.

முன்னொரு காலத்தில் ஒரு நாட்டில் வாழும் மக்கள், இந்த உலகத்திலேயே தாங்கள்தான் பெரிய அறிவாளிகள் என்று நினைத்துக் கொண்டிருந்தனர். ஆனால், அவர்கள் அனைவரும் சரியான முட்டாள்கள் என்பது அவர்களுக்குத் தெரியாது.

ஒருநாள், அவர்கள் மரத்தால் ஒரு பெரிய வீடு கட்ட தீர்மானித்தனர். அதற்கான நல்ல மரத்தை தேர்ந்தெடுப்பதற்காக அவர்கள் காட்டுக்குப் போக முடிவு செய்தனர். அப்போது, அவர்களில் மிகவும் அதி புத்திசாலியான ஒருவன், 'நான் குதிரை வண்டியில் ஏறி முதலில் போகிறேன்.நீங்களெல்லாம் பின்னால் வாருங்கள்' என்றான்.எல்லாரும் அதை ஏற்றுக்கொண்டனர்.

அதி புத்திசாலி குதிரை வண்டியில் ஏறி காட்டுக்கு பாய்ந்து சென்றான். ஆனால், வழியில் அவன் குதிரை வண்டி ஒரு கல்லின் மீது ஏறியதால் கவிழ்ந்தது. அவன் கையிலிருந்த கோடரி தூரத்தில் சென்று விழுந்தது. அவனும் ஆழமான ஒரு குழியில் விழுந்துவிட்டான்.

குதிரை வண்டிக்குப் பின்னால் வந்த மற்ற அறிவாளிகள், அதி புத்திசாலியின் கோடரி வழியில் கிடப்பதைப் பார்த்தனர். அவர்களில் மிகச் சிறந்த அறிவாளி அவன்தான் என்பதால்,அவன் கோடரியை விட்டுச் சென்றதற்கு ஏதும் முக்கியமான காரணம் இருக்கும் என்று மற்றவர்கள் நினைத்தனர். அதனால், எல்லோரும் மரம் வெட்டுவற்காக தங்கள் கையில் எடுத்து வந்திருந்த கோடரியை அப்படியே போட்டுவிட்டு தொடர்ந்து சென்றனர்.

காட்டுக்குச் சென்று வெட்டுவதற்கு ஏற்ற மரத்தை தேர்ந்தெடுத்தனர். ஆனால், யார் கையிலும் கோடரி இல்லையே, பிறகு எப்படி மரம் வெட்டுவது? எல்லோரும் ஒன்றாக அமர்ந்து இதற்கு என்ன வழியென்று சிந்தித்தனர். அங்கிருந்தவர்களில் முக்கியமான அறிவாளி சொன்னான்.

'நான் ஒரு வழி கண்டுபிடித்திருக்கிறேன்.மரத்தை வெட்ட முடியவில்லை என்றாலும் நாம் மரத்தின் கிளையை ஓடிப்போம். இப்போது இருப்பதில் நான்தானே பெரிய அறிவாளி. அதனால் நான் முதலில் மரத்தில் ஏறி உறுதியான ஒரு கிளையைப் பிடித்து தொங்குகிறேன். அப்போது உங்களில் ஒருவர் என் காலைப் பிடித்து தொங்க வேண்டும். அவருடைய காலைப் பிடித்து மற்றொருவர் தொங்க வேண்டும். அப்படி நீண்ட சங்கிலி போல ஒருவர் காலை ஒருவர் பிடித்து தொங்கும் போது நம் பாரம் தாளாமல் கிளை ஒடிந்து கீழே விழும்' என்றான்.

அது மிகவும் நல்ல கருத்துதான் என்று எல்லோரும் ஏற்றுக்கொண்டனர். அவ்வாறு அந்த அறிவாளி பக்கத்திலிருந்த மரத்தில் ஏறி ஒரு உறுதியான கிளையைப் பிடித்து தொங்கினான்.அவன் காலை மற்றொருவன் பிடித்து தொங்கினான். அவன் காலை இன்னொருவன் பிடித்து தொங்கினான். இப்படியே எல்லோரும் ஒருவர் காலை ஒருவர் பிடித்து தொங்கினர். மிகப் பெரிய பாரத்தால் கிளை, எப்போது வேண்டுமானாலும் முறிந்து விடக்கூடிய நிலைக்கு வந்தது.அப்போது அறிவாளி சொன்னான்.

