.

எய்ட்ஸ் பல நோய்களின் கூட்டுத் தொகுப்பாகும். இது மனித உயிர்களைக் காவுகொள்ளும் உயிர்கொல்லி நோயாகும். இந்நோய் ஏற்பட்டுவிட்டால் குணப்படுத்த சிகிச்சை எதுவும் கிடையாது. ஆனால் ஏ.ஆர்.டி. கூட்டு மருந்து சிகிச்சை மூலம் வாழ்நாளை நீடிக்கச் செய்யலாம். இந்த உயிர் கொல்லி நோயைப் பற்றி அனைவரும் மிகத் தெளிவாக புரிந்துகொள்ள வேண்டியது அவசியமாகும்.

எய்ட்ஸ் (AIDS) என்ற சொல்லின் பொருள்,A - Acquired ஒரு மனிதனிடமிருந்து மற்றொருவர் பெற்றுகொள்வது, I - Immune உடலின் எதிர்ப்பு சக்தி, D - Deficiency குறைத்துவிடுதல்,S - Syndrome என பல நோய்களின் கூட்டுத் தொகுப்பென குறிப்பிடப்படுகிறது.

மனித நோய்த்தடுப்பு குறைபாட்டு வைரஸால் எயிட்ஸ் நோய்த் தாக்கம் ஏற்பட்டு உடலின் நோய்த் தடுப்பு மண்டல உயிரணுக்களை சிதைக்கிறது. எச்.ஐ.வி. தொற்றுக்குள்ளானவர்களுடன் உடலுறவு கொள்வதாலேயே பொதுவாக எய்ட்ஸ் உண்டாகிறது.

எச்.ஐ.வி. தோற்றம் பற்றி பல கோட்பாடுகளை வைத்திருக்கின்றனர். ஆனால் எதுவும் நிரூபிக்கப்படவில்லை. ஹங்கோ மக்கள் நாயக குடியரசின் கிங் ஷாஷாவில் 1959 ஆம் ஆண்டு சேகரிக்கப்பட்ட ஒருவரின் இரத்த மாதிரியில் இந்நோய் முதன்முதலில் கண்டுபிடிக்கப்பட்டது. மேலும் 1981 ஆம் ஆண்டு லொஸ் ஏஞ்சல்ஸ் மற்றும் நியூயோர்க்கில் உள்ள ஆண் ஓரினச் சேர்க்கையாளர்களின் மத்தியில் ஒரு அரிய வகையான நிமோனியா, புற்றுநோய் தோன்றுவதை வைத்தியர்கள் கண்டறிந்தனர்.ஆனால் ஆரோக் கியமான நோய்த்தடுப்புள்ளவர்களிடம் இந்நோய் கண்டறியப் படவில்லையென ஆய்வுகள் தெரிவிக்கின்றன.

இலங்கையில் 1986 ஆம் ஆண்டு முதலாவது எச்.ஐ.வி. தொற்றுடையவர் அடையாளம் காணப்பட்டார். 2020 ஆம் ஆண்டு இரண்டாம் காலாண்டு பகுதியில் முன்னெடுக்கப்பட்ட பரிசோதனைகளை அடிப்படையாகக் கொண்ட தரவுகளுக்கமைய 15 வயது தொடக்கம் 24 வயதுடைய இளம் தலைமு
றையினர் மத்தியில் எச்.ஐ.வி. வைரஸ் தொற்று அதிகரித்து வருவதைக் கண்டறிந்தனர். இதற்குக் காரணம் இளம் தலைமுறையினர் மத்தியில் பாலியல் நோய் தொடர்பில் முழுமையான தெளிவின்மையாகும். இருந்தும் எமது நாட்டின் சுகாதார நிலை மேம்பட்டிருப்பதனாலும் சுகாதார அறிவு பரவலாக உள்ளமையினாலும் ஆரம்பகாலம் தொட்டு எச்.ஐ.வி. குறைந்த மட்டத்திலேயே இருந்து வருகின்றது. ஆயினும் புதிய தொற்றாளர்கள் கண்ட றியப்படுவதனால், பல நாடுகளுடன் ஒப்பிடுகையில் எச்.ஐ.வி. தொற்றியுள்ளவர்கள் இலங்கையில் குறைவாகவே உள்ளனர். எனினும் வருடாவருடம் இனங்காணப்படுகின்றவர்களின் எண்ணிக்கையில் சிறியளவில் அதிகரிப்பு இருக்கின்றமையால் தொற்று பற்றி நாம் மிகவும் அவதானமாக இருக்க வேண்டும்.

