.

மழைக்காலம் வந்துவிட்டால் நுளம்புகளும் வந்து விடும் என்பார்கள். ஆனால், இன்று வெயிலோ மழையோ,நுளம்புக் கடிக்கு மட்டும் பஞ்சமே இல்லை. இலங்கையில் மழைக் காலத்திற்கு முன்னரே டெங்கு நோயின் தாக்கம் உக்கிர மடைந்துள்ள நிலையில் இனி வரும் நாட்களில் டெங்கு நுளம்புகளின் பெருக்கமும் டெங்கு நோயின் தாக்கமும் எந்தளவுக்கு மோசமானதாக இருக்கப்போகின்றது என்பது சொல்லித் தெரிய வேண்டியதில்லை.நகரங்கள், கிராமங்கள் என்ற வித்தியாசமின்றி நுளம்புக்கடிகளுக்கு ஆளாகாதவர்களே கிடையாது. குளியலறை முதல் படுக்கையறை வரை குளிரூட்டிகளை (ஏ.சி.) பயன்படுத்துபவர்கள் மட்டுமே நுளம்புகளிடமிருந்து தப்பிக்கின்றனர். ஏனையவர்களே நுளம்புக்கடிகளுக்கு உள்ளாகி டெங்கு, மலேரியா சிக்குன்குனியா நோயாளர்களாகின்றனர்.எனவே டெங்கு நுளம்புகளிடமி ருந்தும் டெங்கு நோயிடமிருந்தும் தங்களை .தங்கள் குடும்பத்தை பாதுகாப் பதற்காக மக்கள் இரசாயன நுளம்பு விரட்டி வழிமுறைகளையே பெரிதும் நாடுகின்றனர் .

மலேரியா, டெங்கு, சிக்குன்குனியா போன்ற உயிர்களுக்கு உலைவைக்கும் நோய்களை பரப்பி மனிதனை மரணத்தின் அருகே பயணம் செய்ய வைக்கும் சாதாரண நுளம்பை விரட்ட இயற்கையில் எத்தனையோ வழிமுறைகளை கையாண்டு பார்த்தாலும் மனிதர்களின் மனம் என்னவோ ஒரே நாளில் அத்தனை நுளம்புகளையும் அழித்துவிட முடியாதா? என்கிற சிந்த னையில்தான் ஆழ்ந்திருக்கிறது. உலகில் மொத்தமாக 2,700 வகை நுளம்புகள் இருப்பதாகச் சொல்கிறார்கள்.இலங்கையில் 140 வகை நுளம்புகள் இருக்கின்றன. ஆனால், நுளம்புகளிடமிருந்து நம்மைக் காப்பாற்ற நுளம்பு சுருள், லிக்குயிட் மேட்கள்,கிரீம், நுளம்பு பேட் போன்ற சில விஷயங்கள்தான் இருக்கின்றன.ஆனால் நுளம்புகளிடமிருந்து நம்மை பாதுகாக்கும் என நாம் நம்பும் அன்றாட தேவைகளில் அவசியமானதாகக் கருதப்பட்ட இந்த நுளம்பு விரட்டிகள் நம்மை பாதுகாப்பதனை விடவும் ஆபத்தை நோக்கியே தள்ளும் என எச்சரிக்கிறார்கள் மருத்துவர்கள்.

