும் அவன் கவனம் செல்லாததால், சில ஆண்டுகளில் பள்ளிக்குச் செல்வதையே நிறுத்தி விட்டான்.வீணே ஊர் சுற்றி வந்து பொழுதை வீணாக்கிக் கொண்டிருந்த மோகனைக் குறித்து குமரன் பெரும் கவலையில் ஆழ்ந்தான்.

மோகன் வாலிபனாகியும் திருந்தவில்லை. அவனுக்குத் திருமணம் செய்து வைத்தால் தன்னால் நல்ல பொறுப்பு உண்டாகிவிடும் என்று கருதிய குமரன், ஒரு குடும்பத்துப் பெண்ணை அவனுக்கு மணம் செய்து வைத்தான். ஆனால் திருமணம் நடந்தவுடனே மோகன் தன் தந்தையிடம் “அப்பா, எனக்கு சேர வேண்டிய சொத்தை பிரித்துக் கொடுத்து விடுங்கள்” என்றதும் குமரன் அதிர்ச்சி அடைந்தான்.


தன் மகனை நக்கி “மகனே,உனக்கு என்னுடன் சேர்ந்திருப்பதில் என்ன நஷ்டம்? ஏன் தனிக் குடித்தனம் அமைக்க விரும்புகிறாய்?உனக்கு எந்த வேலையும் தனியாக செய்யத் தெரியாது.என்னைப் பிரிந்து தனியாகச் சென்றால் மிகவும் துன்பப்படுவாய். நீயும் உன் மனைவியும் என்னுடனேயே சேர்ந்திருங்கள் உன்னை விட்டால் எனக்கு வேறு யாருமில்லை” என்று கண்களில் கண்ணீர் மல்க கூறினான்.

"அப்பா பாசம், அன்பு என்று ஏன் நாடகம் போடுகிறீர்கள்? உங்களுக்கு என் மேல் துளி பாசம் கூட கிடையாது. நினைவு தெரிந்த நாள் முதலாய் என்னைத் திட்டி அடித்து உதைத்து இருக்கிறீர்கள். இனியும் உங்களிடம் இருந்து துன்பப்படாமல் நான் சுதந்திரமாக இருக்க ஆசைப் படுகிறேன்” என்று இரக்கமின்றிக் கூறினான். நஞ்சினும் கொடிய மோகனது வார்த்தைகளைக் கேட்டு குமரன் இதயம் உடைந்து சுக்கு நூறாகியது. குமரன் அரை மனதுடன் தன் பிள்ளைக்கு சொத்தில் பாகம் பிரித்துக் கொடுத்துவிட மோகன் தன் மனைவியுடன் பக்கத்து கிராமத் திற்குச் சென்று விட்டான். அங்கு ஏதோ கூலி வேலை செய்து கொண்டு தனியே வாழ ஆரம்பித்தான்.

இவ்வாறு ஒரு ஆண்டு கழிந்தது.மோகனுக்கு ஒரு மகன் பிறந்தான்.
மோகனுடைய மகனும் சிறு வயதில் இருந்தே மோகனைப் போல் சோம்
பேறியாகவும் போக்கிரியாகவும் காலம் கழிக்கத் தொடங்கினான். தன்
மகனுடைய போக்கைக் கண்டு மோகனுக்கு மிகுந்த வருத்தமும்,
கோபமும் உண்டாகியது. தன் பிள்ளையைத் திருத்துவதற்காக
மோகன் அவனைக் கடும் வார்த்தைகளால் சாடி அடிக்கவும் செய்தான்.
ஒருநாள்மோகன் கோபத்தில் பலமாக அடித்ததன் விளைவாக, மோகனின்
மகன் வீட்டை விட்டு ஓடி தன் தாத்தாவை அடைந்தான். அவரிடம் தன் தந்தையான மோகனைப் பற்றி புகார் செய்தான்.

உடனே குமரன் தன்னுடைய பேரனை அதே கிராமத்தில் இருந்த
தன் நண்பரிடம் விட்டு வைத்தார்.இதற்குள் வீட்டை விட்டு ஓடிய தன்
பிள்ளையைக் குறித்து மோகன் பெருங்கவலையில்
ஆழ்ந்தான்.தன்னுடைய கிராமத்திலும், சுற்று வட்டாரத்திலும் தீவிரமாகத் தன்
பிள்ளையைத் தேடியலைந்தான்.இறுதியில் தன் தந்தையிடம் வந்து
சேர்ந்து, ''என் மகன் பொறுப்பில்லாமல் சுற்றித் திரிந்தான்.அதற்காக அவனைக்கடிந்து கொண்டு அடித்தேன். உடனே வீட்டை விட்டு
ஓடிவிட்டான்” என்றான். “போனால் போகட்டும் விடு. பயனற்ற பிள்ளை இருந்தால் என்ன, ஓடினால் என்ன! இதைப் பற்றி நீ கொஞ்சமும்
கவலைப் படாதே” என்று போலியாக குமரன் ஆறுதல் கூறினான்.



வருத்தத்துடன் வீடு திரும்பிய மோகனை நோக்கி அவன் மனைவி
கதறி அழுது கொண்டே “என் பிள்ளையை  வீட்டை விட்டுத் அடித்து துரத்தி
விட்டீர்களே!அவனை இப்போது எங்கும் காணவில்லையே” என்று கேவினாள்.

தன் மனைவியின் கதறலைக் கேட்டவுடன் மோகனுக்குத் துயரம்
பன் மடங்கு அதிகரித்தது. அதை வெளிக் காட்ட முடியாமல் அடக்கி
வைத்ததால், மோகனின் உடல் நலம் கெட்டது.

தன் மகனை சோதனைக்குள்ளாக்கியது போதும் என்று கருதிய
குமரன், தன் பேரனை அழைத்துக் கொண்டு மோகனிடம் சென்றான்.
காணாமல் போயிருந்த தன் பிள்ளையைக் கண்ட மாத்திரத்தில் 'கோ' வென்று கதறிக் கொண்டே அவனைக் கட்டித் தழுவிக் கொண்ட மோகனைப் பார்த்து குமரன் ஆறுதல் கூறினார். “மகனே, தந்தையின் அன்பு எத்தகையது என்பதை இப்போதாவது உணர்ந்தாயா? உன் மகனைத் திருத்த வேண்டும் என்ற நல்ல எண்ணத்துடன் தான் நீ அவனை அடித்தாய்.அதனால் உனக்கு அவன் மீது
அன்பில்லை என்று பொருள் இல்லை. நானும் அவ்வாறே உன்மீது
உன்னிடம் பல நேரங்களில் கடுமையாக நடந்து கொண்டது உன்னை
திருத்துவதற்காகத்தான். நீ அதைப் புரிந்து கொள்ளாமல்
எனக்குப் பாசம் இல்லை என்று தவறாக எண்ணிக் கொண்டு என்னை
விட்டுப் பிரிந்தாய். உன்னைப் பிரிந்ததில் எனக்கும் எவ்வளவு
துயரம் உண்டாகியிருக்கும் என்பது இப்போது தெரிகிறதா?" என்றார்.

மனம் திருந்திய மோகன் மறுநாளே தன் குடும்பத்துடன் தன் தந்தையின் வீடு திரும்பி, அவருடன் சேர்ந்து வசிக்கலானான்.விவசாயத்தில் தன் தந்தைக்கு
நின்று உதவிகள் செய்து வாழ் நாட்களை மிகவும் இனிமையாகக்
கழிக்கலானான்.



Post a Comment

Previous Post Next Post