இலங்கை முழுவதிலுமுள்ள 42 எச்.ஐ.வி.மருத்துவ முகாம்களில் 2,350 தொற்றாளர்கள் சிகிச்சை பெற்று வருகின்றனர். எனினும் நாடளாவிய ரீதியில் 4,686 வரையான எச்.ஐ.வி. தொற்றாளர்கள் இருக்கக்கூடுமென கணிப்பிடப்பட் டுள்ளது. இந்த வைரஸ் தொற்றுக்குள்ளானவர்களுள் பெண்களைவிட ஆண்களின் எண்ணிக்கை அதிகரித்த நிலையிலுள்ளது. இதற்கு முறையான சிகிச்சையினை பெற்றுக்கொள்வதன் மூலம் எச்.ஐ.வி. தொற்றுக்குள்ளாவதை தவிர்க்க முடியும்.

இவ்வாண்டில் அக்டோபர் மாதம் இறுதிக்காலம் வரை 350 எச்.ஐ.வி. தொற்றாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளனர். இவ்வாறு அடையாளம் காணப்பட்டவர்களில் 15 முதல் 30 வயதிற்கு இடைப்பட்ட 52 இளைஞர், யுவதிகள் அடங்குகின்றனர். இலங்கையில் இதுவரையான காலம் வரை எய்ட்ஸ் தொற்றுக்குள்ளானவர்களில் 617 பேர் உயிரிழந்துள்ளதாக தேசிய பாலியல் நோய் மற்றும் எய்ட்ஸ் ஒழிப்புத் திட்டத்தின் அறிக்கையில் தெரி விக்கப்பட்டுள்ளது.


எதிர்வரும் காலங்களில் தொற்றாளர்களின் எண்ணிக்கை மேலும் அதிகரிப்பதற்கான வாய்ப்புகள் உள்ளதாக தேசிய பாலியல் நோய் மற்றும் எய்ட்ஸ் ஒழிப்புத் திட்டத்தின் பணிப்பாளர் வைத்தியர் ரசாஞ்சலி ஹெட்டியாராச்சி தெரிவித்துள்ளார். கொழும்பு,கம்பஹா மற்றும் கண்டி ஆகிய மாவட்டங்களில் இந்த வைரஸ் தொற்று அதிகளவில் காணப்படுவ தாகவும் அவர் மேலும் குறிப்பிட்டுள்ளார். 2025 ஆம் ஆண்டுக்குள் இலங்கையில் எய்ட்ஸ் தொற்றை இல்லாதொழிக்க திட்டம் வகுக்கப்பட்டுள்ளது. இதுவே பிரதான இலக்காகும்.

எய்ட்ஸ் நோய்க்கான காரணம்
எச்.ஐ.வி. கிருமி மனித உடலில் புகுந்து விட்டால் அந்த உடல் இயல்பாக பெற்றிருக்கும் நோய் எதிர்ப்பு சக்தியை முழுமையாக அழித்துவிடுகிறது. அதனால் நோய் எதிர்ப்பாற்றல் இல்லாதுபோய் காசநோய், புற்றுநோய், மூளைக்காய்ச்சல், கட்டுப்படாத வயிற்றுப்போக்கு போன்ற பல நோய்களுக்காளாகி மரணத்திற்கு தள்ளப்படுகிறார்.

பரவும் விதம்
உடலிலுள்ள இரத்தம், ஆண் விந்து, பெண் உறுப்புத் திரவம் மற்றும் இந்நோயினால் பாதிக்கப்பட்டவரின் தாய்ப்பால் போன்ற இடங்களில் எய்ட்ஸ் நோய்க்கான கிருமி அதிகமாக வாழ்கின்றது.இதன் மூலமும் உடலுறவு கொள்ளும் இருவரில் யாரேனும் ஒருவர் எச்.ஐ.வி. தொற்றுக்குள்ளானவருக்கு பயன்படுத்திய மருந்தூசியை பயன்படுத்துவதாலும் சரியாக சுத்தம் செய்யப்படாத ஊசியை மற்றவருக்கு பயன்படுத்தும்போதும் இரத்தம் செலுத்துவதாலும் தொற்று பரவுகிறது. மேலும் இவ்வைரஸ் உள்ள தாயிடமிருந்து கருவிலுள்ள குழந்தைக்கு எச்.ஐ.வி. தொற்று ஏற்பட்டால் அதற் கான சிகிச்சையும் மருந்தும் கிடையாது.

