.

தனது குடும்பத்திற்கும் தான் வாழும் சமூகத்திற்கும் நாட்டிற்கும் பல்வேறு வழிகளில் நேரடியாகவும் மறைமுகமாகவும் பங்களிப்புச் செய்து வரும் பெண்கள் தமக்குரிய அங்கீகாரத்தைப் பெறாது வாழ்வின் பல்வேறு கட்டங்க ளிலும் எதிர்நோக்கி வரும் ஒடுக்குமுறைகள் மற்றும் பாகுபாடுகளை முடிவுக்கு கொண்டுவந்து அவர்களது உரிமைகளைப் பாதுகாப்பதையும் அது தொடர்பில் உலகளாவிய ரீதியில் பரந்தளவில் விழிப்புணர்வை ஏற்படுத்துவதையும் நோக்காகக் கொண்டு ஐக்கிய நாடுகள் சபையால் முன்னெடுக்கப்பட்ட சர்வதேச மகளிர் தினம்  பிரகடனப்படுத்தப்பட்டுள்ளது.

காலங்காலமாக பெண்கள் குடும்ப மட்டத்திலும் சமூகத்திலும் அவர்களது தனிப்பட்ட திறமைகள் நிராகரிக்கப்பட்டு நான்கு சுவர்களுக்கள் தமது வாழ்க்கையை முடக்கிக் கொண்டு பாலியல் போகப் பொருட்களாக பிள்ளை பெறும் இயந்திரங்களாக வீட்டு வேலைகளைச் செய்யும் கொத்தடிமைகளாக அல்லும் பகலும் மாடாக உழைத்து தனக்கென ஒரு அடையாளமும் இல்லாமல் மண்ணோடு மண்ணாகிப் போன கதைகளுக்குமுற்றுப் புள்ளி வைத்து அவர் களது சுய கௌரவத்தையும் முக்கியத்துவத்தையும் நிலைநாட்டுவதை இந்த தினம் இலக்காக கொண்டுள்ளது.குறிப்பாக பாலின சமத்துவம், இனவிருத்தி தொடர்பான உரிமைகள்,பெண்களுக்கு எதிரான துஸ்பிர யோகங்கள் மற்றும் வன்முறைகள் என்பன தொடர்பில் கவனம் செலுத்துகிறது.

இன்றைய கால கட்டத்தில் தகவல் தொழில்நுட்பம் உள்ளடங்கலான இலத்திரனியல் தொழில்நுட்பங்கள் அன்றாட வாழ்வியலின் பிரிக்க முடியாத அம்சங்களாக மாறியுள்ளன. இந்நிலையில் அந்த தொழில்நுட்ப கல்வியையும் அது தொடர்பான தொழிற்றுறைகளில் உரிய தொழில் வாய்ப்பு, பதவி நிலை, மற்றும் வேதனத்தைப் பெறுவதிலும் பெண்கள் பாலின ரீதியில் பாரபட்சத்தை எதிர் கொண்டுள்ளதைக் கவனத்திற் கொண்டு நவீன தொழில்நுட்ப உலகின் தேவைப்பாடுகளுக்கு ஏற்ப அவர்கள் தமது இலத்திரனியல் தொழில்நுட்ப வாய்ப்புகளை பெற்று ஆண்களுக்கு நிகராக தமது திறமைகளை விருத்தி செய்து தம்மை வலுவூட்டிக் கொள்வதற்கு களம் ஏற்படுத்தித் தருவது இந்த வருட மகளிர் தினத்தின் நோக்காக உள்ளது. அத்துடன் இலத்திரனியல் தொழில்நுட்ப ரீதியில் பெண்களுக்குள்ள உரிமைகளைப் பாதுகாத்தல், தகவல் தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தி பாலின ரீதியில் மேற்கொள்ளப்படும் வன்முறைகள் குறித்து கவனமெடுத்தல் என்பனவும் இதில் உள்ளடங்குகின்றன.