மக்களின் நுளம்புகளுக்கு எதிரான போரில் பலரின் முதல் தெரிவாக இரசாயன உற்பத்தி நுளம்பு விரட்டிகளான நுளம்பு சுருள், லிக்குயிட் மேட்கள், கிரீம் போன்றவையே உள்ளன.ஆனால் இவற்றை தினமும் பயன்படுத்துவதன் மூலம் டெங்கு நுளம்புகள், டெங்கு நோயிலிருந்து மக்கள் தப்பித்துக் கொண்டாலும் இந்த இரசாயன நுளம்பு விரட்டிகளிலிருந்து வெளிவரும் நச்சுப்புகையினால் பெரும் ஆபத்துக்களை எதிர்கொள்வதாக மருத்துவ நிபுணர்களினால் விடுக்கப்பட்டுள்ள எச்சரிக்கை இலங்கையர்களை கலங்க டித்துள்ளது.நுளம்புகளை விரட்ட நாம் பயன்படுத்தும் இரசாயன நுளம்பு விரட்டிகள் எமக்கு பல ஆபத்தான நோய்களை ஏற்படுத்துகின்றது என்றால் அதனை எங்களால் நம்ப முடிகிறதா?ஆனால் நம்பித்தான் ஆகவேண்டும் என்கின்றனர் மருத்துவ நிபுணர்கள்.நுளம்புகளை அழிக்க நுளம்பு சுருள் மேட், லிக்குயிட் என்று நுளம்பு விரட்டிகள் பரிணாமம் எடுத்துள்ள போதும் நுளம்பு களினால் வரக்கூடிய நோய்களுக்கு இணையாக நுளம்பு விரட்டிகளால் ஏற்படும் நோய்களின் எண்ணிக்கையும் அதிகரிப்பதுதான் அதிர்ச்சி.

இரசாயன நுளம்பு விரட்டிகள் உடலுக்கு தீங்கு விளைவிக்க கூடியவை என்று மருத்துவ நிபுணர்கள் ஏற்கனவே எச்சரிக்கை விடுத்திருந்தபோதிலும், ஒரு நுளம்பு சுருளிலிருந்து வரும் புகையை சுவாசிப்பது 100 சிகரெட்டு புகையை சுவாசிப்பதற்கு சமமானது என்று ஆய்வு ஒன்றில் தெரியவந்துள்ளது.மலேசியா வில் உள்ள இருதய ஆராய்ச்சி அறக்கட்டளை ஒன்று நடத்திய ஆய்விலேயே இந்த அதிர்ச்சியான தகவல் தெரியவந்துள்ளது.நுளம்பு சுருளின் ஆபத்தை மக்களில் ஏராளமானோர் உணராமலேயே உள்ளனர்.ஆனால் இந்த நுளம்பு சுருளிலிலிருந்து வரும் புகை நுரையீரலை வெகுவாக பாதிக்கிறது.அதாவது ஒரு நுளம்புசுருளின் புகை, 100 சிகரெட்டுகளை புகைப்பதினால் ஏற்படும் பாதிப்புக்கு சமமானதாக உள்ளது என்று அதிர்ச்சி குண்டை வீசுகிறார் இந்த ஆய்வை மேற்கொண்ட மேற்கூறிய ஆய்வு மையத்தின் இயக்குநர் சந்தீப் சால்வி.



இதேவேளை, நுளம்பு மேட்டில் இருந்து வெளிவரும் புகையை கைக் குழந்தைகள் சுவாசித்தால், அவர்களுக்கு வலிப்பு நோய் ஏற்படுவதற்கான வாய்ப்புகள் இருப்பதாக கூறி எச்சரிக்கிறது லக்னோ பல்கலைக்கழகத்தில் நடத்தப்பட்ட ஆய்வு.அதேபோன்று மும்பையில் நடத்தப்பட்ட ஒரு ஆய்வில், நுளம்பு விரட்டிகளில் பயன்படுத்தப்படும் இரசாயனம் சிலருக்கு மலட்டுத் தன்மையை ஏற்படுத்தக்கூடியது என்பதும் இதுதவிர,நுளம்பு விரட்டியில் உள்ள டயேக்சின் புற்று நோயையும் அலெத்ரின் மனிதர்களின் உடல் எடையை மெல்ல மெல்ல இழக்கச் செய்யும் தன்மை கொண்டது என்றும் ஆய்வுகள் தெரிவிக்கின்றன.அதுமட்டுமன்றி தற்போது நுளம்புகளை விரட்டுவதற்காக பயன்படுத்தப்படும் நுளம்பு சுருள்கள் நீரிழிவு நோயை ஏற்படுத்துவதாக இந்திய ஆராய்ச்சியாளர்கள் கண்டுபிடித்துள்ளனர்.இந்த நுளம்பு சுருள்கள் ஆஸ்துமா, புற்றுநோய், இதய நோய்கள், வாதங்கள் ஆகியவற்றை ஏற்படுத் துவதோடு இன்சுலின் அளவை குறைத்து வருவதாகவும் கண்டறி யப்பட்டுள்ளது.