பிரதானமாக பாலுறவின் போதே இந்தக் கிருமி,தொற்றுள்ளவரிடமிருந்து சுகதேகிக்குச் செல்கிறது.இரத்த தானம், தாய்ப்பாலூட்டல் என்பவற்றின் மூலமும் தொற்றலாம். ஊசிகளை மருந்தேற்றுபவர்கள் பகிர்ந்து கொள்ளும்போதும் தொற்று ஏற்படலாம்.தாம்பத்திய உறவின்போது மாத்தி ரமன்றி குதவழி உறவு, வாய்வழி பாலுறவு என்பவற்றாலும் நோய்த்தொற்று ஏற்படலாம், எச்.ஐ.வி. தொற்று ஏற்பட்டவரின் பாலுறுப்பில் எதுவித மாற்றமும் தெரிவதில்லை. தொற்று ஏற்பட்ட ஒருவர், நோயாளியாக மாறும் வரையிலான காலப்பகுதியில், சுகதேகியாக இருப்பினும் எச்.ஐ.வி. கிருமியை பிறருக்குத் தொற்றவைப்பார். இது அவருக்கோ, அவரோடு உறவு வைத்துள்ளவருக்கோ தெரியாதிருக்கும். இதுவே,ஆபத்தான காலம். சாதாரணமாக நோய் அரும்பு காலம் சில மாதங்களிலிருந்து பல வருடங்கள் வரை செல்லலாம். 

எய்ட்ஸ் நோய் வெளிக்கண்ட பின்னர் பலவித மான தொற்று நோய்களால் பீடித்திருப்பதால், ஒருசில மாதங்களிலேயே எச்.ஐ.வி. தொற்றுள்ளவர்கள் இறந்துவிடுவார்கள் என்பதால், இவர்களிடமிருந்து பாலுறவு எச்.ஐ.வி. தொற்றுவது குறைவாகும். தற்போது, எச்.ஐ.வி. தொற்று பற்றிய விழிப்புணர்வு சமூகத்தில் பரவலாக ஏற்பட்டுள்ளமையால் பிற வழிகளில் தொற்றுவதும் குறைவாகும்.இலங்கையில் முடக்கநிலை காணப்பட்ட சந்தர்ப்பத்தில், கல்வி நடவடிக்கைகள் இணைய வழியாக நடத்தப்பட்டபோது, மாணவர்களில் ஒரு பிரிவினர்,இணையத்தின் ஊடாக பாலியல் சார்ந்த காணொளிகளை பார்வையிட்டமையும் இதற்கான காரணமாகும். அதுமாத்திரமன்றி ஸ்பா நிலையங்களின் எண்ணிக்கை தற்போது அதிகரித்துள்ளதும் ஒரு காரணமாகும்.மாணவர்கள் கல்வி நடவடிக்கைகளுக்கு அப்பாற் சென்று, தேவையற்ற காணொளிகளை பார்வையிட்டு, அதற்கு அடிமையாகுகின்றனர். சமூக வலைத்தளங்களின் ஊடாக, பாதுகாப்பற்ற விதத்திலான உடலுறவு கொள்வதற்கு இளைஞர்களை சிலர் ஈடுபடுத்திக் கொள்கின்றனர்.

அறிகுறிகள்
எய்ட்ஸ் நோயின் முதல் அறிகுறியாக நச்சுக் காய்ச்சல் அல்லது சுரப்பிகளின் வீக்கம் இருக்கும்.ஆனால், சில சமயங்களில் எந்த அறிகுறிகளும் இல்லாதிருக்கும். இரண்டு அல்லது மூன்று மாதங்களுக்குப் பின்னரே அதன் அறிகுறிகள் தோன்றும்.பொதுவாக, இரத்தப் பரிசோதனைகள் மூலம் நோய் கண்டறிதல் உறுதிப்படுத்தப்படுகின்றது. எய்ட்ஸ் நோய்க்கு முக்கியமான மூன்று அறிகுறிகளுண்டு.அதாவது, குறுகியகால அறிகுறிகள், மருத்துவ செயலற்ற நிலை மற்றும் கடும் அறிகுறிகள் என்பன காணப்படும். எய்ட்ஸ் நோயை குணப்படுத்த முடியாது. ஆனால், எச்.ஐ.வி. தொற்றை எதிர்க்கவும் கட்டுப்படுத்தவும் பல மருந்துகள் உள்ளன.