ஐக்கிய நாடுகள் சபையின் பாலினம் தொடர்பான கடந்த ஆண்டு அறிக்கையானது பெண்கள் இலத்திரனியல் உலகில் உள்ளடக்கப்படாமை குறைந்த மற்றும் நடுத்தர வருமானம் பெறும் நாடுகளில் கடந்த ஒரு தசாப்த காலத்தில் ஒரு ட்ரில்லியன் அமெரிக்க டொலர் பெறுமதியான மொத்த உள்நாட்டு உற்பத்தியை இல்லாது செய்துள்ளதாக தெரிவிக்கிறது.இது தொடர்பில் நடவடிக்கை எடுக்கப்படாத விடுத்து 2025 ஆம் ஆண்டுக்குள் இந்தத் தொகை 1.5 ட்ரில்லியன் அமெரிக்க டொலராக அதிகரிக்கும் என எச்சரிக்கப்பட்டுள்ளது.

அத்துடன் இணையத்தளம் மூலமான வன்முறைகளைத் தடுக்க நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட வேண்டும் என வலியறுத்தப்பட்டுள்ளது. 51 நாடுகளில் மேற்கொள்ளப்பட்ட ஆய்வொன்றின் பிரகாரம் 38 சதவீதமான பெண்கள் இணையத்தளம் மூலமான வன்முறைகளை எதிர்கொண்டுள்ளனர்.

சர்வதேச மகளிர் தினம் ஐக்கிய நாடுகள் சபையின் அங்கீகாரத்தைப் பெற்று 1975 ஆம் ஆண்டு முதல் அனுஷ்டிக்கப்பட்டு வருகின்ற போதும், அதன் வரலாறு நீண்தாகும், பண்டைய காலம் முதற்கொண்டு குடும்ப, சமூக, மற்றும் தேசிய மட்டத்தில் பெண்களுக்கு எதிரான ஒடுக்குமுறைக அரங்கேற்றப்பட்டு வருகின்றன.

குற்றங்களுக்கு எதிராக நடவடிக்கை எடுக்க சட்டங்கள் இல்லாத பண்டைய காலத்தில் எதிரிகளை வெல்ல உடல் வலிமை முக்கிய காரணியாக கருதப்பட்டமை மற்றும் குழந்தையை 10 மாதம் கருவில் சுமந்து பெறும் அரிய வரப்பிரசாதத்தைப் பெற்ற பெண்களுக்கு தமது குழந்தைகளுடன் இயற்கையாக இருந்த பிணைப்புக் காரணமாக அக்குழந்தைகளை பராமரிப்பதற்கான பொறுப்பு ஒப்படைக்கப்பட்டமை மற்றும் குடும்ப நிர்வாகம், சமையல் உள்ளடங்கலான வீட்டுப்பணிகள் என்பன காரணமாக அவர்கள் வீட்டில் இருப்பதே உசிதமாக கருதப்பட்டது. பெண்கள் உடலியல் ரீதியில் பலவீனமானவர்களாக கருதப்படுகின்றமை, அவர்களுக்கே பிரத்தியேகமாகவுள்ள இனவிருத்தி ஆற்றலுடன் அவர்கள் எதிர்கொண்டுள்ள பல்வேறு சமூக நெருக்கடிகள், குடும்பப் பராமரிப்புப் பணி என்பவற்றைக் காரணம் காட்டி அவர்களை வீட்டுக்குள் பூட்டி வைக்க அன்றைய ஆணாதிக்க சமூகம் முடிவெடுத்ததன் பிரதிபலனை பெண்கள் இன்றும் அனுபவித்து வருகின்றனர்.


நாள் முழுவதும் வீட்டுப் பணிகளில் தம்மை மூழ்கடித்து தமது சொந்த நலன்,மகிழ்ச்சி, ஓய்வு என்பவற்றை பிறருக்காகத் தியாகம் செய்து மற்றவர்களுக்காக வாழ்வை அர்ப்பணித்து சேவையாற்றும் வகை தொகையற்ற பெண்கள் ஆணாதிக்க சமூகத்தில் தமது சேவைக்கும் உழைப்பிற்கும் உரிய அங்கீகாரத்தைப் பெறாது புறக்கணிக்கப்பட்டு பல்வேறு இன்னல்களை காலங்காலமாக அனுபவித்து வருகின்றனர்.

