.

புத்தகத்தின் பெயர்:- அறிந்தவர்களும்  அறியாதவைகளும்

ஆசிரியர்                :- என். சரவணன் 

நூல் வெளியீடு .    :- குமரன் புத்தக இல்லம் 

விலை:- '                  :-  700/

 பக்கம்                      :- 221

 பெறுவதற்கு           :- பாத்திமா புத்தகசாலை( 0094775494977)

ஊடகத்துறை , பத்திரிகைத்துறை, வாசித்தல், கட்டுரைகள் எழுதுதல், விமர்சனங்கள், நாவல்கள், தேடுதல், இவை எல்லாவற்றையும் தாண்டி, ஆவணப்படுத்துதல் என்பது ஒரு கலையாகவும் இருக்கலாம், ஒரு கொடையாகவும் இருக்கலாம், இடைவிடாத தேடலாகவும் இருக்கலாம், சலிப்புத்தட்டாத ஒரு உற்சாகமாகவும் இருக்கலாம். இவை அனைத்தையும் செய்து முடிக்கும் ஆற்றல் பலருக்கும் இருக்கலாம், (பல ஐரோப்பிய, ரஷ்ய, வட மற்றும் தென் அமெரிக்க, ஆசிய நாட்டவர்கள்) இவற்றில் தன்னை நிலை நிறுத்திக் கொண்டவர்களில் ஒருவர் தான் என். சரவணன்  என்ற படைப்பாளி.

அவரது  வரலாறு, அரசியல் சார்ந்த இந் நூலில் அவர் முழுக்க முழுக்க தேடலின் அடிப்படையில் பல அறிந்திராத இலங்கையில்  வாழ்ந்து மறைந்த ஆளுமைகளைப் பற்றி மிக நுட்பமான ஆதாரங்களுடன் நமக்கு அறியத் தருகிறார்.அதற்காகவே அவர் பல காலம் செலவு செய்திருப்பது இதில் காணக் கூடியதாக உள்ளது. அதற்காக அவரை மிகக் கடுமையாக வாழ்த்துகிறேன்.

ஆசிரியர் என். சரவணன் அவர்கள் தனது முன்னுரையில், பத்திரிகைத்துறையிலும் ஊடகத்துறையிலும் தன்னை மேம்படுத்தியவர்களை மிக ஆழமாக நினைவு கூர்வது, அவரது திறந்த மனதைக் காட்டுவது கவனிக்கத்தக்கது. மிகக் குறுகியகாலத்தில் முகப்புத்தகத்தின் மூலமாக அறியப்பட்ட அவரது எழுத்துக்களை வாசிக்கத் தூண்டியது. இலங்கை சார்ந்த பொக்கிஷங்களை அறிய, நண்பர்களே தேடுங்கள் அவரது வரிகளை.

இங்கே 25 வேறுபட்ட மனிதர்களின் வரலாறுகளை முன்வைக்கும் ஆசிரியர், அவர்களது பிறப்பு, தொழில், அது சார்ந்த அவர்களது உழைப்பு, அதனால் மக்களுக்கு ஏற்பட்ட நன்மை, தீமைகளை ஆராய்கிறார். இதில் விஜேசிங்க முதலியார்  என்பவரைத் தவிர மற்றைய 24 நபர்களும் அயல் தேசத்தை உடையவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

சாதி, சமய  ஒடுக்கு முறைகள் இன்றோ, நேற்றோ தோன்றியது அல்ல. அது பண்டைய காலம் தொட்டு நீண்ட கயிறு  போல் பல தலைமுறையாகத் தொடரும் ஒரு சீர்கேட்டை இங்கு பதிவாக்குகிறார். அதிலும் குறிப்பாக ரொடியர் என்ற ஒடுக்கப்பட்ட மக்களின் அவலங்களையும், அவர்களை அதிலிருந்து விடுபடக்கூடாது என்று பல வகைகளிலும் எதிர்ப்பு நடந்ததையும், பின்னர் அவர்கள் எப்படி அதிலிருந்து படிப்படியாக விடுலையானார்கள், அதற்கு வித்திட்டவர் யார் என்பதனைத் தேட, நண்பர்களே நூலை வாசியுங்கள், ஆச்சரியப்படவைக்கும் அரிய செய்திகளைக் காணலாம்.

பதூதா என்ற மொறக்கோ நாட்டைச் சேர்ந்த கல்வியாளர் (1341ல் இலங்கைக்கு வந்தார்) தொடக்கம், போத்துககேயர், ஒல்லாந்தர், இவர்களைத் தொடர்ந்து ஆங்கிலேயர், இவர்களது வருகையும் அதனால் ஏற்பட்ட மாற்றங்களையும், அதில் இடம்பெற்ற மிகப் பெரிய அறிவு, கல்வி, சீர்திருத்த வாதிகளின் வரலாறுகளை இங்கே ஆசிரியர் எம் கண் முன் கொண்டு வருகிறார்.

