.

ருட்கர் பிரென்மன் எழுதிய மனிதகுலம் நம்பிக்கையூட்டும் வரலாறு என்னும் நூல் அனைத்து வாசகர்களிற்கும் ஏற்றது.அனைவரும் வாசிக்க வேண்டிய புத்தகமாகும்.மனிதர்கள் இயல்பாக சுயநலவாதிகள் என்பதையும்,தங்களின் சொந்த நலனுக்காக எதையும் செய்பவர்கள் என்றே காலங்காலமாக எமக்கு போதிக்கப்பட்டு வந்துள்ளது. இடது சாரிகளிலிருந்து வலதுசாரிகள் வரை, வரலாற்றியலாளர்களிலிருந்து எழுத்தாளர்கள் தத்துவ வியலாளர்கள், உளவியலாளர்கள் வரை அனைவரையும் ஒன்றிணைக்கிற நம்பிக்கை இது.இதன் வேர்கள் மாக்கிய வல்லியிலிருந்து ஹாப்ஸ் வரை,சிக்மண்ட் பிராய்ட்டிலிருந்து டாக்கின்ஸ் வரை மேற்கத்தையச் சிந்தனைக்குள் ஆழமாக ஊடுரு வியுள்ள தத்துவமாகும்.

மனிதகுலம் நூலானது ஐந்து அத்தியாயங்களாக 18 உப தலைப்புக்களிலும் சுவாரஸ்ய மூட்டக் கூடிய உரைநடையிலும் வெளி வந்துள்ளது.இந் நூலை வாசிக்கும்போது உங்களிக்கு எந்த வகையிலும் சலிப்பூட்டாது என்பது நிச்சயமாகும்.

மனித குலம் என்னும் இந்நூல் ஒரு புதிய விவாதத்தை எம்மிடைய தோற்றுவிக்கிறது.அடிப்படையில் மக்கள் நல்லர்கள் என்று அனுமானிப்பது யதார்த்தமானதாகவும் அதே நேரத்தில் புரட்சிக ரமானதாகவும் இருக்கிறது என்ற வாதம்தான் அது,மற்றவர்களோடு போட்டியிடுவதற்கு பதிலாக அவர்களோடு ஒத்துழை ப்பதற்கும் அவர்களைச் சந்தேகிப்பதற்கு பதிலாக அவர்களை நம்புவதற்கும் நமக்கு ஏற்படுகின்ற உள்ளுணர்வு பரிணாம ரீதியாக உருவான ஒன்றாகும்.மற்றவர்களைப் பற்றி மோசமாக நினைப்பது நாம் அவர்களை எவ்வாறு பார்க்கிறோம் என்பதன்மீது மட்டுமல்லாமல், நம்முடைய அரசியல்மீதும் பொருளாதாரத்தின் மீதும் தாக்கம் ஏற்படுத்துகிறது.

மனிதர்களின் உள்ளார்ந்த நற்குணம் மற்றும் இயல்பான கண்ணியத்தின் மீதான அசாதாரணமான ஆணித்தரமான நம்பிக்கை பிரகடனமாக இந்நுலை எடுத்துக் கொள்ளலாம்.நாம் பேராசை கொண்ட காட்டு மிராண்டித்தனமான எல்லவாற்றையும் அடித்துச் சாப்பிடுகிற விலங்கு அல்ல என்பதை ஆணித்தனமாகவும் நம்பக் கூடிய விதத்திலும் இந்நூல் வெளிப்படுத்துகிறது.ஒரு மேம்பட்ட சமுதாயத்தைக் கட்டியெழுப்புவதற்காக நாம் ஒவ்வொருவரும் மற்றவர்களிடம் கனிவாகவும் மற்றவர்களோடு இணைந்து பணியாற்றுவதற்கும் பரஸ்பரம் ஒருவரையொருவர் நம்புவதற்கும் தேவையான தத்துவரீதியா மற்றும் வரலாற்று ரீதியான அடித்தளத்தை ருட்கர் பிரெட்மன் இந்நூலில் சொல்கிறார்.

உலகில் மேற்கொள்ளப்பட்டுள்ள பிரபலமான ஆய்வுகளில் சிலவற்றையும் பிரபலமான வரலாற்று நிகழ்வுகளில் சிலவற்றையும் எடுத்து அவற்றை மறு வடிவமைப்புச் செய்து கடந்த இரண்டு இலட்சம் ஆண்டுகால மனிதகுல வரலாற்றைப் பற்றிய ஒரு புதிய கண்ணோட்டத்தை வழங்குகிறார்.இந் நூலானது படிக்கும்போது சில இடங்களில் சேப்பியன்ஸ்,ஹோமோ டியஸ் போன்ற நுல்களைப் படிப்பது போன்ற உணர்வு உங்களிற்கு ஏற்படலாம்.அதிலுள்ள விடயங்களையும் இந்நூல் தொட்டுச் செல்கிறது.

