.

நவீன எழுத்து உத்திகள். இஸ்லாமிய மக்களின் வாழ்வியலைச் சொல்லும் கதைகள் ஆகியவற்றை தன் அடையாளங்களாகக் கொண்டுள்ள கீரனூர் ஜாகிர் ராஜாவின் 'இத்தா' நாவல்,பலராலும் அறியப்படாத புதிய விடயத்தின் மீது வெளிச்சம் பாய்ச்சுகிறது.கணவனை இழந்த அல்லது மணவிலக்கு பெற்ற பெண் மறுமணம் செய்துகொள்ள இஸ்லாம் அனுமதிக்கிறது. மறுமணத்துக்கு முன் கருவுற்றிருக்கிறாரா இல்லையா என்பதை அறிவதற்காக அந்தப் பெண் காத்திருக்கும் இடைக்காலமே 'இத்தா'. இந்த இத்தா காலத்தில் அந்தப் பெண் தன்னை தனிமைப்படுத்திக் கொள்ள வேண்டும், ஆண்களைச் சந்திக் கக்கூடாது. குறைவான வெளிச்சமுள்ள அறையிலேயே வசிக்கவேண்டும். அலங்காரம் செய்துகொள்ளக்கூடாது என்பது போன்ற பல நிபந்தனைகள் உள்ளன.

கோவையைச் சேர்ந்த நியாஸ் என்ற இளைஞன் குண்டு வெடிப்புக்குக் காரண மானவன் என்று மண மேடையிலேயே கைது செய்யப்படுகிறான். 4 ஆண்டுக ளுக்கும் மேலாக தன் மாமனார் வீட்டில் காத்துக் கிடக்கிறாள் அவன் மனைவி மரியம். ஒருகட்டத்தில் தன் மருமகளுக்கு மறுமணம் செய்துவைக்க மாமனார் காதர் முடிவெடுக்கிறார். மறுமணம் செய்வதற்கு முன்பு மரியம் 'இத்தா'வை கடைப்பிடிக்க வேண்டும் என்கிறார் ஜமாத் தலைவர், மணமேடையிலேயே கைது செய்யப்பட்ட கணவன், எந்தவித உறவும் இல்லாத நிலையில் 'இத்தா' மேற்கொள்வது அவசியமா என்கிற கேள்வி தொடங்கி பல்வேறு கேள்விகளை மரியம் பாத்திரத்தின் மூலம் முன் வைக்கிறார் கீரனூர் ஜாகிர் ராஜா.

இஸ்லாமிய மக்களின் வாழ்க்கை,இஸ்லாமியப் பெண்களின் மனநிலை. கோவை குண்டுவெடிப்பில் கைது செய்யப்பட்ட அப்பாவி முஸ்லிம்களின் குடும்பங்கள் படும்பாடு என்று பல்வேறு விடயங்களையும் பேசுகிறது 'இத்தா நாவல், குறிப்பாக மரியத்துக்கும் நபிகள் நாயகத்துக்கும் இடையில் நடத்தப்படும் கற்பனை உரையாடல்கள் சுவாரஸ்யமானவை, பல்வேறு புரிதல் களுக்கான திறப்பாக இருக்கும் அந்த உரையாடல், அதேநேரம் முடிவற்ற கேள்விகளையும் விட்டுச்செல்கிறது.

மரியம், ஆமினா என்னும் இரு வெவ்வேறு வயதுள்ள பெண்களின் மனநிலை யில் உள்ள வித்தியாசங்களை சரியாக சித்திரித்துள்ளார் ஜாகிர் ராஜா. ஒரு முஸ்லிம் பெண்ணாக தன் மருமகளின் மறுமணத்தை அங்கீகரிக்கும் அதே சமயம்,ஒரு தாயாக, தன் மகன் வந்துவிடுவான்,மறுமணத்தை நிறுத்தி விடலாம் என்று நினைக்கும் ஆமினா பீவியின் மனநிலை யதார்த்தமானது. மரியம் குடும்பத்தைச் சுற்றியே நகரும் கதை. கோவை குண்டு வெடிப்பில் சிறைப்பட்டுள்ள அப்பாவிகளின் வாழ்க்கை, அதன் பின்னுள்ள அரசியல் குறித்து இன்னும் விரிவாகப் பதிந்திருக்கலாம். ஒரு பெண்ணுக்கான சுதந்திர வெளி குறித்து அக்கறைப்படும் முக்கியமான படைப்பு இது.



2 Comments

  1. அருமையான பதிவு,, வாழ்த்துக்கள் 🙏 🇨🇭 🙏

    ReplyDelete

Post a Comment

Previous Post Next Post