பக்தாத் நகரில் அப்துல் என்ற ஓர் ஏழை வாலிபன் வசித்து வந்தான்.அவனுக்கு நிரந்தரமாக எங்கும் வேலை கிடைக்காததால்,பல நாள்கள் உண்ண உணவு கூட இல்லாமல் தவித்தான். அவன் தனியாளாக இருந்தால் பரவாயில்லை. ஆனால் அவனுக்கு மனைவி குழந்தைகள் இருந்தனர். அவர்களும் அப்துலுடன் சேர்ந்து பல நாள்கள் பட்டினி கிடக்க வேண்டியிருந்தது.அவனுடைய மனைவியால் இந்தத் துன்பங்களை பொறுத்துக் கொள்ள முடியாததால் அவனை கையாலாகாதவன் என்று அடிக்கடி ஏசுவது உண்டு. “நீ எதற்கும் லாயக்கில்லாதவன்.சம்பாதிக்கத் திறமை அற்றவன். உனக்கு எதற்கு மனைவியும்,குழந்தைகளும்? எங்களைப் பட்டினி போட்டுக் கொல்கிறாயே” என்று பலவாறும் அவனைத் தூற்றுவதுண்டு.
மனைவியின் கடுஞ்சொற்களும், வறுமையும் போதாதென்பது போல் அவனை மற்றொரு நிகழ்ச்சியும் துன்புத்தி வந்தது. ஒவ்வொரு இரவும் அவனுக்கு அதிசயமான ஒரு கனவு மீண்டும் மீண்டும் வந்தது. அவன் பாலைவனத்தில் தனியே நடந்து செல்வது போலவும், ஏதோ ஒரு குரல் அவனை, “நிற்காதே நடந்து கொண்டேயிரு. காஹிராவுக்குச் செல்.அதிருஷ்ட தேவதை உனக்காக அங்கே காத்திருக்கிறாள்' என்று கூறுவது போலவும் அந்தக் கனவு தினமும் தூக்கத்தில் வந்து தொல்லையளித்தது. சில சமயம் உண்மையாகவே நமது கனவு பலிக்குமா,நாம் காஹிராவுக்குப் போய் பார்க்கலாமா என்று தோன்றும். ஆனால் தான் காணும் இந்த அதிசயக் கனவை தன் மனைவியுடன் பகிர்ந்து கொள்ள முயற்சிக்கையில், அவன் மனைவி “எங்களை ஏமாற்றி விட்டு, உன் கடமையைப் புறக்கணித்துவிட்டு காஹிரா செல்லப் பார்க்கிறாயா? ' என்று அவனை சாடுவதுண்டு.பாக்தாத் நகர எல்லையில் சென்று அப்துல் தினமும் தங்குவதுண்டு.அங்கிருந்து கூட்டம் கூட்டமாகச் செல்லும் வியாபாரிகளுக்குக் குடிக்கத் தண்ணீர் அளிப்பதும், அவர்கள் ஒட்டகங்களை கவனிப்பதுமாக சில எடுபிடி வேலைகளை செய்வதுண்டு.அவர்கள் மனமிரங்கித் தரும் சில காசுகளைக் கொண்டே அப்துல் வாழ்க்கை நடத்தி வந்தான்.
ஒருநாள் இரு வியாபாரிகள் தங்களுக்குள் பேசிக் கொள்கையில் அவர்கள் காஹிரா செல்வதாக அறிந்தான். தனது நெடு நாளையக் கனவான காஹிரா பயணம் அவர்களுடன் சென்றால் நிறைவேறும் என்று அப்துல் அவர்களை அணுகித் தன்னையும் காஹிராவிற்கு அழைத்துச் செல்லும்படி வேண்டினான். அவர்கள் சம்மதிக்கவே, தன் மனைவிக்குக் கூடச் சொல்லாமல் அப்துல் காஹிரா பயணத்தை மேற் கொண்டான்.
பக்தாதிலிருந்து காஹிரா செல்வதற்குப் பரந்த பாலைவனத்தின் வழியே செல்ல வேண்டும். அந்த வியாபாரிகளுடன் சென்ற அப்துல் பாலைவனத்தில் பல இடர்களை எதிர் கொள்ள நேரிட்டது. இறுதியில் ஒரு வழியாக அப்துல் காஹிராவை அடைந்தான். பல நாள்கள் பாலை வனத்தின் வழியே வந்த களைப்பு அவனை மேற்கொள்ள, ஒரு மரத்தடியில் படுத்து உறங்கி விட்டான்.
மாலை நேரம், உறங்கிக் கொண்டிருந்த அப்துலை யாரோ உலுக்கி எழுப்பி னார்கள்.“யாரப்பா பிச்சைக்காரனா? என்று அப்துலிடம் உரத்த குரலில் விசா ரித்த அந்த ஆள், அப்துலைக் கையைப் பிடித்து தரதரவென்று இழுத்துச் சென்று ஒரு சிறையில் தள்ளிப் பூட்டி விட்டான். அப்துல், அன்றிரவு சிறையில் கழித்தான்.அதிசயத்திலும் அதிசயமாக அன்றிரவு வழக்கமாக அவன் காணும் கனவு வரவில்லை.
மறுநாள் காலை அப்துலை சிறையிலிருந்து விடுவித்து அவனை நீதிமன்றத்துக்கு அழைத்துச் சென்றனர்.அப்துலைப் பார்த்த நீதிபதி, “நீ ஒரு பிச்சைக்காரன்தானே! காஹிரா நகரத்தில் பிச்சையெடுப்பது சட்ட விரோதமானது என்பது உனக்குத் தெரியாதா?” என்றார்.
Post a Comment