மனித இனத்தின் இரக்க குணத்திலும் தன்னலம் பார்க்காமல் பிறருடைய நலன்மீதும் அக்களை கொள்கின்ற பண்பிலும் நம்பிக்கை கொளவது எவ்வாறு நாம் சிந்திக்கும் விதத்தை மாற்றிய மைக்கும் என்பதையும் அந்த நம்பிக்கை நம்முடைய சமுதாயத்தில் உண்மையான மாற்றத்தை உருவாக்குவதற்கான அடித்தளமாக எவ்வாறு செயல்படும் என்பதையும் பிரெக்மன் இந்நூலில் சுட்டிக் காட்டுகிறார்.

ஒரு மேம்பட்ட சமுதாயத்தைக் கட்டியெழுப்புவதற்காக நாம் ஒவ்வொருவரும் மற்றவர்களிடம் கனிவாக நடந்து கொள்வதற்கும் மற்றவர்களோடு இணைந்து பணியாற்றுவதற்கும் பரஸ்பரம் ஒருவரையொருவர் நம்புவதற்கும் தேவையான தத்துவ ரீதியான மற்றும் வரலாற்றுரீதியான அடித்தளத்தை ருட்கரின் இப்புத்தகம் எமக்கு வழங்குகிறது.மனிதர்களாகிய நாம் அடிப்படையிலேயே மோசமானவர்கள் நம்பத்தகாதவர்கள் என்ற கருத்து எவ்வளவு மோசமானது என்பதை தொளிவான விளக்கங்களுடனும் உண்மைக் கதைகளுடனும் இந்நூல் ஆழமாக அலசுகிறது.

இந்த உலகத்தில் நாம் அடிமைப்பட்டுக் கிடக்கிற மோசமான ஒரு பழக்கம்தான் செய்திகள் என்று விபரிக்கிறது இந்நூல்.செய்திகளை போதை மருந்தாகவும் மலிவான விலையில் பிரமாண்டமான அளவில் நம்முடைய குழந்தைகளிற்கு விநியோகிக்கப்பட்டுக் கொண் டிருக்கிறது என்கிறார் நூலாசிரியர்.செய்திகள் எங்களுடைய மன ஆரோக்கியத்திற்கு தீங்கு விளைவிப்பவை என்று ஆய்வுகள் தெரிவிக்கிறன என்பதுடன் அதற்கான சான்றுகளை தன்னுடைய கண்ணோட்டத்தில் விளக்கியுள்ளார் பிரெக்மன்.

மனித இனத்தைப் பற்றிய தன்னுடைய ஆய்வுகளில் ஹோமோ சேப்பியன்ஸ் மற்றும் ஹோமோ நியான்டர்தாஸ்களைப் பற்றியும் விளக்கியுள்ளார்.அவ்வினம் எவ்வாறு ஒருவர் கூட மீதமில்லாமல் அழிந்தனர் என்பதற்கான காரணங்களைத் தேடுகிறார் நூலாசிரியர். இங்கே அவர் ஏனைய அறிஞர்களின் அனுமானங்களை தன்னுடைய பார்வையிலிருந்து விளக்கியுள்ளார். நியான்டர் தால்களின் அழிவுக்கு நாம் காரணமா என்பதை இந்தப் புத்தகத்திலிருந்து நீங்கள் அறிந்து கொள்ளலாம்.


இன்றுவரை நானூறு இடங்களில் சுமார் மூவாயிரம் ஹோமோ சேப்பியன்ஸ் எலும்புக்கூடுகள் தோண்டியெடுக்கப்பட்டுள்ளன. எம்முடைய இயல்பைப் பற்றித் தெரிந்து கொள்ள அவை உதவி செய்துள்ளன.அந்தளவிற்குப் பழமையானவை அவை.அவற்றை ஆராய்ந்த அறிஞர்கள் எம்முடைய தொல் வரலாற்றுக் காலத்தில் போர்கள் எதுவும் நிகழ்ந்ததற்கான நிரூபணம் எதுவும் தென்பட வில்லை எனத் தெரிவித்துள்ளனர் அதனை இந்நூல் சுட்டிக் காட்டுகிறது.

மிகவும் தேவைப்பட்டாலொழிய மனிதன் ஒருபோதும் நல்ல விடயங்களைச் செய்ய மாட்டான் என்ற மாக்கியவெல்லியின் கூற்றுக்கு இந்நூல் பொருத்தமான ஆவணங்களுடனும் ஆணித் தனமாக தக்க பதிலடி வழங்கியுள்ளது.மனித இயல்பைப் பற்றி அவருடைய சிந்தனை  சரியான சான்றுகளோடு இருப்பதோடு உத்வேக மூட்டுவதாகவுமுள்ளது. கட்டுக்கதை களையும் இந்நூல் உடைத்தெறிகிறது.

