.

ஒரு மரத்தில் ஆண் காகம் ஒன்றும் பெண் காகம் ஒன்றும் தன் குஞ்சுகளுடன் கூடு கட்டி வாழ்ந்து வந்தது. அங்கிருந்து சற்று தொலைவில் உள்ள நகரத்துக்கு வந்து,கிடைக்கும் உணவை உண்டு மாலை ஆனதும் தனது கூட்டுக்குச் சென்றுவிடும். கூடவே குஞ்சுகளையும் கூட்டிக்கொண்டு போய் திரும்பி கூட்டில் விடும்.

தினம் தினம் மனிதர்கள் போடும் மிச்சம் மீதி உணவுகளை சாப்பிட்டு வாழ்ந்து வருவதை அந்த மரத்திலே வசிக்கும் மற்ற பறவைகள் கேலி செய்தன. எங்களைப் போல் காட்டுக்குள் சென்று வாழ முடியாத உன்னால் எங்களுக்குத்தான் கேவலம். பேசாமல் நீ மனிதர்களுடனே போய் வாழ வேண்டியதுதானே என்று கேட்டன.

காகம் அந்தப் பறவைகளிடம், நாங்கள் மக்களிடம் சென்று சாப்பிட்டு பிழைப்பதால் நகரத்தில் சுத்தம் ஏற்படுகிறது. ஒரு விதத்தில் நாங்கள் மனிதர்கள் வீசும் கழிவுகளை உண்பதால் நகரம் சுத்தமாக ஆகிறது. ஆகவே நாங்கள் உழைத்துத்தான் சாப்பிடுகிறோம். அதுவும் அவர்களாக பார்த்துக் கொடுப்பதை நாங்கள் பகிர்ந்துதான் உண்கிறோம் என்று பதில் சொல்லியது.

இருந்தாலும் மயில்,புறா,குருவி போன்றவைகள் காக்கைகளை கேலியும் கிண்டலும் செய்துகொண்டுதான் இருந்தன. நீங்கள் எல்லாம் கருப்பாய் இருக்கிறீர்கள், அதனால் தான் மனிதர்கள் உங்களை அடிமை போல நடத்துகிறார்கள் என்று காக்கைகளின் நிறத்தையும் கேலி செய்து பேசின. மேலும் நீங்கள் மாமிச பட்சிகள், எங்களுடன் நீங்கள் வசிப்பது எங்களுக்கு வருத்தமாக உள்ளது என்றெல்லாம் பேசின.

இதைக் கேட்ட காக்கைக் குஞ்சுகள் மனம் வேதனைப்பட்டு தங்கள் பெற்றோரிடம் நாம் இங்கிருந்து போய்விடலாம் என்று சொல்லின.ஆண் காகம் உடனே தன் குஞ்சுகளைப் பார்த்து குழந்தைகளே, மற்றவர்கள் பேசுவதற்கும் ஏசுவதற்கும் பயப்பட்டு நாம் கூட்டைவிட்டுச் சென்றோம் என்றால் நம்மால் எங்கும் வசிக்க முடியாது. எங்கு சென்றாலும் ஏதாவது ஒரு பிரச்சினை இருந்துகொண்டேதான் இருக்கும். நாம் அதனை அனுசரித்துப்போக பழகிக்கொண்டோம் என்றால் நம்மால் நன்றாக வாழமுடியும். ஆகவே மற்றவர்கள் சொல்வதைப் பற்றி கவலைப்படாமல் வாழ கற்றுக் கொள்ளுங்கள். உங்களுடைய அருமை மற்றவர்களுக்குப் புரியும் போது எல்லாம் சரியாகிவிடும் என்று அறிவுரை கூறியது.

அந்த மரத்தில் வசித்து வந்த மயில்கள் கொஞ்ச நாட்களாக கவலையில் இருந்தன.தங்களுக்குள் வருத்தப்பட்டு பேசிக்கொண்டன. இதைக் கவனித்த ஆண் காகமும் பெண் காகமும் மயில்களிடம் சென்று ஏன் கவலையாயிரு க்கிறீர்கள் என்று கேட்டன. மயில்கள் சோகமுடன், நாங்கள் மனிதர்களின் விவசாய நிலத்தில் பயிராகும் கதிர்களை மேய்ந்து விடுவதால் மனிதர்கள் எங்கள் மேல் கோபம் கொண்டு எங்களுக்கு மருந்து வைத்து அழிக்க முற்படுகிறார்கள். அது மட்டுமல்ல இந்த மரத்தில் வசிக்கும் எங்கள் அனைவரையும் வலை போட்டு பிடித்துச் செல்ல இன்றோ நாளையோ வருவதாக பேசிக்கொண்டிருந்தார்கள் என்று வருத்தத்துடன் சொன்னது.

காகங்கள் கவலைப்படாதீர்கள், இந்த மரத்தில் வசிக்கும் உங்களைக் காக்கும் பொறுப்பை நாங்கள் ஏற்றுக்கொள்கிறோம் என்றன. இவர்களால் எப்படி எங்களைக் காப்பாற்ற முடியும் என்று நம்பிக்கை இல்லாமல் மயில்கள் காகங்களைப் பார்த்தன.