ஆணாதிக்க சிந்தனை எனும் போது அது ஆண்களுக்கு மட்டுமே உரியதல்ல என்பதை இங்கு கவனத்திற்கொள்ள வேண்டியுள்ளது. ஆண் குழந்தைகளை விட பெண் குழந்தைகள் கீழ்ப்பட்டவர்கள்,அவர்கள் ஆண்களுக்கு சேவகம் செய்ய தமது வாழ்வை அர்ப்பணிக்கக் கடமைப்பட்டவர்கள் எனக் கருதும் பெண்களும் இந்த ஆணாதிக்கவாதிகளில் உள்ளடங்குகின்றனர். குறிப்பாக ஆணாதிக்கவாத சிந்தனைக்கு தூபம்போட்டு வளர்ப்பவர்களாக பெண்கள் உள்ளமை இங்கு கவலைக்கிடமானதாகும்.

ஆணாதிக்க சமூகத்தில் தமது உரிமைளுக்காக குரல்கொடுக்கத் தயங்கி வாழ்ந்த பெண்கள் உலகளாவிய ரீதியில் 1760 ஆம் ஆண்டிலிருந்து சுமார் 1840 ஆண்டு வரையான கைத்தொழில் புரட்சியின் விளைவாக ஆடைத் தொழிற்றுறை உள்ளடங்கலான தொழிற்றுறைகளில் உள் வாங்கப்பட்டனர். இதன்போது குறிப்பிட்ட தொழிலில் ஒத்த தகைமை, திறனைகொண்ட ஆண்களுடன் ஒப்பிடுகையில் பெண்களுக்கு குறைந்த ஊதியம் வழங்கப்பட்டமை, ஒரு நாளில் 16 மணி நேரம் வரை பணியாற்ற நிர்ப்பந் திக்கப்பட்டமை என்பன காரணமாக பெண்கள் தமக்கு அநீதி இழைக் கப்படுவதை உணர்ந்தனர்.நிலத்தின் ஆழத்தில் கனன்று கொண்டிருக்கும் எரிமலைக் குழம்பு ஒரு நாள் குண் வெடித்துச் சிதறும் என்பது இயற்கை நியதியாகும்.

1789 ஆம் ஆண்டு பிரெஞ்சு புரட்சியின் போது பெண்கள் தமக்கென சமூக, தொழில் மற்றும் அரசியல் ரீதியில் அந்தஸ்துக் கோரி போராட்டக் களத்தில் இறங்கினர். அவர்கள் தமது உரிமைக்காக வலியுறுத்தி தமக்கென அரசியல் கழங்களையும் பத்திரிகைகளையும் ஆரம்பி முயற்சியில் ஈடுபட்டனர்.

இந் நிலையில் 1917 ஆம் ஆண்டு மார்ச் மாதம் ரஷ்யாவில் தற்போது சென் பீற்றர்ஸ்பேர்க்ரோகிரட்டில் என அறியப்படும் பெட்ரோகிரட்டில் பெண்களின் உரிமைகளை வலியுறுத்தி மிகப் பெரிய ஆர்ப்பாட்டமொன்று இடம்பெற்றது. இந்த ஆர்ப்பாட்டத்தில் 40,000 க்கு மேற்பட்ட பெண்கள் பங்கேற்றனர். 1910 ஆம் ஆண்டு டென்மார்க்கின் தலைநகர் கோப்பன்ஹேகனில் இடம்பெற்ற சர்வதேச மாநாட்டில் மார்க்ஸிஸ சிந்தனையாளரும் செயற்பாட்டாளருமான கிளாரா ஜெட்கின் மகளிரின் உரிமைகளுக்கு குரல் கொடுக்கும் வகையில் சர்வதேச தினமொன்று அனுஷ்டிக்கப்பட வேண்டும் என்ற கோரிக்கையை வைத்தார். அவரது இந்தக் கோரிக்கையை அந்த மாநாட்டில் கலந்து கொண்ட 17 நாடுகளைச் சேர்ந்த 100 க்கும் மேற்பட்ட பெண்கள் அங்கீகரித்தனர்.

