.

மனிதனுடைய வாழ்க்கை அவன் வாழ்கின்ற சூழலைப் பொறுத்து தீர்மானிக்கப்படுகிறது.நல்ல சூழல் ஒரு மனிதனை மனித னாக்குகிறது. அதே சமயம் மாசடைந்த சூழல் மனிதனை நோயாளியாகவும் மன அழுத்தம் மிக்கவனாகவும் மாற்றுகிறது. மனிதன் தான் வாழும் சூழலை பாதுகாத்து வாழும்போது அச்சூழல் அழகாவதோடு அவனுடைய வாழ்க்கையும் அழகாக இருக்கும் என்பது தான் நிதர்சனமான உண்மையாகும்.

இயற்கையின் படைப்பு எவ்வளவு அழகானது.இவற்றை காப்பது எம் தலையாய கடமையாகும்.நாம் வாழும் பூமி இன்றைக்கு 400 மில்லியன் வருடங்களுக்கு முன் உருவாகியதாக சொல்லப்படுகிறது. பால் வெளியில் ஏற்பட்ட பெருவெடிப்பினால் பூமி போன்ற பல கோள்கள் உருவாகியதாகவும் சொல்லப்படுகிறது.

நீர், காற்று, ஆகாயம், நிலம், தீ என்ற பஞ்சபூதங்களால் உருவா க்கப்பட்டது இப்பூமியாகும். இங்கு காடுகள், பாலைவனங்கள்,சதுப்பு நிலங்கள், மலைகள், சமுத்திரங்கள். பயிர்நிலங்கள் என பல வகையான சூழல்கள் காணப்படுகின்றன. தரைச்சூழல் மனிதர்கள் வாழவும் தாவரங்கள் வளரவும் ஆதாரமாய் உள்ளது. காட்டுச்சூழல் விலங்குகளுக்கும்,பறவைகளுக்கும் ஏனைய உயிரினங்களுக்கும் வாழ்விடமாயுள்ளது.

காடுகள் சுவாசிக்க ஒட்சிசனையும் வளிமண்டலத்திற்கு நீராவியையும் தந்து மழையையும் தருகிறது. சூழல் சரியாக இயங்குவதினால் நீரியல் வட்டம், உணவு வட்டம், காபன் வட்டம் என பல சூழல் சமநிலை செயற்பாடுகள் சீராக இயங்கி கொண்டி ருக்கின்றன. பூமியில் இடம்பெறும் ஒவ்வொரு இயக்கமும் இவ் வியற்கைச் சூழலை சார்ந்தே இடம்பெறும்.

சூரியன் மிகப்பெரிய சக்தியாக இருக்கிறது. இதன் மோசமான வெப்பக்கதிர்களில்இருந்து வளிமண்டலம் எம்மை பாதுகாக்கிறது. இங்குள்ள ஓசோன் படை, தீய கதிர்வீச்சுக்களில் இருந்து பூமியை பாதுகாக்கின்றது.அதனையும் தாண்டி வரும் கடும் வெப்பத்தை சமுத்திரங்கள் தடுக்கின்றன. காற்றுக்களை தரையை நோக்கி வீச செய்வதனால் பூமிபாலைவனமாகவும் பனிகாடாகவோ மாறாமல் சமுத்திரங்கள் பாதுகாக்கின்றன.

நாம் உண்ணும் உணவு, உடை, வீடு, காற்று போன்றவற்றை சூழலே தருகின்றது, மரங்கள் இல்லாத பாலைவனங்களின் வாழ்க்கை எவ்வாறு இருக்கும் என்று கற்பனை செய்து பார்த்தால் இயற்கை சூழலின் முக்கியத்துவம் புலனாகும். சூழல் ஏன் முக்கியமானது என்று கேட்டால் ஒரு போர்வீரனை அவனது கவசம் எவ்வாறு பாதுகாக்கின்றதோ அதுபோன்று எம்மையும் இவ்வுலகத்தையும் இயற்கைச் சூழல் பாதுகாக்கிறது. மனித வாழ்க்கை நிலைத்திருக்க வேண்டுமாயின் சூழலை பாதுகாப்பது மிகவும் அவசியமானதாகும்.

