.

சபிக்கப்பட்டு பிறந்த

மனித இனமே

நீ பெண்ணாக பிறந்ததுதான் உன் சாபம்..!

            சொல்கிறேன் கேள்.....!

பேரூந்துப் பயணத்தில் 

இடிப்பார்கள்

தொடுவார்கள்

தடவுவார்கள்

உரசுவார்கள்

நீ பெண் என்பதால்...!


நடைபாதையில் உன் பின்னலகில்

தட்டி விட்டு ஓடுவார்கள்

நீ பெண் என்பதால்....!!


ஒரு நாய்க்குட்டியை

நீ குனிந்து தூக்குவது 

என்றாலும்

கவனமாகக் குனி

சில கண்கள் எதையோ

எட்டிப் பார்க்கும்

நீ பெண் என்பதால்.....!!


காற்று வீசும் போதும்

கவனமாக இரு

ஆடை விலக வாய்ப்புண்டு

அந்தத் தருணத்திற்காய்

ஓநாய்கள் காத்திருப்பதுண்டு

நீ பெண் என்பதால்....!!


உறங்கும் போதும்

ஒரு கண்ணை விழித்திரு

மரணத்தின் ஒத்திகை

நித்திரை எனின் அந்த

தருணத்தில் உன்னை

மரணம் குடித்து மதனம்

செய்யக் காத்திருக்கும்

சில விஸப் பாம்புகள்

நீ பெண் என்பதால்...!!


பொது மலசலகூடத்தில்

சிறுநீர் கழிக்கிறாயா..?

முதலில் எல்லா இடமும்

சுற்றிப்பார்...

இணையத்தள கண்கள் அங்கே

பொருத்தப்பட்டிருக்கும்

நீ பெண் என்பதால்....!!


குழந்தைக்குப் பால் கொடுக்கும்போது

கழுத்தோடு மறைப்பிட்டுக் கொள்

கழுகுகள் கண் எரியும்

திறந்த மார்புகளைக் காண

நீ பெண் என்பதால்...!!


நீ பாடசாலை செல்லும்போது

மழையில் நனைந்து விடாதே

வெள்ளை ஆடை

ஆசிரியரோ நண்பனோ

கண்களை விரித்துப்

பார்க்கக் கூடும்

நீ பெண் என்பதால்...!!


உணர மறுக்கும் 

ஒரு உண்மையைச் சொல்லட்டுமா..?


மாதம் மூன்றுநாள்

அடிவயிறு அலற

உயிரைப் பறித்தெடுக்கும்

வலியைக் கூட

உணர மறுக்கும் ஒரு சில

ஆண்கள் உண்டு அதைவிட

கொடுமை என்ன வென்றால்

அந்த வலியை அசிங்கமாய்ப்

பார்க்கும்

ஆண்களும் உண்டு..


காரணம்

சபிக்கப்பட்டு

பெண்ணாக பிறந்து விட்டதால்....!!


நீ பெண் என்றால் கருவறையிலும்

பாதுகாப்பாக இரு எதற்கோ

அலையும் மனித இனம் இங்கு அதிகம்...!!

பெண்ணின் சாபம்



Post a Comment

Previous Post Next Post