குறுகியகால அறிகுறிகள்
எச்.ஐ.வி. வைரஸ் உடலுக்குள் புகுந்து ஓரிரு மாதங்களில் பெரும்பாலானோருக்கு நச்சுக் காய்ச்சல் நோய் உண்டாகும். அதன் முதல் நிலை அல்லது குறும் எச்.ஐ.வி. தொற்றென அழைக்கப்படுகிறது. தலைவலி, காய்ச்சல், தொண்டைவலி, தசைவலி,சொறி, வாய் அல்லது பிறப்புறுப்புகளில் புண்கள்,வீங்கிய நிணநீர்ச் சுரப்பிகள், மூட்டுவலி, வயிற்றுப் போக்கு, இரவு நோரங்களில் வியர்வை போன்ற அறிகுறிகள் காணப்படும்.

மருத்துவச் செயலற்ற நிலை
மருத்துவச் செயலற்ற நிலையில் தொடர்ந்து நிணநீர்ச் சுரப்பிகள் வீங்கியிருக்கும். வேறு குறிப்பான அறிகுறிகள் எதுவும் இருக்காது. எனினும் உடலுக்குள் தொற்று இருந்துகொண்டே இருக்கும்.

கடும் அறிகுறிகள்
தலைவலி, மங்கிய சிதைந்த பார்வை, இருமல் மற்றும் மூக்கடைப்பு, நாக்கில் அல்லது வாயில் நிரந்தர வெண்புள்ளிகள் அல்லது அசாதாரண புண்கள், நனைக்குமளவு இரவு நேரங்களில் வியர்வை,நடுக்கம், குளிர் அல்லது பல வாரங்களுக்கு கடுமையான காய்ச்சல், நீடித்த வயிற்றுப்போக்கு, குமட்டல், தொடர்ந்து இனம்புரியாத களைப்பு, எடையிழப்பு,தோலில் சொறிகள், அக்குள், கழுத்து ஆகிய இடங்களில் நெறிகட்டுதல் போன்ற அறிகுறிகள் தோன்றும்.

எச்.ஐ.வி. தொற்று நீண்ட நோயரும்பு காலத்தின் பின்னரே, எய்ட்ஸ் நோயாக வெளிப்படும். இவர்களில் தோற்றொற்று, நிமோனியா, காசநோய், வயிற்றோட்டம் என பல்வேறு தொற்றுகளும் அடிக்கடி ஏற்படும். தொற்று நோய்கள் உடலில் நோய் எதிர்ப்புச்சக்தி இல்லாமையால் குணமாகமாட்டாது.
விரைவிலேயே மரணத்தை ஏற்படுத்தும்.

எய்ட்ஸ் நோய் வராமல் தடுப்பது எப்படி?
ஒருவனுக்கு ஒருத்தி என்ற சித்தாந்தத்தில் வாழ்வது, தகாத உடலுறவு கொள்வதை தவிர்ப்பது, தொற்று நீக்கம் செய்யப்பட்ட ஊசி மற்றும் ஊசி குழல்களை பயன்படுத்துதல், இரத்த தானம் பெறும்போது எய்ட்ஸ் பரிசோதனை செய்யப்பட்ட இரத்தத்தை தானமாகப் பெறுவது, எச்.ஐ.வி. தொற்று ஏற்படுவதைத் தடுக்க சமூக மட்டத்தில், குறிப்பாக இளைய தலைமுறையினருக்கு இந்நோய் பற்றிய விழிப்புணர்வை ஏற்படுத்தி இந்நோய்க்கு உறுதியான மருந்து கண்டுபிடிக்கப்படவில்லை என்பதையும் எச்.ஐ.வி. தொற்றைத் தடுக்க, தடுப்பு மருந்து இல்லை என்பதையும் இத் தொற்று ஏற்பட்டால் மரணம் நிச்சயம் என்பதையும் எடுத்துரைக்க வேண்டும்.

