.

ஒரு வியாபாரி தனக்கு பயணம் செய்ய ஒட்டகம் ஒன்று வாங்கி வர சந்தைக்கு ப் போனான். ஒட்டக வியாபாரியிடம் அப்படி இப்படி என பேரம் பேசி நல்ல விலைக்கு ஒட்டகத்தை வாங்கிக் கொண்டு ஒட்டி வந்தான். ஒட்டகம் வாங்கிய வியாபாரிக்கோ மகிழ்ச்சி. நியாயமான விலையில் நல்ல தரமான ஒட்டகம் கிடைத்தது என்று.

வீட்டுக்கு வந்ததும் தன் வேலையாளைஅழைத்து ஒட்டகத்தை கொட்டிலில் அடைக்கச் சொன்னான்.அதற்கு முன்பாக ஓட்டகத்தின் மேலிருந்த சேணத்தை அவிழ்க்க முயற்சித்தான். அவனால் முடியவில்லை. தன் வேலையாளை அழைத்து ஒட்டகத்தின் சேணத்தை அவிழ்க்கச் சொன்னான். ஒட்டகத்தின் மீதிருந்த சேணத்தை அவிழ்த்த வேலையாள், பொத் என ஏதோ கீழே விழுவதைக் கண்டு எடுத்துப் பார்த்தான்.

அது ஒரு சிறிய பொக்கிஷப் பை.உள்ளே பிரித்தால், ஆச்சரியத்தால் அவன் கண்கள் விரிந்தது. விலை மதிப்பற்ற நவரத்தின கற்கள்.தகதகவென மின்னியது. அதை எடுத்துக் கொண்டு முதலாளியிடம் ஓடி வந்து அதைக் காண்பித்தான்.உடனே வியாபாரி, அந்த பையை இப்படிக்கொடு, உடனே அந்த ஒட்டக வியாபாரியிடம் கொடுக்கணும்னு சொல்லி புறப்பட்டான்.

பணியாளோ, ஐயா இது யாருக்கும் தெரியப் போவதில்லை. இறைவனின் பரிசு. தாமே வைத்துக் கொண்டால் என்ன? தாங்கள் அதிகமாக வைத்துக் கொண்டு எனக்கு கொஞ்சமாகக் கொடுங்கள் என மிகவும் வற்புறுத்தினான்.வியாபாரியோ ஒத்துக் கொள்ளாமல் ஒட்டக வியாபாரியைப் பார்த்து ஒப்படைக்க புறப்பட்டுப் போனான்.


ஒட்டக வியாபாரியிடம் சேணத்தை அவிழ்த்த போது கிடைத்த பொக்கிஷப் பையை கொடுத்ததும் நன்றியோடு வாங்கிக் கொண்டவன்,அந்த பொக்கிஷப் பையை வியாபாரியிடம் கொடுத்து, உங்கள் நேர்மையை தான் பெரிதும் மெச்சுகிறேன். தங்களுக்கு ஏதேனும் பரிசளிக்க விரும்புகிறேன். இதிலிருந்து உங்களுக்கு பிடித்தமான கற்கள் சிலவற்றை எடுத்து கொள்ளுங்கள் என்று நீட்டினான். அதற்கு அந்த வியாபாரியோ சிரித்துக் கொண்டே உங்களிடம் இந்த பொக்கிஷத்தை தரும் முன்பே இரண்டு விலையுயர்ந்த ரத்தினங்களை நான் எடுத்து வைத்துக் கொண்டேன் என்றான். உடனே ஒட்டக வியாபாரியோ கற்களை எண்ணிப் பார்க்க எதுவுமே குறையவில்லை. சரியாக இருந்தது கண்டு குழம்பினான்.

உடனே அந்த வியாபாரி நான் சொன்ன இரண்டு ரத்தினங்கள்.

  1. எனது நேர்மை
  2. எனது சுயமரியாதை என்றான் 

கம்பீரமாக.

சிறிது கர்வமாகக் கூட நேர்மையாளனாக வாழ்வது பெரிய விஷயமல்ல. 

தவறு செய்யக்கூடிய சந்தர்ப்பமும்,வாய்ப்பும் வாய்த்தாலும் நேர்மையாக வாழ வேண்டும்.

வாழ்வில் ஒருநாள் நேர்மையையாய் வாழ்ந்து பார்த்தால் அதன் ருசி உணர்ந்துவிட்டால், தாம் எதற்காகவும் நேர்மையை இழக்க மாட்டோம். நேர்மை கூட ஒரு போதைதான்,அதை அனுபவித்துவிட்டால், அதற்கு அடிமையாகி அதிலிருந்து மீண்டு வர முடியாது. ஆனால் மன நிம்மதி கிடைக்கும்.



Post a Comment

Previous Post Next Post