மக்கள் நுளம்புகளுக்கு பயந்து மாலை ஆறுமணிக்கே வீட்டு ஜன்னல் கதவுகளை எல்லாம் மூடி விட்டு புதிய காற்று வீட்டுக்குள் வருவதை தடைசெய்து விடுகின்றனர்.இவ்வாறு அடைபட்ட வீட்டுக்குள், காற்றுக் குள்ளேயே விளக்கு எரிப்பது, சமைப்பது,குடும்பத்தார் அனைவரும் சுவாசிப்பது போன்ற செயல்களாலேயே பிராண வாயு மிகவும் குறைந்து விடுகிறது.இதோடு புகையும், கேடு விளைவிக்கும் வாயுக்களும் வீட்டினுள் நிறைந்து விடுகின்றன.போதாக்குறைக்கு இருட்டியதுமே நுளம்பு விரட்டி களையும் பயன்படுத்த ஆரம்பித்து விடுகிறார்கள்.இதனால் வீட்டில் இருந்த சிறிதான பிராண வாயுவும் கெட்டுவிடுகிறது. ஆக, இரவு முழுவதையும் மாசுக் காற்று உள்ள சூழ்நிலையிலேயே கழிப்பதும் உடலுக்கு ஆபத்தானது என்கி ன்றனர் மருத்துவர்கள்.

அதிக ஆபத்தானது எது ?

மிக மோசமான பாதிப்புகளைத் தரும் நுளம்பு விரட்டிகளில் முதல் இடம் பிடிப்பது நுளம்பு சுருள்தான்.நுளம்பு சுருளில் பயன்படுத்தப்படும் இரசாயனங்கள், மிக மிக வீரியமிக்கவை. பூச்சிக்கொல்லிகளான பைரெத்ரம்,டை, ஃபங்கிசைட் போன்ற பல இரசாயனங்களைப் பயன்படுத்தி இவை செய்யப்படுகின்றன. இதிலிருந்து வெளிவரும் கார்பன், புற்றுநோயை வரவைக்கும் காரணியாக (Carcinogenic) உள்ளது. இதனால்,நுரையீரல் வீக்கம், இருமல், சளி, மூச்சுத்திணறல்,தொண்டை வலி, ஆஸ்துமா, கண் எரிச்சல், குமட்டல், நெஞ்சகம் தொடர்பான பாதிப்புகள் போன்றவை வரும்.தொடர்ந்து இந்தப் புகையை தினமும் சுவாசிக்கையில், மூக்கு தொடர்பான புற்றுநோய், நுரையீரல்,தொண்டை மற்றும் சுவாசக் குழாய் தொடர்பான புற்று நோய்கள் வரலாம்.மேலும், நுளம்பு சுருள் எரியும்போது,உணவுகளை மூடி வைக்கவில்லை எனில், இந்த இரசாயனங்கள் உணவில் படர்ந்து, வயிறு தொடர்பான பிரச்சினைகளையும் உருவாக்கிவிடும்.