மேலும் நோய் தொற்றும் முறைகள் பற்றியும் தொற்றைத் தவிர்க்க எடுக்க வேண்டிய பாதுகாப்பு நடவடிக்கைகள் பற்றியும் தெளிவுபடுத்த வேண்டும். நம்பிக்கைக்குரிய ஒருவருடன் மட்டுமே தாம்பத்திய உறவு வைத்துக்கொள்வதை உறுதிப்படுத்த வேண்டும். வேறு உறவுகளைத் தவிர்க்க முடியாதபோது,பாதுகாப்பான தாம்பத்திய உறவு (ஆணுறை அணிந்து) கொள்ள வேண்டுமென்பதை வலியுறுத்த வேண்டும்.

ஊசிகள் மூலமோ, இரத்ததானம் மூலமோ தொற்றாத அளவுக்கு நாட்டில் சுகாதாரத் திணைக்களம் நடவடிக்கை மேற்கொண்டுள்ளது. இரத்ததானம் பெற முன்னர், குருதியில் எச்.ஐ.வி. தொற்று இல்லை என்பதை உறுதிப்படுத்திய பின்னரே இரத்தம் பெறப்படுகின்றது. ஊசிகளைப் பொறுத்தவரையில் ஒரு தடவை பாவித்துவிட்டு வீசும் ஊசிகளே பாவிக்க ப்படுகின்றன.எனினும் இது பற்றிய அறிவூட்டல் அனைவருக்கும் அவசியம்.

எச்.ஐ.வி. தொற்றாளர் குழந்தை பெறாமல் இருப்பது சிறந்தது. கருத்தரிக்கும் பட்சத்தில் உரிய கண்காணிப்புடன் பிரசவ காலம் வரை மருத்துவக் கண்காணிப்பில் இருக்க வேண்டும். கருவிலுள்ள போதோ, பிரசவத்தின் போதோ தொற்று ஏற்படும் சாத்தியமுண்டு. பிறந்த குழந்தைக்கு எச்.ஐ.வி.தொற்றுள்ள தாய்மார் பாலூட்டக் கூடாது. பாலின் ஊடாகவும் எச்.ஐ.வி. கிருமி தொற்றலாம் என்பதை எடுத்துரைக்க வேண்டும்.

எச்.ஐ.வி. தொற்றாளர் சமூகத்திற்கு தெரியவந்தால் ஒதுக்கப்படுவோம் என எண்ணி பலர் முறையான பரிசோதனைகளை முன்னெடுப்பதில்லை. இது முற்றிலும் தவறானதாகும். முதலில் அவ்வாறான குறுகிய மனநிலையிலிருந்து வெளிவர வேண்டும். பாதுகாப்பற்ற பாலியல் உறவுகளில் ஈடுபட்டிருப்பின் நிச்சயம் எச்.ஐ.வி. பரிசோதனைகளை செய்துகொள்வது அவசியமாகும். தொற்று நோய்கள் தீவிரமடைவதற்கு பிரதான காரணமாக அமைவது கவனயீனமாகும்.

எய்ட்ஸ் நோய் வராமல் தடுக்க தடுப்பூசி கிடையாது. எனவே, ஒவ்வொருவரும் பொறுப்புணர்ச்சியுடன் நடந்து, எய்ட்ஸ் நோயிலிருந்து தங்களையும் பாதுகாத்து, பிறருக்கும் பாதுகாப்பு வழிமுறைகளை எடுத்துச் சொல்லி எய்ட்ஸ் மனித சமுதாயத்திற்கு தந்துள்ள சவாலை எதிர்கொள்ள வேண்டும்.

உலகில் பரவுகின்ற எச்.ஐ.வி. தொற்று, பெரும்பாலும் பாலுறவினாலேயே ஏற்படுகின்றது என்பதால் ஒவ்வொரு வருடமும் டிசம்பர் மாதம் 1 ஆம் திகதி உலக எய்ட்ஸ் தினம் கொண்டாடப்பட்டு வருகின்றது. இந்நோயிலிருந்து பாதுகாப்பு பெற்றுக்கொள்ளவும் எய்ட்ஸ் இல்லாத நாடாக இலங்கையை மாற்றிட கட்டுப்பாடான, பாதுகாப்பான உறவே சிறந்தது.

Post a Comment

Previous Post Next Post