இதனையடுத்து 1911 ஆம் ஆண்டு முதல் டென்மார்க், ஜேர்மனி, மற்றும் சுவிட் ஸர்லாந்து ஆகிய நாடுகளில் ரஷ்யாவில் உரிமை கோரி பெண்கள் புரட்சியில் ஏற்பட்ட தினமான மார்ச் 8 ஆம் திகதி பெண்கள் தினமாக கொண்டாடப்பட்டு வந்தது. அதைப் பின்பற்றியே ஐக்கிய நாடுகள் சபை சர்வதேச பெண்கள் தினம் கொண்டாடப்படும் திகதியை நிர்ணயித்தது.

உலகில் பிறக்கும் எந்தவொரு குழந்தையும் தனது பாலின வேறுபாடுகளுக்கு மேலாக சம உரிமைகளைக் கொண்டுள்ளது என்பது மறுக்க முடியாத நியதியாகும்.உலக சனத்தொகையில் பெண்களும் சிறுமிகளும் அரைப் பங்காக உள்ளனர். ஆனால் அவர்களது குரல், அனுபவம் மற்றும் பங்களிப்பு என்பன கவனிக்கப்படாமலும் குறைத்து மதிப்பிடப்பட்டும் வருகின்றன.

பெண்களது முன்னேற்றமானது வன்முறை, அரசியல், பொருளாதார வாய்ப் புகள் குறைவு மற்றும் சட்டத்தால் வேறுபட்ட நிலையில் வைக்கப்பட்டிருத்தல் என்பன காரணமாக பாதிக்கப்படும் நிலையில் காணப்படுகிறது.

அவர்கள் சட்டம், சமூகக் கட்டுப்பாடுகள்,பாலியல் ரீதியான தாக்குதல்கள் மற்றும் துன்புறுத்தல்கள், மத ரீதியான பழக்க வழக்கங்கள், வாக்குரிமை, தொழில் புரிவதற்கான வாய்ப்பு, ஊதியம், சொத்து உரிமை என்பவற்றில் பாகுபாடுகள் என பல்வேறு வழிகளில் ஒடுக்குமுறைகளையும் புறக் கணிப்புகளையும் அனுபவித்து வருகின்றனர். அத்துடன் உளவியல், உடலியல் மற்றும் பாலியல் ரீதியான பல்வேறு வன்முறைகளுக்கும் அவர்கள் இலக்காகி வருகின்றனர். உலகில் ஆங்காங்கே பெண்குழந்தை என்றால் கருவிலே அழிக்கும் செயற்கிரமம் குடும்ப கௌரவத்திற்காக படுகொலை, சீதனக் கொடுமை,பெண் உறுப்பு சிதைப்பு,கட்டாயத் திருமணம் வன்புணர்வு, கடத்தல்,அடிமைகளாக நடத்தல் என்பன இடம்பெற்று வருகிறன.

பெண் பிள்ளைகள் திருமணமானதும்   பிறந்த வீட்டைப் பிரிந்து கணவரது குடும்பத்துடன் இணைந்து வாழும் பாரம்பரியம்,பெண் பிள்ளைகளுக்கு திருமணத்திற்கு பெருமளவு சீதனம் வழங்க நேரிடுவது,பெண்களை சுமையாக கருதும் எண்ணப்பாடு என்பன காரணமாக குடும்பங்களில் பெண் பிள்ளைகளை விட ஆண் பிள்ளைகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கும் நடை முறை காணப்படுகிறது.