நுளம்பை விரட்டும் மருந்து, திரவ வடிவில் கிடைப்பதைத்தான் லிக்குயிட் என்கிறோம்.இதன் நடுவில் இருப்பது கிராபைட் உருளை. திரவத்தில் நனைந்திருக்கும் உருளை மின்சார உதவியால் சூடாகும்போது, இரசாயனங்கள் ஆவியாகிக் காற்றில் கலக்கின்றன. இந்த வாசத்தால் நுளம்பின் உணர்வுப் புலன்கள் வேலை செய்யாமல் போவதால், நுளம்புகள் மனிதர்களை நெருங்குவது இல்லை.மேலும், இதில் பிரலெல்த்ரின்(Prallelthrin), அலெத்ரின் (Allethrin) போன்ற பூச்சிக் கொல்லிகள் பயன்படுத்தப்படுவதால், தொடர்ந்து நாம் சுவாசிக்கும் போது, சுவாசப் பாதையில் பிரச்சினை, பெருங்குடல் பாதிப்பு, அலர்ஜி, மூக்கில் நீர் வழிதல் மற்றும் நுரையீரல் பாதிப்பு, வீக்கம் போன்ற பாதிப்புக்கள் வரும்.சிலருக்கு இந்தப்பாதிப்புக்கள் அதிகமாகி தொற்றுக்களாகவும் மாறலாம்.இதுவே சிலருக்கு சைனஸாக மாறும் ஆபத்தும் உள்ளது.இதனால் அடிக்கடி தொண்டை வலி, இருமல், சளி போன்ற தொல்லைகளும் இருந்துகொண்டே இருக்கும்.அடுத்தது நுளம்பு மேட்.இது சிப் போன்ற வடிவில் கிடைக்கிறது. இதுவும் மின்சார உதவியோடு சூடாகி,மேட்டில் உள்ள இரசாயனங்கள் ஆவியாகி காற்றில் கலக்கின்றன.இதிலும் பைரெத்ரம், அலெத்ரின் போன்ற இரசாயனங்கள் கலக்கப்படுகின்றன இதனை நாமும் சுவாசிப்பதினால் தொடர் தலைவலி, வீசிங், இருமல்,கண் எரிச்சல் போன்ற உபாதைகள் ஏற்படும்.

மருத்துவர்கள் சொல்வது என்ன?

இது தொடர்பில் நுரையீரல் நோய் சிகிச்சை நிபுணர் வினோத்குமார் கூறுகையில்,நுளம்புகளை விரட்ட பெரும்பாலான மக்கள் நுளம்பு சுருளை பயன்படுத்துகிறார்கள். நுளம்பு சுருள் அலெத்ரின், ஈஸ்பயோத்ரின் போன்ற செயற்கையான வேதிப் பொருட்களால் செய்யப்படுகிறது. இந்த நுளம்பு சுருளை மணிக்கணக்காக பூட்டிய அறைக்குள் எரியவிடும் போது தலைவலி, கண் எரிச்சல் போன்றவை ஏற்படும்.

தொடர்ந்து பயன்படுத்தி வந்தால் மூக்கிலும் கண்களிலும் நீர் ஒழுகுதல், மூச்சி ரைப்பு போன்றவை ஏற்படும்.தொண்டையில் வலி, அலர்ஜி, எரிச்சல், நோய்த் தொற்று ஏற்படும். வறட்டு இருமல் அதிகமாக வரும். 'சைனசிடிஸ்' ஏற்பட்டு மூக்கு அடைத்துக்கொள்ளும். சில நேரம் மூக்கின் உள்ளே தொற்றுக்கிருமிகள் அதிகமாகி சீழ் கூட பிடிக்கலாம்.ஆரம்ப அறிகுறிகளின் போதே அலர்ஜி உள்ளவர்கள் நுளம்பு சுருள் பயன்படுத்துவதை நிறுத்திவிட்டு மருத்துவரைப் பார்த்து உரிய சிகிச்சையை எடுத்துக் கொள்ள வேண்டும்.

நுளம்பு சுருளில் இருந்து வரும் புகையால் நுரையீரலும் பாதிப்படைகிறது. நுளம்பு சுருள் புகை நுரை யீரலை அழற்சி அடையச் செய்து ஆஸ்துமா நோயை ஏற்படுத்துகிறது.இதனால் சிலருக்கு 'ஆஸ்த்மடிக் அட்டாக் கூட ஏற்படும்.இந்த புகையை தொடர்ந்து இதை சுவாசித்தால் நுரையீரலில் ஏற்படும் பாதிப்புகள் புற்று நோயாகக் கூட மாறலாம்.

