கிருஷ்ணாபுரம் என்ற அழகிய கிராமத்தில் ஆலமரம் ஒன்று இருந்தது. அந்த ஆலமரத்தில் இரண்டு காகங்கள் கூடுகட்டி வாழ்ந்து வந்தன.
அந்த அழகிய ஆலமரத்தின் அடிப் பகுதியில் பெரிய பொந்து ஒன்று இருந்தது. அந்தப் பொந்தை ஒரு கரும்பாம்பு உறைவிடமாகக் கொண்டிருந்தது.
பெண் காகம் தனது கூட்டில் முட்டைகள் இட்டுக் குஞ்சுகள் பொறிக்கும்.
ஆண் காகமும், பெண் காகமும் இரை தேடச் செல்லும் நேரம் பார்த்து பொந்தில் இருக்கும் அந்த பாம்பு மரத்தின் மீது ஏறி காக முட்டைகளை தின்றுவிட்டு இறங்கி விடும்.
திரும்பி வந்து பார்க்கும் போது முட்டைகள் காணாமல் போய் விட்டது கண்டு காகங்கள் மிகவும் மன வேதனை அடையும்.
ஒவ்வொரு முறையும் பெண் காகம் குஞ்சு பொரிப்பதும், அவற்றை கருநாகம் உண்பதும் வழக்கமான நிகழ்ச்சியாகி விட்டன.
ஒரு நாள் அந்த பாம்பு முட்டைகளை சாப்பிட போகும் நேரத்தில் கூட்டிற்கு வந்த பெண்காகம் பார்த்துவிட்டது. காகத்தை பார்த்த பாம்பு முட்டைகளை சாப்பிடாமல் தனது பொந்திற்கு சென்று விட்டது.
குஞ்சுகள் காணாமல் போவதற்கு மரத்தடிப் பொந்தில் வாழும் கருநாகந்தான் காரணம் என்பதைக் காகங்கள் அறிந்து கொண்டன.
ஆனால் காகங்களால் கருநாகத்தை என்ன செய்ய முடியும்?
தலை விதியே எனச் சில காலத்தை ஓட்டின.
திரும்பத் திரும்ப தன் குஞ்சுகளை இழக்கும் அவலத்தைப் பெண் காகத்தால் சகித்துக் கொள்ள இயலவில்லை.
ஒருநாள் பெண் காகம் ஆண் காகத்தை பார்த்து, நமது குஞ்சுகளையெல்லாம் ஒவ்வொரு தடவையும் கருநாகம் தின்று விடுகின்றதே! இனியும் இதை என்னால் பொறுத்துக்கொள்ள முடியாது.
இந்த மரத்தை விட்டு விட்டு வேறு ஒரு பாதுகாப்பு நிறைந்த மரத்திற்குக் குடி போய் நிம்மதியாக வாழ்க்கை நடத்துவோம் என்று கண்ணீருடன் கதறியது.
பெண் காகம் கூறியதைக் கேட்டு மன வேதனையுற்ற ஆண் காகம் தன் மனைவியை நோக்கி உன் மனக்குமுறல் எனக்கு புரிகிறது! சில விஷயங்களை நாம் எண்ணிப் பார்க்க வேண்டியிருக்கின்றது.நீண்ட காலமாக வசித்து வரும் இந்த இடத்தைவிட்டு வேறு இடத்திற்குச் செல்ல என் மனம் கேட்கவில்லை.
ஆனால் அதற்காகக் கரும்பாம்பின் அட்டூழியத்தைப் பொறுத்துக் கொண்டிருக்க வேண்டும் என்று நான் கூற மாட்டேன்.ஏதாவது ஒரு யோசனை செய்து இந்த பாம்பைக் கொன்றாக வேண்டும் என்று ஆண் காகம் கூறியது.
'இந்தக் கொடிய விஷ கருநாகத்தை நம்மால் கொல்ல முடியுமா?' என்று சந்தேகத்தோடு பெண்காகம் கேட்டது.
'கருநாகத்தைக் கொல்லும் அளவுக்கு வலிமையோ வல்லமையோ எனக்கு இல்லை என்பது உண்மைதான். ஆனால் நல்ல அறிவாற்றல் மிக்க நல்ல நண்பர்கள் பலர் எனக்கு இருக்கிறார்கள். அவர்களிடம் யோசனை கலந்து இந்தக் கருநாகத்தை நிச்சயமாக என்னால் ஒழித்துக் கட்ட முடியும்' என்று ஆவேசத்துடன் கூறியது ஆண் காகம்.
Post a Comment