அவுஸ்திரேலியா மற்றும் நியூசிலாந்தில் நடைபெற்று வரும் மகளிர் உலகக் கிண்ண கால்பந்து போட்டி பெரிதாக ஆரவாரம் காட்டாமல் முன்னோக்கிச் செல்கிறது. ஆடவர் கால்பந்து உலகக் கிண்ணத்துடன் ஒப்பிடுகையில் மகளிர்களுக்கு இன்னும் பெரிதாக செல்வாக்கு இல்லை என்பது தெரிந்தது. விளையாட்டில் ஆண், பெண் சமத்துவம், ஏற்றத்தாழ்வு, சம்பள முரண்பாடு எல்லாம் இந்த பின்னணியில்தான் பார்க்க வேண்டும்.
மொரோக்கோ பின்கள் வீராங்கனை நுஷைலா பென்சினா உலகக் கிண்ண வரலாற்றில் ஹிஜாப் அணிந்து போட்டியில் பங்கேற்ற முதல் வீராங்கனையாக பதிவாகி இருக்கிறார். இது ஒரு வரலாற்று திருப்பம் என்றாலும் இதன் நல்லது கெட்டது பற்றிய விவாதம் என்பது விளையாட்டைத் தாண்டி சமயம், அரசியல் எல்லாம் கலந்தது.
கடந்த ஆண்டு கட்டாரில் நடந்த ஆடவர் உலகக் கிண்ணத்தில் மொரோக்கோ அணி அரையிறுதி வரை முன்னேறி அதிர்ச்சி காட்டியது. அதன் தொடர்ச்சியா கவே மகளிர் உலகக் கிண்ணத்திற்கு மொரோக்கோ அணி முதல் முறை தகுதி பெற்றது. அதாவது அரபு பின்னணி கொண்ட அணி ஒன்று மகளிர் உலகக் கிண்ணத்திற்கு முதல் முறை முன்னேறியதாக இது இருந்தது.
பொதுவாக மொரோக்கோ மகளிர் அணி கால்பந்துக்கே உரிய அரைக் காற்சட்டை மற்றும் ஜெர்சியுடனேயே இம்முறை உலகக் கிண்ணத்தில் களமிறங்கியது.ஜெர்மனிக்கு எதிரான முதல் போட்டியில் 0-6 என தோற்ற போது உலகம் அவதானிக்கும் படி அந்த அணியில் எதுவும் இருக்கவில்லை. ஏனென்றால் 25 வயதான பின்கள வீராங்கனை நுஹைலா பென்சிமா அந்தப் போட்டியில் பதில் வீராங்கனையாக இருந்தபோதும் போட்டியில் கடைசி வரை பயன்படுத்தப்படவில்லை.
தொடர்ந்து தென் கொரியாவுக்கு எதிராக கடந்த ஜூலை 30 ஆம் திகதி இடம் பெற்ற தீர்க்கமான போட்டியில் நுஹைலா ஆரம்ப அணியிலேயே இணைக் கப்பட்டார். மைதானத்திற்கு களமிறங்கியபோது ஏனைய வீராங்கனைகளில் இருந்து அவர் முற்றாக வித்தியாசமாக இருந்தார்.
தலையை மறைக்கும் வகையில் ஹிஜாப் அணிந்திருந்த அவர் அரைக் காற் சட்டைக்கு கீழால் காலை மறைக்கும் வகையில் மெல்லியதாக ஒரு காற்சட்டை போட்டிருந்தார்.அவரது கை கூட மணிக்கட்டு வரை மறைக்கப்பட்டிருந்தது சர்வதேச கால்பந்து மைதானத்தில் அதுவும் உலகக் கிண்ணத்தில் இப்படி ஆடை அமைப்புடன் மைதானத்தில் வீராங்கனை ஒருவர் இருப்பது இது புதிது.
நுஹைலாவின் தோற்றத்திற்கு முழுக்க முழுக்க காரணம் அவரது மத நம்பிக்கைதான்.அது விளையாட்டு உலகில் இன்னும் முழுமையாக தீர்க்கப்படாத ஒரு விவகாரமாக இருந்து வருகிறது.
"பல ஆண்டுகளாக பல போராட்டங்களை சந்திக்க வேண்டி இருந்தது. சாதக மான முடிவு ஒன்று கிடைத்திருப்பதற்கு இறைவனுக்கு நன்றி கூற வேண்டும். உயர் தரத்தில் மொரோக்கோவுக்கு பெருமை சேர்க்கும் வகையில் நாம் விளையாட எதிர்பார்க்கிறோம்" என்கிறார் நுஹைவா.