சிலர் நுளம்புகளை விரட்ட மின்சாரத்தில் இயங்கும் திரவங்களைப் பயன்படுத்துவார்கள்.இதுவும் முற்றிலும் பாதுகாப்பானது என்று சொல்ல முடியாது.இவற்றை உபயோகித்தால் அறை மற்றும் ஜன்னல் கதவை கொஞ்சமாக திறந்து வைக்க வேண்டும்.அறையில் காற்றோட்டம் இல்லையென்றால், நுளம்பு விரட்டித் திரவங்களும் தும்மல், கண் எரிச்சல், மூச்சுவிடுவதில் சிரமம் போன்ற பிரச்சினைகளை ஏற்படுத்தும்.நுளம்புகளை விரட்டும் க்ரீம்களை தடவிக் கொள்வது கூட சிலருக்கு தோலில் ஒவ்வாமையை ஏற்படுத்தக்கூடும்.

எனவே நுளம்புகளை விரட்ட நல்ல தரமான துணிகளில் தயாரிக்கப்பட்ட நுளம்பு வலைகளை பயன்படுத்தலாம்.விலை மலிவான நுளம்பு வலைகளை பயன்படுத்தினால் போதிய காற்றோட்டம் இல்லாமல் மூச்சுவிடுவதில் பிரச்சினை ஏற்பட்டு தூக்கம் பாதிக்கும் என்கின்றார்கள் மருத்துவர்கள்.

நுளம்புகளை விரட்டக் கடைகளில் விற்கப்படும் நுளம்பு சுருள்,மேட், லிக்குயிட் போன்றவை நம் ஆரோக்கியத்துக்குப் பாதிப்பை ஏற்படுத்துகின்றன.எல்லா நுளம்பு விரட்டிகளிலும் பைரேத்ரின் எனும் வேதிப்பொருள் கலந்திருக்கும். நுளம்பு சுருளில் இருந்து வரும் புகையையோ அல்லது லிக்குயிட், மேட்டிலிருந்து வரும் வாசனையையோ சுவாசிப்பவர்களுக்கு சைனஸ் அலர்ஜி ஏற்படலாம். இதனால் ஆஸ்துமா நோய் உண்டாகும் வாய்ப்பும் இருக்கிறது. ஏற்கெனவே ஆஸ்துமாவால் பாதிக்கப்பட்டவர்களுக்கு நோயின் வீரியம் இன்னும் அதிகமாகி, சட்டிக்குள்ளிருந்து அடுப்பிற்குள் விழுந்த கதையாகிவிடும். நுளம்புகளிடமிருந்து தப்பிக்க நுளம்பு வலைதான் சிறந்தது. அல்லது நுளம்பு பேட் பயன்படுத்தியும் நுளம்புகளை அழிக்கலாம் என்கிறார் ஆஸ்துமா, அலர்ஜி சிறப்பு மருத்துவர் ஸ்ரீதரன்.