ஓசோன் அடுக்கு பூமிக்கு ஒரு குடை போன்று இருந்து நம்மை காக்கிறது. உயிர்களின் மரபுக்கூறான DNA வைப் பிளக்கும் வலிமை கதிர்வீச்சுக்குண்டு. மனிதர்களின் பேராசையால் சுற்றுச்சூழல் பாதிக்கப்பட்டு,கமழி அடுக்கில் ஒட்டைகள் இருப்பது கண்டு பிடிக்கப்பட்டுள்ளது. இதனால் இன்னும் 50 ஆண்டுகளில் சுமார் 2 இலட்சம் மக்கள் சருமபுற்றுநோய்க்கு உட்படுபவர் என அமெரிக்க சுற்றுச்சூழல் பாதுகாப்பு அமைப்பு எச்சரித்துள்ளது. பனிமலைகள் உருகி கடற்கரை பகுதிகளில் வெள்ளம். பிற பகுதிகளில் வறட்சி மற்றும் வெப்பம் அதிகரித்தல் ஆகியகூடுதலாகும். இதனால் பல்வேறு தொற்றுநோய்கள் ஏற்படுமென நாசா நிபுனர்கள் கூறுகின்றனர்.

ஓசோன் அடுக்கில் ஒரு சதம் இழப்பு ஏற்பட்டால் தோல் புற்றுநோய் பல மடங்கு அதிகரிக்குமென உலக சுகாதார நிறுவனமும் எச்சரி த்துள்ளது. கண்பார்வை இழப்பு வெப்பநிலை அதிகரிப்பால் ஏற்படும் மற்றொரு அபாயகர விளைவாகும்.

ஓசோன் படலத்தை கெடுக்கும் குளோராபுளோரா, கார்பன் வேதியல் பொருட்களை குறைவாக பயன்படுத்தும் தொழில்நுட்பம் உள்ளது. இதைப் புகுத்த அரசுகள் தயாராய் இல்லை. இந்தப் பொருளை தயாரிக்கும் நிறுவனங்களின் இலாப வெறியே இன்று ஓசோன் படலத்தை கெடுக்கிறது. இரசாயனத் தொழிற்சாலைகள் அமில ஆவியை காற்று வெளிக்குள் செலுத்துகின்றன.

வளிமண்டல மாசுகளுடன் நீர்த்துளிகள் சேர்ந்து இரசாயன விளைவுகளை ஏற்படுத்துவதால் அமிலமழை பொழிகிறது. இது தொழில் வளர்ச்சி பெற்ற நாடுகளின் பிரச்சினை என நம்மில் பலரும் நினைத்துக் கொண்டிருக்கிறோம்.இது அவ்வாறில்லை.குறிப்பாக, பெற்றோல்.நிலக்கரியினால் வெளிப்படும் வாயு அமிலம ழைக்கு காரணமாகிறது. இந்த மழையினால் மானிடர்களுக்கு மட்டும் பாதிப்பு ஏற்படுவதில்லை. தாவர, விலங்கினங்கள் எல்லாவற் றுக்குமே பாதிப்புக்கள் ஏற்படும் என்பதை அமில மழையின் ஏற்படும் சுற்று நாம் அறிந்துகொள்ள வேண்டும். ஐரோப்பா வில் கடும் பேரழிவு ஏற்படுவதற்குக் காரணமாக இருந்தது அமிலமழையாகும்.


அமில மழை உருவாகும் செயன்முறை

அது மாத்திரமன்றி, அமில மழையால் மண்ணில் உள்ள பல ஊட்டச் சத்துக்கள் இழக்கப்படுகின்றன. இதனால், மண் மலட்டுத்தன்மை பெறுகிறது. விவசாயம் பெரிதும் பாதிக்கப்படுகிறது. சுற்றுச்சூழல் பாதிப்பால் சுகாதாரம் பாதிக்கப்படுகிறது.

அமிலமழை என்பது சாதாரண மழை போன்றதல்ல. சாதாரண மழைநீரின் கார அமிலநிலை அளவு 5 மற்றும் 6 என்ற அளவில்தான் இருக்கும். ஆனால், அமிலம் கலந்த மழையின் கார அமில் அளவு அதிகமாக இருக்கும்.அமில மழையில் சல்பூரிக் அமிலமும், நைட்ரிக் அமிலமும் அதிகளவில் கலந்திருக்கும்.அதிகமாகக் காற்றை மாசுபடுத்தும் சல்பர்டை ஒக்ஸைடு மற்றும் நைட்ரஜன் ஒக்ஸைடு போன்றவற்றின் தாக்கத்தால் இது உருவாகிறது. சல்பர்டை ஒக்ஸைடு மற்றும் நைட்ரஜன் ஒக்ஸைடும் மழையுடன் கலப்பதாலேயே இம் மழை உண்டாகிறது.