வீராங்கனைகளின் பாதுகாப்பு மற்றும் சுகாதாரத்தை காரணம் காட்டி 2007 ஆம் ஆண்டு கால்பந்து போட்டிகளில் ஹிஜாப் அணிய சர்வதேச கால்பந்து சம்மேளனம் (பிஃபா) தடை விதித்தது. அதாவது முக்காடு அணிந்து போட்டியில் விளையாடுவது தலை அல்லது கழுத்தில் காயத்தை ஏற்படுத்தக் கூடும் என்பதே பிஃபாவின் பிரதான தர்க்கமாக இருந்தது.
போட்டியின்போது அணியும் துணி கழுத்தை இறுக்கி மூச்சுத் திணறலை ஏற்ப டுத்தும் என்றே பிஃபா ஆரம்பத்தில் பயப்பட்டது.
என்றாலும் இந்தத் தடை ஓர் உணர்வு பூர்வமான விவகாரமாக மாறியது. 2007 ஆம் ஆண்டு 11 வயது கனேடிய சிறுமி ஒருவர் ஹிஜாபுடன் ஆட வந்தபோது நடுவர் பிஃபா தடையை காரணம் காட்டி அவர் மைதானம் வர மறுத்தது சர்வதேச அளவில் பெரிதாக அவதானம் பெற்றது. இந்த விவகாரம் பிஃபா வரை எடுத்துவரப்பட்டது. இதனைத் தொடர்ந்து பிஃபா நிலைப்பாட்டில் படிப் படியாக மாற்றம் நிகழ ஆரம்பித்தது.
குறிப்பாக இந்தத் தடை முஸ்லிம் பெண்களிடையே பெரிதாக தாக்கம் செலுத்த ஆரம்பித்தது. பல பெண்கள் கால்பந்து விளையாட்டையே துறக்கும் நிலைக்கு தள்ளப்பட்டார்கள். 2012 லண்டன் ஒலிம்பிக் போட்டிக்காக ஜோர்தான் அணிக்கு எதிரான தகுதிகாண் போட்டியில் ஆடவந்த ஈரான் மகளிர் கால்பந்து அணி வீராங்கனைகள் ஹிஜாப் அணிந்திருந்ததால் போட்டியில் ஆட தடை விதிக்கப்பட்டது.
அப்போது ஈரான் வீராங்கனைகள் மைதானத்திலேயே அழுத காட்சி உள் நாட்டில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தியது. ஹிஜாப் விவகாரத்தில் கடும் கட்டுப்பாடு இருக்கும் ஈரானில் இந்தத் தடை பெண்களை கால்பந்தில் இருந்து தூரமாக்கியது.
என்றாலும் கால்பந்து விதிகளை தீர்மானிக்கும் சர்வதேச கால்பந்து சம்மேளன சபை,சோதனை முயற்சியாக கால்பந்து போட்டிகளில் பெண்கள் இரண்டு ஆண்டுகளுக்கு ஹிஜாப் அணிய அனுமதி அளித்தது. இந்த சோதனை பிஃபா தர்க்கத்தை பொய்யாக்குவதாக இருந்தது.
இதனை அடுத்தே 2014 ஆம் ஆண்டு ஹிஜாப் அணிவதற்கான தடையை பிஃபா நீக்கியது. 2016 ஆம் ஆண்டு ஜோர்தானில் நடைபெற்ற 17 வயதுக்கு உட்பட்ட மகளிர் உலகக்கிண்ணத்திலேயே தடை நீக்கப்பட்டிருப்பது உலகக்கு பெரிதாகத் தெரிந்தது. அந்தத் தொடரில் பல வீராங்கனைகள் ஹிஜாப் அணிந்து ஆடியதை பார்க்க முடிந்தது.
மறுபக்கம் தடை நீங்கியதற்கு என்ன உலகக் கிண்ணத்தில் நுஹைலாவுக்கு முன்னர் யாரும் ஹிஜாப் அணிந்து ஆடி இருக்கவில்லை. குறிப்பாக 2019 ஆம் ஆண்டு பிரான்ஸில் மகளிர் உலகக் கிண்ணப் போட்டி நடந்ததும் இதற்கு பாதிப்பை ஏற்படுத்தி இருந்தது. ஏனென்றால் அங்கு ஹிஜாப் தடை தொடர்ந்து நீடித்தது.
பிஃபா தடையை நீக்கி இருந்தாலும் பிரான்ஸ் இன்னும் விடாப்பிடியாகவே இருக்கிறது. பிஃபா இந்த விவகாரத்தில் நெகிழ்வு பொக்கை கையாள்வதே பிரான்ஸ் போன்ற சில நாடுகள் தனித்து முடிவு எடுக்கக் காரணம். என்றாலும் இது ஒரு இஸ்லாமோ போபியா மற்றும் பெண்கள் விளையாட்டில் பங்கேற்பதை தடுக்கிறது என்று கூறி சிலர் பிரான்ஸில் நீதிமன்றத்திற்குக் கூட சென்றார்கள்.
Post a Comment