புகை வடிவிலான நுளம்பு விரட்டிகளால் இத்தனை ஆபத்து என்றால், சருமத்தில் பூசும் கிரீம், எண்ணெய் வடிவில் கிடைக்கும் நுளம்பு விரட்டி களினால் ஏற்படும் ஆபத்துக்கள் என்னவென சரும மருத்துவர் ஆர்த்தி விளக்குகையில் .
குழந்தைகள் இருக்கும் வீட்டில் புகை வடிவிலான நுளம்பு விரட்டிகளைப் பயன்படுத்தவே கூடாது.பிறந்த மூன்று மாதங்கள் வரை குழந்தைகளுக்கு, சரும கிரீம்கள் மற்றும் எண்ணெய் வகைகளை பயன்படுத்த வேண்டாம்.நுளம்பு வலைதான் சிறந்தது.மூன்று மாதங்கள் முதல் ஒரு வயது வரை உள்ள குழந்தைகளுக்கு,வெட்டிஷ்யூ (ஈர டிஷ்யூ) போன்ற நுளம்புகளிடமிருந்தும் காக்க பிரத்யேக 'நுளம்பை விரட்டும் டிஷ்யூக்கள்) மருந்தகங்களில் கிடைக்கின்றன.இவற்றை வாங்கிப் பயன்படுத்தலாம்.ஒரு வயதுக்கு மேற்பட்ட குழந்தைகளுக்கு மருத்துவர் ஆலோசனையுடன் கிரீம்களைப் பயன்படுத்தலாம். பெரியவர்கள், வாசனையற்ற நுளம்பு விரட்டி கிரீம்களை பயன்படுத்தலாம்.எந்த அலர்ஜிகளும் ஏற்படாத ஆரோக்கியமான சருமம் என்றால் மட்டுமே, கிரீம்கள் மற்றும் எண்ணெய் வகைகளைப் பயன்படுத்தவேண்டும்.ஆனால், அலர்ஜி சருமத்தினர் இத்தகைய கிரீம்களைப் பயன்படுத்துவதைத் தவிர்ப்பதே நல்லது.இந்த கிரீம் மற்றும் எண்ணெய் வகைகள் சிலருக்கு கண் எரிச்சல், தடிப்பு, சரும எரிச்சல், சின்ன சின்ன வீக்கங்கள் போன்ற பின்விளைவுகளை ஏற்படுத்தும் என்கிறார்.

இப்போது நாம் இரசாயன பூச்சிகொல்லி புகை இயந்திரம் மூலம் அடிக்கும் புகையெல்லாம் நுளம்புகளுக்கு பொடி ஸ்பிரே மாதிரி உள்ளது.இவற்றால் நுளம்புகளை அழிக்க முடிவதில்லை.இந்த மருந்துகளுக்கு எதிர்ப்பு சக்தியை நுளம்புகள் பெற்றுவிட்டமை தான் காரணம்.இரசாயன புகை இயந்திரத்தினாலேயே அழிக்க முடியாத நுளம்புகளை நாம் வீட்டில் வைக்கும் நுளம்பு விரட்டிகள் அழித்துவிடாது.அதனால் தான் நுளம்புகள் இப்போது இவற்றைக் கண்டு அலட்டிக்கொள்வதில்லை.ஆனால், இவற்றிலுள்ள இரசாயனங்கள் நம் உடலைத்தான் பாதித்துக் கொண்டிருக்கின்றன. எனவே வீட்டு ஜன்னல்களுக்கு வலை போடுதல், படுக்கையில் நுளம்பு வலை கட்டுதல் போன்றவற்றின் மூலம் ஓரளவுக்கு நாம் நுளம்புகளிடமிருந்து தப்பிக்கமுடியும்.இவற்றைவிட குளம், குட்டை, நீர் நிலைகளில் கம்பூசியா மீனை வளர்ப்பதால் இவற்றில் வளரும் நுளம்புகளின் லார்வாவை இந்த மீன்கள் உண்பதனால் நுளம்பு பெருக்கத்தை குறைக்க முடியும்.வால்பாஷியா கிருமி மூலம் மலட்டுத்தன்மை உள்ள ஆண் நுளம்புகளை உருவாக்கி அவற்றை வெளியே விடுவதன் மூலம் அவை சேரும் பெண் நுளம்புகள் முட்டையில் இருந்து புதிய நுளம்புகள் உருவாகாமல் தடுக்க முடியும். நுளம் புகள் பெருகுவதற்கு ஏற்ற சுற்றுசூழலை முதலில் தவிர்க்க வேண்டும். நுளம்பு ஒழிப்பு என்றாலே, இது அரசாங்கத்தின் வேலை என்று நினைத்து பழியை போடுகிறோம். இது தவறான அணுகுமுறை. எமது குடும்பத்தை பாதுகாக்க நாம் ஒவ்வொருவரும் நுளம்பு பெருக்கத்தை கட்டுப்படுத்த செயற்படுவது அவசியமும் அவசரமும் கூட என்கிறார் டாக்டர் சு. செல்லக்குமார்.