இந்தமழைத்துளிகள் நிலப்பரப்பை அடைவதற்கு முன்பாக காற்றிலுள்ள ஈரப்பதத்துடன் கலந்து, மழையாக மாறும். ஈரப்பதத்துடன் கலக்காமல் இருந்தால் உலர்ந்த வடிவில் மழையுடன் சேர்ந்து வரும். இது முற்றிலும் மாசதாக்கத்தினால்ச் சூழல் பாதிப்புடைந்த மழைப்பொழிவாகக் கருதப்படுகிறது.எரிமலை வெடிப்பின்போது இயற்கையாகவே இம்மழை உண்டாகிறது.

மேலும், வாகனங்களிலிருந்து வெளியாகும் புகை, தொழிற்சாலை புகை மற்றும் மிகப் பழைமையான பொருள்களை எரிப்பதால் ஏற்படும் புகை போன்றவற்றின் மூலமாக இந்த மழை உண்டாகிறது. காற்று மாசுபாட்டை ஒவ்வொருமுறை அதிகரிக்கும்போதும், அமிலம் கலந்த மழையின் விளைவை அதிகரித்துக்கொண்டேயிருக்கிறோம்.

அமிலமழை கிட்டத்தட்ட எல்லாவற்றையும் பாதிக்கிறது. ஆஸ்துமா, ஒவ்வாமை போன்ற சுவாச நோய்களும் இம்பஸிமா என்ற நுரையீரல் நோய், நெஞ்சு சளி, இருமல், கண் எரிச்சல். மயக்கம் ஏற்படக் காரணமாக உள்ளது.தாவரங்கள், மண், மரங்கள், கட்டடங்கள் ஆகியவற்றை நிச்சயமாகப் பாதிக்கும். மரங்களில் உள்ள இலைகளை பட்டுப்போகச் செய்து மரங்கள் மற்றும் வனப்பகுதிகள் அழியநேரிடும். இதன் தாக்கம் அதிகமானால் நீர்நி லைகளில் உள்ள மீன்கள் இறப்பைச் சந்திக்க நேரிடும். கட்டடங்களின் பளபளப்புத் தன்மை நிச்சயம் பாதிக்கும். மண் மற்றும் ஏரிகளில் அமிலம் படியும்.மனிதனால் ஏற்படும் அமிலமழையைத் தடுக்க வாகனங்கள் மற்றும் தொழிற்சாலைகளிலிருந்து வரும் வாயுக்களையும், புகையையும் ஒழுங்குபடுத்த வேண்டும். புகைபடிவ எரிபொருள் களைப் பயன்படுத்துவதைக் கட்டுப்படுத்த வேண்டும். சூரிய மற்றும் காற்று மூலமாக இயங்கும் போகனங்கள் மற்றும் மின்சாரம் ஆகியவற்றில் கவனம் செலுத்த வேண்டும்.

அமில மழையினால் ஏற்பட்ட பாதிப்பு



மேலும், ஒவ்வொரு நபரும் தங்கள் வாகனப் பயன்பாட்டைக் குறைப்பதன் மூலம்அமிலமழை ஏற்படாமல் தடுக்க முடியும். சொந்த வாகனம் தவிர்த்து, பொதுப் போக்குவரத்து, நடைப்பயிற்சி என எமது வாழ்க்கையை மாற்றிக் கொள்ள வேண்டும். மக்கள் மின்சாரம் பயன் படுத்துவதைக் குறைக்க வேண்டும். அதிகமான விழிப்புணர்வை மக்கள் மத்தியில் ஏற்படுத்த வேண்டும்.

இன்று உலகநாடுகள் இயற்கைச் சூழல் அழிவதினால் உலகம் எதிர்கொள்ளும் பிரச்சினைகளின் தீவிரத்தை உணர்ந்தும், உணராதவர்கள் போன்று நடக்கின்றனர். இயற்கையை மனிதன் பாதுகாக்காமல் போனால் மனித குலம் அழியும் நிலையே உருவாகிவிடும். இதனால்  எம் இயல்பு நிலை பாதிக்கப்பட்டு பூமியில் நாம் வாழ்வது பெரும் சவாலாக மாறிவிடும்.எம்மில் ஒரு மாற்றத்தை நாம் ஏற்படுத்தாதவரை இந்தப் பூமியில் மாற்றத்தை நாம் எதிர்பார்க்க முடியாது. முற்பகல் செய்யின் பிற்பகல்விளையும் என்பது போல் சூழலை மாசடையச் செய்ததன் தாக்கத்தை நாம் ஒவ்வொருவரும்  அனுபவித்தே ஆகவேண்டும். இந்த நிலைமை மாற வேண்டுமாயின் மனிதர்கள் மாற வேண்டும் சூழலைப் பாதுகாக்க வேண்டும்.





Post a Comment

Previous Post Next Post