இவைகள் பேசிக்கொண்டிருந்த மறுநாள் நான்கைந்து மனிதர்கள் மரத்தின் அருகில் வந்து நின்று மயில்களை எப்படிப் பிடிக்கலாம் என பேசிக் கொண்டிருந்த பொழுது திடீரென்று அந்த மரத்திலிருந்து நூற்றுக்கணக்கான காகங்கள் கிளம்பி அந்த மனிதர்களை நோக்கி பறந்து வந்தன. வந்தவைகள் மனிதனின் தலை மேல் கொத்துவதற்கு பாய்ந்துவர அங்கிருந்த மனிதர்கள் ஐயோ, அம்மா என்று கூக்குரலிட்டு பயந்து தலைதெறிக்க ஓட ஆரம்பித்து விட்டனர்.

ஒரு சில நாட்கள் கழித்து அந்த மரத்தில் வசித்து வந்த மயில்கள் காகங்களிடம் வந்து உங்களுக்கு மிகவும் நன்றி. நீங்கள் இந்த மரத்தில் வசிப்பதால் எங்களுக்கு மிகவும் பாதுகாப்பாக இருக்கிறது. மனிதர்கள் இந்த மரத்திற்கு அருகில் வந்தாலே நீங்கள் கொத்திவிடுவீர்கள் எனப் பயப்படுகிறார்கள். உங்களுக்கு மட்டும் எப்படி இத்தனை நண்பர்கள் என்று ஆச்சரியத்துடன் கேட்டன. காகங்கள் சிரித்தவாறு நாங்கள் பிழைப்புக்காக மனிதர்களை நாடினாலும் எங்களுக்கிடையில் எப்பொழுதும் ஒற்றுமையாய் இருப்போம். ஒருவருக்கு ஆபத்து என்றாலும் அனைவரும் உதவிக்கு வந்து விடுவோம் என்று கூறியது. மயில்கள் மிக்க நன்றி கூறி விடைபெற்றன.

ஒருநாள் குருவிகள் கீச், கீச் என்று கத்தியவாறு அலை பாய்ந்து கொண்டிருந்தன. என்னவென்று எட்டிப்பார்த்த காகம், அங்கு ஒரு பாம்பு குருவிக்கூட்டை நோக்கிப் போவதைப்பார்த்து தன் குஞ்சுகளை காப்பாற்று வதற்குத்தான் அவ்வாறு கத்துகிறது என்பதை புரிந்து கொண்டு ஆண் காகமும் பெண் காகமும் பாய்ந்து சென்று அந்தப் பாம்பை கொத்த ஆரம்பிக்க இவைகள் இருவரின் கொத்துதல்களை சமாளிக்க முடியாத பாம்பு, விட்டால் போதும் என்று கீழே சர சரவென இறங்கிச் சென்றுவிட்டது. குருவிக் குஞ்சுகள் காக்கைகளிடம் வந்து மிக்க நன்றி சொல்லி அவர்களை கேலியும் கிண்டலும் செய்ததற்கு வருத்தம் தெரிவித்தன.

ஒருமுறை ஒரு வீட்டில் பெரிய விசேஷம் ஒன்று நடந்துகொண்டிருந்தது. அந்த வீட்டில் இருந்தவர்கள் ஒரு இலையில் நிறைய சாப்பாட்டை எடுத்து வந்து வீட்டிற்கு மேலேவைத்தனர். அப்பொழுது மேலே பறந்து கொண்டிருந்த பறவைகள் சாப்பாட்டின் வாசத்திற்கு கவரப்பட்டு அதை சாப்பிடுவதற்கு கீழே இறங்கின. உடனே அந்த வீட்டில் இருந்தோர் அந்தப் பறவைகளை விரட்டினர். சாப்பாட்டை மேலே கொண்டுவந்து வைத்துவிட்டு சாப்பிட விடாமல் விரட்டினால் என்ன அர்த்தம் என்று பறவைகள் தங்களுக்குள் பேசிக்கொண்டன.அப்பொழுது அந்த இரு காக்கைகள் பறந்து வந்து அந்த சாப்பாட்டை கொத்த ஆரம்பித்தன.உடனே அந்த மனிதர்கள் கையெடுத்து கும்பிட்டனர். மற்ற பறவைகளுக்கு ஒரே ஆச்சரியம்? அந்த காகங்களிடம் அதெப்படி எங்களை சாப்பிடவிடாமல் விரட்டிய மனிதர்கள் நீங்கள் சாப்பிடும்போது மட்டும் கையெடுத்து கும்பிடுகிறார்களே? என்று கேட்டன.

அந்த காகங்கள் நாங்கள் சாப்பிடுவதை, தங்களுடைய முன்னோர்களே அந்த சாப்பாட்டை சாப்பிடுவதாக மக்கள் நினைக்கிறார்கள், அதனால்தான் கை கூப்பி நன்றி தெரிவிக்கிறார்கள் என்றன. இதைக் கேட்ட மற்ற பறவைகள் காகங்களின் அருமையை உணர்ந்துகொண்டன. தாங்கள் கேலி செய்து பேசியதற்கு மன்னிப்புக் கூறின.

நீதி-பிறரின் தோற்றம் முக்கியமல்ல, அவர்களின் நற்செயல்கள்தான் கவனிக்கப்பட வேண்டும்


Post a Comment

Previous Post Next Post