உபாதைகளை ஏற்படுத்தும் இரசாயனம் கலந்த நுளம்பு விரட்டிகளைத் தவிர்த்து, இயற்கை முறையிலேயே நுளம்புகளிடமிருந்து நம்மைப் பாதுகாத்துக் கொள்ளலாம். மனிதனின் மேலிருந்து வரும் வாடை, வியர்வை துர்நாற்றம், கார்பன்டை ஒக்சைட் போன்றவற்றால்தான் நுளம்புகள் நம்மை அடையாளம் காண்கின்றன.பொதுவாக, நுளம்பு இலையால், புழு போன்ற பூச்சிகள், கழிவுகள் நிறைந்த இடத்தையே சுற்றித் திரியும். தூய்மையான ரத்தம் இல்லாதவர்களையும் உடலில் அதிக அளவு கழிவுகள் சேர்ந்தி ருப்பவர்களையும் நுளம்புகள் அதிகமாக கடிப்பதும் இதனால்தான். எனவே உடலைத் தூய்மையாகவும்,நச்சுக்கள் இல்லாத உடலாகவும் பராமரித்தால் இர
சாயன நுளம்பு விரட்டிகள் என்ற ஆபத்து நமக்கு தேவையற்றதாகி விடும் என்கிறார் சித்த மருத்துவரான குமுதா.

மாற்று வழிகள் என்ன?

வீட்டில் உள்ள அறைகளை காற்றோட்டமாக வைக்க வேண்டும். ஜன்னல்களை இறுக மூடி வைக்கக் கூடாது.ஜன்னல்களில் சிறிய நுண்துளையுள்ள நுளம்பு வலைகளை அடித்து வைப்பதால் காற்றோட்டமும் இருக்கும்.நுளம்புகளும் உள்ளே வராது.வீட்டின் உள்ளே மட்டும் சுத்தமாக வைத்துக்கொண்டால் போதாது.வீட்டைச் சுற்றி கழிவுகள், குப்பைக் கூளங்கள் சேராமல் பார்த்துக் கொள்வது அவசியம்.நுளம்புகளை நேரடியாக அடித்துக்கொல்லும் பேட்டரி, சார்ஜரில் இயங்கும் பேட் இப்போது கிடைக்கிறது.டென்னிஸ் பேட் வடிவத்தில் இருக்கும்.இதனை பயன்படுத்துவதால் நுளம்புகளிடம் இருந்து எளிதாக தப்பிக்க முடியும்.தரமான நுளம்பு வலைகளை படுக்கையறையில் பயன்படுத்தவேண்டும்.

பொதுவாக அனைத்து வகை நுளம்பு விரட்டிக ளையும் தவிர்ப்பதே நல்லது.நுளம்புகள் அதிகமாக இருந்தால், படுக்கும் அறைக்குச் செல்லும் இரண்டு மணி நேரத்துக்கு முன்பே, நுளம்பு விரட்டியை அது நுளம்பு சுருளாக இருந்தால் புகைய வைத்துவிட்டு அல்லது மின் விரட்டியாக இருந்தால் அதனை இயக்கிவிட்டு, அறைகளின் கதவு, ஜன்னல்களை மூடிவிட வேண்டும்.படுக்கச் செல்லும் ஒரு மணி நேரத்துக்கு முன்பு, அந்த அறையில் உள்ள கதவு ஜன்னல்களை திறந்துவிட்டு, அந்த புகை முழுவதும் வெளியேறிய பிறகு, படுக்கச் செல்லலாம்.இதனால், இரசாயன விரட்டிகளால் வரும் பின் விளைவுகளை ஓரளவுக்குத் தடுக்கலாம்.இவை எல்லாவற்றையும் விட நுளம்புக்கடி,நுளம்பு பரப்பும் நோய்கள், நுளம்பு விரட்டியால் வரும் ஆபத்துக்களை கணக்கில் எடுத்து இவற்றிலிருந்து நாமும் எமது குடும்பமும் தப்பிக்க உள்ள ஒரேவழி நாம் நுளம்பு வலைக்குள் தஞ்சமடைவது மட்டுமே.









Post a Comment

Previous Post Next Post