பிலிப்பு பால்டேஸ்  ஒரு டச்சு நாட்டு அமைச்சர், பின் அவர் ஒரு பாதிரியானார். ஒல்லாந்தர் இலங்கையைக் கைப்பற்றியதும் அவரை இங்கே அனுப்பியது. அதன்பின்னர் ஏற்பட்ட மதமாற்றம், சாதிய வேறுபாடுகள், ஒரு சாதி இன்னொரு சாதியை அடிமைப்படுத்திய விதம், குடும்ப இணைப்புகள் போன்றவற்றை இவரது காலகட்டத்தில் அறியக்கூடிய அருமையான தகவல்கள்

19 வருடங்கள் இலங்கையில் ஒரு கைதி போலவே வாழ்ந்த ரொபர்ட் நொக்ஸ் எப்படி அங்கிருந்து இங்கிலாந்துக்குத் தப்பிப் போனார், அதற்குரிய திட்டங்கள் என்ன? இடைப்பட்ட காலங்களில் அவரது வளர்ச்சி எப்படி, அவரது ஆரம்ப கடல்பயணங்களில் ஏற்பட்ட ஆபத்துக்கள், போன்ற வரலாற்றுச் சம்பவங்களை ஆசிரியர் தெழிவு படக் கூறுகிறார்.




கல்கிசையிலுள்ள மவுன்ட் லெவினியா என்ற பெயர் வரக் காரணமென்ன, அதற்கும் தேசாதிபதி மெயிற்லண்ட்  க்கும் என்ன தொடர்பு, இவர் மூலமாக ரொடியர்  சமூகத்தில் ஏற்பட்ட மாற்றங்கள், போன்ற அறிந்திராத பல  தகவல்களை ஆசிரியர் தருகிறார்.

1815 ல் கண்டி இராச்சியம்  ஆங்கிலேயர் வசம் பலத்த எதிர்ப்புகள் இன்றி வீழ்ந்தது. அதற்குரிய சூத்திரகாரன் யார்? கண்டி இராச்சியத்தைக் கைப்பற்ற என்ன வெல்லாம் தந்திரங்களைச் (உளவாளிகள் உட்பட) செய்தார், கடைசிக் கண்டி மன்னன் விக்கிரமசிங்கன் குடும்பத்தைக் கொழும்பில் வீட்டுக்காவலில் வைத்த பின்னர், பத்திரமாக இந்தியாவிலுள்ள வேலூருக்கு அனுப்பியது யார்? இலங்கையி லுள்ள பாரம்பரிய மன்னர் சொத்துக்களையும் இங்கிலாந்துக்குக் கொண்டு சென்றது யார்? இன்னும் பல முக்கிய காரணங்களுக்குப் பொறுப்பாய் இருந்தவர் சாட்சாத்  அந்த மனிதன் டொய்லி (Mr. John D'Oyly) தான்.

டொய்லியைப் பற்றி குறிப்பிடும் ஆசிரியர், இப்படியாக முடிக்கிறார், இலங்கையில் வரலாற்றில் டொய்லி ஒரு நயவஞ்சகன். ஆங்கிலேயர்களுக்கோ அதிக இரத்தம் சிந்தாமல் இலங்கையைக் கைப்பற்றக் காரணமாய் இருந்த சாணக்கியன்.

மேலும், பெர்கியூசன், வில்லியம் ஸ்கீன் ஹென்றி மார்ஷல் பிளாவ்ட்ஸ்கி, ஓல்கொட், மேரி ரட்ணம், இவர்களைப்போல் இன்னும் பல நிர்வாகத் திறமையுடையவர்களை ப்  பற்றியும் இன் நூல் சிறப்பிக்கின்றது என்றே சொல்லலாம்.

இங்கே மிக முக்கியமாக ஆசிரியர் *என். சரவணன் அவர்கள், இந்த ஆளுமைகள் இலங்கையில் இருந்தபோதும், வெளியே சென்றபோதும் பல நூல்களை  எழுதியுள்ளார்கள். அவற்றையெல்லாம் வரிசைப்படுத்தி, எந்த நோக்கத்திற்காக, மேற்கொண்டும் பல ஆய்வுக் கட்டுரைகளை எழுதுவதற்குப் பயன்படுத்தியமை பற்றிக் குறிப்பிடத் தவறவில்லை.

இங்கே அதிகமான நூல்களை சிங்கள மொழியில் அப்பப்போ மொழிமாற்றம் செய்யப்பட்டதுபோல், தமிழ் மொழியில் மாற்றம் செய்யப்பட்டுள்ளதா? என்ற கேள்வி என்னைக் கொஞ்சம் சிந்திக்க வைத்தது. இருந்த போதிலும், இவ்வளவு சிறப்பாக பல விடயங்களை வாசிப்பாளர்களுக்குக் கொடுத்ததையிட்டு ஆசிரியர் என். சரவணன் அவர்களுக்கு நன்றியையும் பாராட்டுக்களையும் மீண்டும் தெரிவிப்பதோடு, அறியப்படாத பல வரலாற்று நாயகர்களை அறிந்து கொள்வது நமது கடமை என்று சொல்லி, வாசிப்பாளராகிய நீங்களும் கண்டிப்பாக வாசிக்க வேண்டும் என்று கோரி நிறைவு செய்கிறேன்.

@பொன் விஜி 








2 Comments

Post a Comment

Previous Post Next Post