பெண்கள் அதிகளவில் கற்றால் அவர்களுக்குப் பொருத்தமான படித்த வாழ்க்கைத் துணையை தேடும் போது அதிக வரதட்சணை கொடுக்க வேண்டி நேரிடலாம் எனக் கருதி பல குடும்பங்களில் பெண் பிள்ளைகளுக்கு உயர் கல்வி வாய்ப்பை வழங்குவதற்கு ஆர்வம் காட்டாத நிலை தொடர்கிறது.

உள்நாட்டுப் போர் மற்றும் புலம்பெயர்வு போன்ற சந்தர்ப்பங்களிலும் பெண்கள் பாலியல் ரீதியான அச்சுறுத்தல்கள் உள்ளடங்கலாக பல்வேறு கொடுமைகளை அனுபவித்து வருகின்றனர். குறிப்பாக கொவிட்-19 கொரோனா வைரஸ் வைரஸ் தொற்றுக் அமுல்படுத்தப்பட்ட முடக்க காலத்தில் உளவியல் நிலையின் போது வீடுகளுக்குள் முடங்கியிருக்க நிர்ப்பந்திக்கப்ப ட்ட பெண்கள் குடும்ப அங்கத்தவர்களால் உளவியல் ரீதியிலும் உடலியல் ரீதியிலும் வன்முறைகளை எதிர்கொண்டு வந்துள்ளனர்.

அத்துடன் பால்மாற்ற சிகிச்சை செய்து கொண்ட பெண்கள், திருநங்கைகள் மற்றும் பெண் தன்னினச்சேர்கையாளர்கள் ஆகியோரும் பல்வேறு பாரபட் சங்களுக்கும் துன்புறுத்தல்களுக்கும் உள்ளாகி வருகின்றனர்.

உலகின் முதலாவது பெண் பிரதமராக ஸ்ரீமாவோ பண்டார நாயக்கவையும் பின்னர் பெண் ஜனாதிபதியாக அவரது மகள் சந்திரிக்கா குமாரதுங்கவையும் தந்த நாடு என்ற பெருமைக்குரிய இலங்கையைப் பொறுத்தவரை பெண்கள் தொடர்பில் அண்மைக் காலமாக முன்னேற்றம் அவதானிக்கப்பட்டு வருகி ன்றமை சிறிது ஆறுதல் அளிப்பதாக உள்ளது. இலங்கை சனத் தொகையில் 91.7 சதவீதமான பெண்கள் எழுத்தறிவாற்றல் பெற்றுள்ள நிலையில் ஆண்களில் அத்தொகை 90.8 சதவீதமாகவுள்ளமை குறிப் பிடத்தக்கது.

அத்துடன் ஐக்கிய நாடுகள் அபிவிருத்தி நிகழ்ச்சித்திட்டத்தின் பாலின சமத்துவமின்மை தொடர்பான சுட்டெண்ணிலும் இலங்கையில் பெண்களின் நிலை உயர்ந்துள்ளது. எனினும் பெண்கள் சமூக,தொழில் மற்றும் பொருளாதார ரீதியாக பாரட்சங்களை எதிர்கொள்வது தொடர்ந்து வருகிறது. கொவிட்-19 கொரோனா வைரஸ் தொற்றுக்கு முன்னர் இலங்கையில் தொழில் புரிவோர் தொகையில் 35 சதவீதமாக இருந்த பெண்களின் பங்களிப்பு 2022 ஆம் ஆண்டில் 32 சதவீதமாக வீழ்ச்சி கண்டுள்ளது.

