.

பறவைகளின் கூடுகளிலே அழகியல் திறனோடு அமைக்கப்படுவது தூக்கணாங்குருவிக் கூடு ஒன்றுதான்.நூற்றுக்கணக்கான வைக்கோல், நீளமான புல்கள், தென்னை நார்கள், ஈரக்களிமண்,மாட்டுச்சாணம், மின்மினிப்பூச்சி இவைகளால் சுமார் 3 வாரங்களாக முழு மூச்சுடன் இந்த கூடுகளை தூக்கணாங்குருவிகள் நெய்கின்றன.இந்த சேமிப்பிற்காக ஆயிரம் முறைக்கு மேல் பறக்கிறது.

கூடுகட்டி வாழும் பறவையினங்களில், வித்தியாசமான கூட்டமைப்பை உடைய தூக்கணாங்குருவி பறவைகள், கிராமப்பகுதிகளில் காணப்படும் கிணறுகளிலும்,உயர்ந்த மரங்களிலும் கிளைகளோடு பின்னிப் பிணைந்து இக்கூட்டினை உருவாக்குகின்றன.

இவை வாழிடத்தின் அருகில் உள்ள வயல் நிலங்களில் விளைந்து வரும் தானியங்களையும் புழுப் பூச்சிகளையும் தின்று உயிர் வாழ்ந்து வருகின்றன. இப்பறவைகளின் வித்தியாசமான கூட்டமைப்பே இப் பறவைகளுக்கு பெரும் ஆபத்தாகி விடுகின்றன. ஆம்! இக் கூட்டின் அமைப்பை இரசிப்பதற்காகவே சிறுவர்களால் இக்கூடுகள் அறுத்து எடுக்கப்படுகின்றன.கூட்டினை எடுக்கும்போது அக் கூட்டில் உள்ள முட்டைகளும் உடைக்கப்படுகின்றன. இதனால் குருவியினம் படிப்படியாக அழிவினை நோக்கி செல்லுகின்றன. மேலும் அப்பகுதியில் உள்ள விவசாயிகளால், பயிர்க்குச் சேதம் விளைவிப்பதாகக் கருதி அப்பறவையினங்கள் அழிக்கப்படுகின்றன.

இப்பறவைகள் தானியங்களை உண்பதைவிட தானியங்களில் காணப்படும் புழுப்பூச்சிகளையும்,வெட்டுக்கிளிகளையும் உணவாக உட்கொண்டு, பயிர்களைச் சேதத்திலிருந்து பாதுகாக்கின்றது.

தூக்கணாங்குருவியின் தலையில் காணப்படும் வெளிர் மஞ்சள் நிறத்தைக் கொண்டு ஆண், பெண் வேறுபாட்டினை அறியலாம். ஆண் பறவையின் தலையில் வெளிர் மஞ்சள் நிறம் இருக்கிறது. பெண் பறவைக்கு தலையில் வெளிர் நிற முடிகள் இல்லை.

எந்த பொறியியல் கல்லூரியில் பயின்றன இப் பறவைகள்? என்ற வினா எழுப்பும் விதமாக பொறியியல் தொழில் நுட்பக் கலைஞர்களின் அறிவுத்திறனை உள்ளடக்கியது போல் இப் பறவைகளின் கூடுகள் அமைந்துள்ளன.

முட்டைகள் இடுவதற்கு தனிப்பகுதி, பறவைகள் அமர்வதற்கு குறுக்குச் சட்டகம் போன்ற அமைப்பு காணப்படுகின்றன.கூட்டின் உள் பகுதியில் களிமண் பூசப்பட்டுள்ளது மேலும் கூடுகள்,சிறு நீண்ட புல், ஓலை நார்கள் போன்றவற்றால் அற்புதமாக வடிவமைக்கப்பட்டுள்ளன. மேலும் இக் கூட்டினை ஆண்பறவைகளே கட்டி முடிக்கின்றன.

இக்கூடுகள் பெரும்பாலும் கிணற்றின் உட்புறச் சுவர்களில் வளர்ந்துள்ள மரம் மற்றும் செடிகளின் கிளைப்பகுதிகளிலும்,தென்னை மரங்களின் ஓலைப் பகுதிகளிலுமே பெரும்பாலும் அமைந்திருப்பதைக் காண முடிகிறது. இதற்கான காரணம் பெரும்பாலும் கூடுகளை அந்நியர்களிடம் இருந்து காப்பாற்றுதற்காக இவ்வாறு கிணற்றுச் சுவர் மரங்களிலும், மிக உயரமான தென்னை மரங்களிலும்,முள் மரங்களிலும், கூடுகட்டுவதாக ஆய்வாளர்கள் கூறுகின்றனர்.

கூட்டம் கூட்டமாய் வாழும் சமூக முறையை இப்பறவைகள் பின்பற்றுகின்றன. தானியப் பயிர்களை சிறிதளவே உண்டாலும், பயிர்களுக்குப் பெரும் சேதம் விளைவிக்கும் புழுப் பூச்சிகளையே உணவாக உட்கொள்வதால், தானியப் பயிர்கள் புழுப்பூச்சிகளின் தாக்குதலில் இருந்து தப்பிக்கின்றன. இதன் மூலம் மறைமுகமாக விவசாயிகளுக்கு நன்மை செய்யும் பறவையாக தூக்கணாங்குருவி பறவைகள் காணப்படுகின்றன.ஆனால் அதை பெரும்பாலும் விவசாயிகள் அறிவதில்லையாம்.





Post a Comment

Previous Post Next Post