*நண்பர்களே, கிளை இப்போது ஒடிந்துவிடும்.அதற்கு முன்பு நான் இந்தக் கிளையை இன்னும் கொஞ்சம் பலமாக பற்றிக் கொள்கிறேன்' என்றான்.


கிளையை மேலும் வலுவாகப் பற்றிக்கொள்வதற்காக அவன் கையை சற்று அசைத்ததும் அவன் பிடி நழுவியது. எல்லோரும் கீழே விழுந்தனர். ஆனால், அந்த மரக்கிளையோ,முறியாமல் அப்படியே இருந்தது. இனி என்ன செய்வது என்று எல்லோரும் ஆலோசித்தனர்.அந்தக் கூட்டத்திலிருந்த வேறொரு அறிவாளி இப்படிச் சொன்னான், 

'நண்பர்களே, நாம் இந்த மரத்தின் கீழே தீ மூட்டுவோம். அந்த வெப்பத்தில் கிளை ஒடிந்து கீழே விழுந்து விடும்' என்றான்.

எல்லோரும் அது ஒரு சிறந்த கருத்துதான் என்று ஏற்றுக்கொண்டனர். அந்த அறிவாளி அவனிடம் இருந்த ஒரே ஒரு தீப்பெட்டியை வெளியே எடுத்தான். ஆனால், அவனுக்கு ஒரு சந்தேகம். தீக்குச்சி எரியவில்லை என்றால் என்ன செய்வது? அவன் ஒரு தீக்குச்சியை உரசி பற்ற வைத்துப் பார்த்தான். அது எரிந்தது. ஆயினும் அடுத்த குச்சி எரியவில்லையென்றால் என்ன செய்வது? அவனுக்கு மீண்டும் சந்தேகம் வந்தது. அடுத்த தீக்குச்சியையும் அவன் பற்ற வைத்துப் பார்த்தான்.அப்படி தீப்பெட்டியில் இருந்த எல்லா தீக்குச்சிகளும் தீரும் வரை அவன் உரசி உரசிப் பார்த்தான். கடைசியில் அவன் திருப்தியுடன் சொன்னான்,

*தீக்குச்சிகளெல்லாம் தீர்ந்துவிட்டன. ஆயினும் என்ன? எல்லா தீக்குச்சிகளும் நன்றாக எரியக்கூடியவைதான் என்று நமக்குத் தெளிவானது அல்லவா?' என்றான்.

முன்பு மரத்திலிருந்து விழுந்த அறிவாளி,மற்றொரு கருத்தைச் சொன்னான்,

 'நண்பர்களே, நான் முன்பு மரத்திலிருந்து கீழே விழுந்தபோது என் தலை கிளையில் மோதியது. அப்போது நான் நிறைய நட்சத்திரங்களையும் தீப்பொறிகளையும் பார்த்தேன்.

அதுபோன்ற தீப்பொறிகளை வைத்து நாம் இந்த மரத்தை எரிய வைக்கலாம். அதற்கு என்ன செய்ய வேண்டும்? நீங்கள் என் தலையில் மாறி மாறி அடிக்க வேண்டும். அப்போது நான் பார்க்கும் தீப்பொறிகளை நீங்கள் உடனே பிடித்து சேகரிக்க வேண்டும்'என்றான்.

நண்பர்கள் அதை ஏற்றுக் கொண்டனர். பிறகு அந்த அறிவாளியை மாறி, மாறி அடித்தனர்.அடி வாங்கும்போது அவன் நிறைய நட்சத்திரங்களையும் தீப்பொறிகளையும் பார்த்தான்.ஆனால், அதையெல்லாம் பிடித்து நண்பர்களிடம் கொடுப்பதற்கு அவனால் முடியவில்லை.

அவர்கள் மீண்டும் கூடி அமர்ந்து சிந்தித்தனர்.அவர்களில் ஒருவன் அப்போது நல்லபடியாகச் சிந்தித்தான். அவன் சொன்னான்,

'நண்பர்களே, நாம் திரும்பிச் சென்று, வழியில் போட்டுவிட்டு வந்த கோடரிகளை மீண்டும் எடுத்து வரலாம். அதைத் தவிர நமக்கு வேறு வழியில்லை' என்றான்.

அவ்வாறு அவர்கள் சென்று தங்கள் கோடரிகளுடன் திரும்பி வந்தனர். தேவையான மரத்தை வெட்டி எடுத்துக்கொண்டு கிராமத்துக்குச் சென்றனர். தங்களது புத்திசாலித்தனத்தை நினைத்து தங்களைத் தாங்களே மிகவும் மெச்சிக் கொண்டனர்.



Post a Comment

Previous Post Next Post