கடவுள் பற்றிய கட்டுக்கதைகளை இந்நூல் அழகாக விவரித்துள்ளது.சர்வ வல்லமை வாய்ந்த கடவுளை நாம் எங்கிருந்து பெற்றோம்..?மனிதனின் பாவச் செயல்களைக் கண்டு கோபம் கொள்கிற அந்தக் கடவுளை நாம் எங்கே கண்டெடுத்தோம்...?என்ற கேள்விகளிற்கு விடை சொல்லியுள்ளார் ருட்கர்.நாம் ஆயிரக் கணக்கான அந்நியர்களிற்கு நடுவே பெரிய குழுக்களாக வாழத் தொடங்கியதும் எல்லாம் மாறியது.நாம் ஒருவரையொருவர் பார்க்க முடியாமல் இருந்தோம்.நீங்கள் இலட்சக்கணக்கான மக்களின் கண்களை ஊடுவ எந்த வழியும் இல்லை.எனவே நம்பிக்கையின்மை அதிகரித்தது.மக்கள் சந்தேகிக்கத் தொடங்கினர்.அந்த பெருங் கூட்டத்தை கண்காணிப்பதற்கு ஆட்சியாளர்களிற்கு ஒருவர் தேவைப் பட்டார்.எல்லோர் கூறியதையும் கேட்டுக் கொண்டிருந்த, எல்லாவற்றையும் பார்த்துக் கொண்டிருந்த ஒருவர் அவர்களிற்குத் தேவைப்பட்டார்.அனைத்தையும் கண்காணித்துக் கொண்டிருந்த கண்கள் தேவைப்பட்டன இவ்வாறுதான் கடவுள் தோன்றினார் என்கிறது இந்நூல்.ஏழு நாட்களும் தினமும் இருபத்தி நான்கு மணி நேரமும் ஒவ்வொருவரையும் உளவு பார்த்துக் கொண்டிருக்கிற ஒரு மாபெரும் சக்தி கடவுள்.எல்லாமறிந்த இந்த சக்தி மக்களை கண்காணித்துக் கொண்டும் மேற்பார்வையிட்டுக் கொண்டும் உளவு பார்த்துக் கொண்டும் இருக்கும்.தேவைப்பட்டால் மக்களைத் தாக்கவும் செய்யும் என்று கட்டுக்கதைகளைப் பற்றி விபரிக்கிறது இந் நூல்.

எம்முடைய வாழ்வில் கடைப்பிடிக்க வேண்டிய பத்து விதிமுறைகளை பிரெக்மன் வாசகர்களிற்கு விளக்கியுள்ளார். அவற்றைப் பின்பற்றுமாறு தன்னுடைய வாசகர்களிற்கு அவர் வேண்டுகோள் விடுத்துள்ளார்.அவையாவன

  • சந்தேகம் எழும்போது சிறந்ததையே அனுமானியுங்கள்
  • உனக்கும் வெற்றி எனக்கும் வெற்றி என்ற ரீதியல் சிந்தியுங்கள்.
  • அதிகமான கேள்விகளைக் கேளுங்கள்
  • உங்களுடைய பச்சாதாபத்தைத் தணித்துக் கொள்ளுங்கள், உங்களுடைய இரக்க உணர்வைப் பயிற்றுவியுங்கள்.
  • மற்றவர்களைப் புரிந்து கொள்ள முயற்சி செய்யுங்கள்-அவர்களின் பின்புலம் உங்களக்குப் புரியாவிட்டாலும் கூட.
  • உங்களுடைய நெருக்கமானவர்களிடம் நீங்கள் காட்டும் அன்பை பிறருக்கும் விரிவுபடுத்துங்கள்.
  • செய்திகளைத் தவிர்த்திடுங்கள்.
  • நாஜிக்களைத் தாக்காதீர்கள்
  • மறைவிடத்தை விட்டு வெளியே வாருங்கள்.நல்லது செய்ய வெட்கப்படாதீர்கள்.
  • எதார்த்தமாக இருங்கள்.
மொத்தத்தில் இந்த புத்தகமானது உங்களிற்கு சிறந்த அனுபவத்தைக் கொடுக் கும்.சக மனிதர்களை நீங்கள் பார்க்கும் விதத்தை மாற்றிய மை த்து விடும். உங்களுடைய மனதை விசாலப்படுத்தும். அதைவிட உங்களுடைய இதயத்தை விசாலப்படுத்தும். இதிலுள்ள விடயங்கள் முன்னெப் போதையும் விட இப்போதுதான் எமக்குத் தேவைப்படுகிறது. வாசிப்போம். வாசியுங்கள்.


ஏனைய நூல் விமர்சனங்கள்

கழிவறை இருக்கை

சேப்பியன்ஸ்

மஞ்சள் பிசாசு

21 ம்நூற்றாண்டிற்கான 21 பாடங்கள்

நகைச்சுவைக் கதைகள்

ஹோமோ டியஸ்

ஒரு பொருளாதார அடியாளின் ஒப்புதல் வாக்குமூலம்

புதுக்காட்டுப் பள்ளங்கள்

கௌரவன்

நாகரிகங்களின் மோதல்

டாலர் தேசம்

Post a Comment

Previous Post Next Post