உலக பொருளாதார மன்றத்தின் 2021ஆம் ஆண்டு பாலின ரீதியான பாரபட்சம் தொடர்பான அறிக்கையில், 156 நாடுகளில் 16 ஆவது நாடாக இலங்கை உள்ளது.முகாமைத்துவ பதவி நிலைகளில் பெண்களின் பங்களிப்பு 26 சதவீதமாகவுள்ளது.அதேசமயம் இலங்கையில் அரசியல் தீர்மானமெடுக்கும் தலைமைத்துவ பதவி நிலைகளில் பெண்களின் பிரதிநிதித்துவம் குறைவாக உள்ளது. பாராளுமன்ற ஆசனங்களில் சுமார் 5.4 சதவீதமான ஆசனங்களையே பெண்கள் வகிக்கின்றனர். அத்துடன் சமூக ரீதியான மற்றும் பாலின ரீதியான பாரபட்சம்,வீட்டு வன்முறைகள் என்பன உயர்வாக உள்ளன. இலங்கையில் பெண்களில் மூன்றில் ஒரு பகுதியினர் வீட்டு வன்முறைகளை அனுபவித்து வருகின்றனர். அத்துடன் கொலை செய்யப்பட்டு மரணமடையும் பெண்களில் 62 சதவீதமானவர்கள் வாழ்க்கைத் துணை மற்றும் குடும்ப உறுப்பினர்கள் உள்ளடங்கலான நெருங்கிய உறவினர்களாலேயே படுகொலை செய்யப் பட்டுள்ளனர். அந்தப் படுகொலைகளில் 75 சதவீதமானவை பாதிக்கப்பட்ட பெண்ணினது வீட்டிலேயே இடம்பெற்றுள்ளன. அதேசமயம் 24.9 சதவீத பெண்கள்  தமது வாழ்க்கைத் துணையால் உடலியல் அல்லது பாலியல் வன்முறை அல்லது வாழ்க்கைத் துணை அல்லாத ஒருவரால் பாலியல் வன்முறை என்பவற்றை எதிர்கொள்கின்றனர்.

ஐக்கிய நாடுகள் மனிதாபிமான விவகாரங்கள் ஒருங்கிணைப்பு அலுவலகத்தின் தரவுகளின் பிரகாரம் இலங்கையில் சுமார் 2.43 மில்லியன் பேர் போஷணைத் தேவைப்பாட்டில் உள்ளனர்.வரையறுக்கப்பட்ட வருமானம், விலை உயர்வு, உணவுப்பொருட்களுக்கான பற்றாக்குறை என்பவற்றை எதிர்கொள்ள 88 சதவீதமான பெண்கள் உண்ணும் உணவின் அளவைத் தாம் குறைத்துள்ளதாக ஆய்வொன்று தெரிவிக்கிறது. பாலூட்டும் தாய்மார் போஷணையின்மைக்குள்ளாவதால் கைக்குழந்தைகளும் போஷாக் கின்மையை எதிர்கொள்ள நேரிடுகிறது.

தற்போது நாட்டில் இடம்பெற்று வரும் வன்முறைகள், பணிப் பகிஷ்கரிப்புப் போராட்டங்கள், ஆர்ப்பாட்டங்கள்,உணவுப் பொருட்களின் விலை அதிகரிப்பு, எரிபொருள் விலை அதிகரிப்பு, மின்சாரக் கட்டணங்கள் மற்றும் போக்குவரத்துக் கட்டணங்கள் அதிகரித்தமை என்பன பெண்கள் மற்றும் சிறுமிகளது நலன்களைப் பாதிப்பனவாக உள்ளன.

இலங்கை அரசியலமைப்பின் 12 ஆவது உறுப்புரையானது ஆண்களும் பெண்களும் சமமாக நடத்தப்பட வேண்டும். என வலியுறுத்துகின்றது. இந்நிலையில் பெண்களின் உரிமைகளைப் பாதுகாப்பது குறித்து அரசாங்க மற்றும் சமூக மட்டத்தில் மேலும் காத்திரமான நடவடிக்கைகளை முன்னெடுப்பது அவசியமாகவுள்ளது. குறிப்பாக இந்த வருடத்தின் தொனிப்பொருளுக்கிணங்க இலத்திரனியல் தொழில்நுட்பத்தின் அங்கமா கவுள்ள சமூக வலைத்தளங்களால் பெண்கள் எதிர்கொண்டுள்ள உளவியல் மற்றும் பாலியல் ரீதியான பல்வேறு அச்சுறுத்தல்கள் குறித்துக் கவனமெடுப்பது காலத்தின் கட்டாயமாகவுள்ளது.



Post a Comment

Previous Post Next Post